சென்னை, ஜூலை 19- தமிழ்நாடு நாளையொட்டி விடுத்த வலை தளப் பதிவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், “தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தைக் குலைக்க நினைக்கும் எதிரிகளையும், துரோகிகளையும் ஓரணியில் நின்று விரட்டியடிக்க தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம்!” எனச் சூளுரைத்துள்ளார்.
துணை முதலமைச்சர் வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: –“மெட்ராஸ் மாகாணம்” என்றிருந்த நம்முடைய மாநிலத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி.மு.கழக அரசு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாள் இன்று! (18.7.2025)
ஒட்டுமொத்தத் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையை 1967இல் முதன்முதலில் ஆட்சிக்கு வந்த கழக அரசு நிறைவேற்றிய திருநாள். “தமிழ்நாடு” என்று அண்ணா அவர்கள் மும்முறை முழங்க, ‘வாழ்க’ என்ற உறுப்பினர்களின் வாழ்த்து ஒலியால் சட்டமன்றமேஉணர்ச்சிப் பெருக்கால் தத்தளித்தது. “தமிழ்த் தாயின் நெஞ்சங் குளிர்ந்திடத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றி விட்டோம் என்கிற பூரிப்பு எல்லா உறுப்பினர்களின் உள்ளத்திலும்” என்று எழுதினார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.
தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை, அண்ணா கலைஞர் வழிநின்று முறியடித்தார் நமது முதலமைச்சர் நம் தலைவர்கள் போராடி மீட்டுத் தந்த தமிழ்நாட்டின் உரிமைகளை டில்லிக்குக் காவு கொடுக்கக் கிளம்பியிருக்கும் பாசிசத்தின் பல்லாக்குத் தூக்கிகளை வீழ்த்துவோம். தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தைக் குலைக்க நினைக்கும் எதிரிகளையும், துரோகி களையும் ஓரணியில் நின்று விரட்டியடிக்க தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம்! தமிழ் வெல்க! தமிழ்நாடு வாழ்க!!
இவ்வாறு அப்பதிவில் துணை முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.