சென்னை, ஜூலை 19- காமராஜர் குறித்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
ஆலோசனைக் கூட்டம்
மக்களவை கூட்டத்தொடரில், மக்கள் பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்புவது தொடர்பாக, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று (18.7.2025) நடைபெற்றது. இதில், சிறீபெரும்புதூர் மக்களவை தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பாலுவுடன், சிறீபெரும்புதூர் சட்டப்பேரவை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதி சிறீபெரும்புதூர். நாட்டில் அதிகம் ஜிஎஸ்டி வரி செலுத்தும் தொகுதியாகவும் உள்ளது. இங்கு சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்றும், தொகுதி மக்களின் பிரச்சினைகளை ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் மனுவாக பெற்று முதல்வரிடம் கோரிக்கை மனுவாக கொடுத்துள்ளோம். அக்கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
முற்றுப்புள்ளி
காமராஜர் குறித்த விவாதம் முடிந்துவிட்டது. அதற்கு முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது. இந்த விவகாரத்துக்காக திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
இது ‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை’ போன்று உள்ளது. எங்களை பற்றி அண்ணாமலைக்கு ஏன் கவலை? டில்லியில் காமராஜரை வீட்டோடு வைத்து கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் அதற்குப் பிறகு காமராஜருக்கு பிறந்தநாள் விழா எடுப்பது போன்று ஏன் வேடம் போடுகிறார்கள். பாஜக-ஆர்எஸ்எஸ் வேடத்தை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.