‘ஆதியில் ஏற்பட்ட நான்கு ஜாதிகள்’ 4000 ஜாதிகளாகப் பிரிந்தற்குக் காரணம் ஒரு ஜாதியும். மற்றொரு ஜாதியும் மாறி மாறி கலந்ததால் ஏற்பட்டதென்று சொல்லப்பட்டதோடு, அந்த ஜாதிகளே தான் எல்லாப்பஞ்சம ஜாதியுமாகும் என்று பார்ப்பன ஆதாரங்களில் குறித்துள்ள ஜாதி ஆதாரங்களை எடுத்துக் காட்டினோம். அப்படி இருந்தும் இன்னும் நம்மவர்களிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது தங்களை வேளாளர் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் ஒரு சிலர், மேற்படி ஜாதிக் கிரமத்தை அதாவது ஆதிஜாதி என்பவைகளான பிராமணன், சத்திரியன், வைசியன். சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை, ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் சற்’சூத்திரர்’ என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக்கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென் மொழிப்பெயரால் சொல்லிக்கொண்டு அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்காகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்தனவென்றும், அவற்றிலும் தாங்கள் நாலாம் ஜாதி என்று ஒரு கற்பனையைக் கற்பித்துக் கொண்டு, அப்படிப்பட்டவர்களான தங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய அடிமையாய் இருக்க வேறுபல ஜாதிகள் ஏற்பட்டு இருப்பதாகவும், அவர்கள்தான் பள்ளு, பறை பதினெட்டு ஜாதிகள் என்பது என்றும். ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒருவழியில் திருப்தியடைந்து வருகிறார்கள். (இந்த இருவர் கூற்றின் உண்மை எப்படி இருந்தாலும் வட மொழிப்படிப் பார்த்தாலும் சரி. வேளாளர் நாலாவது ஜாதி என்பதை மாத்திரம் இதிலிருந்து அறியக்கிடக்கின்றது.)
அந்தப்படிக் கூறப்படும் பள்ளு, பறை பதினென்குடி மக்கள் என்பவர்களைக் குறிக்கும் முறையில் ‘பணிசெய்யும் பதினெண்வகை ஜாதியார்’ என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால், இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணெய் வாணிகள், ஒச்சன், கல் தத்தன், கன்னான். குயவன், கொல்லன், கோயிற்குடியன், தச்சன், தட்டான், நாவிதன், பள்ளி, பாணன், பூமாலைக்காரன். வண்ணான், வலையன், என்பதாகக் கொண்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. (இது அகராதியில் குறிக்கப்பட்டவையாகும்)
ஆனால் இதே பதினெண் மக்களை ‘அபிதான கோசம்’ என்னும் ஓர் ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படிக் குறித்திருப்பதென்னவெனில், ‘ஏவலாள்களாக சிவிகையர் (இவர்கள் ஆந்திர நாட்டிலிருந்து வந்தவர்களாம்), குயவர், பாணர், மேளக்காரர், பரதவர். செம்படவர், வேடர். வலையர், திமிலர், வறியார், சான்றார், சாலியர், எண்ணெய் வணிகர், அம்பட்டர். வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் என பதினெட்டுப் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன – அப்படிக் குறித்திருப்பதிலும் தமிழ் நாட்டிலுள்ள தெலுங்கரை (ஆந்திரர்களை) குறிப்பிடுவதில் “கம்மவார் என்னும் கவரைகள் எவற்பரிசனங்களாகவும், உப்பமைப்பவர்களாகவும் அனுப்பப்பட்டவர்கள்” என்று குறிக்கப்பட்டிருக்கின்றது.
பிராமணர்கள் விஷயத்தில் எவ்விதமான பாகுபாடும். தாழ்வுக்கிரமமும், சந்தேகமோ, ஆட்சேபனையோ சொல்லுவதற்குச் சிறிதும் இடமில்லாமல் செய்து கொள்ளப் பட்டிருப்பதைக் கவனித்தால் ஜாதியின் சூழ்ச்சித் தத்துவம் நன்றாய் விளங்கும்
இவை ஒரு புறமிருக்க வேளாளர்களிலும் பலபிரிவுகளைக் காட்டி அதில் உயர்வு தாழ்வுகளைக் கற்பிக்கும் வரிசையில் குறிப்பிட்டிருப்பது என்ன வென்றால் ‘சூத்திரருள்ளே வேளாளர் தலையாயினர். அவருள்ளே முதலிகள் தலையாயினர். இவர்களுக்கு அடுத்தபடி வேளாண் செட்டிகள். இவர்கள் சோழபுரத்தார். சித்தக்காட்டார். பஞ்சுக்காரர் முதலிய பல திறப்பட்டவர்கள். இதற்கு அடுத்தபடி யுள்ளோர் சோழிய வேளாளர்; இவர்கள் சைவர்களாவர்கள், சமபந்தி போஜனத்திற்கும் உரியவர்கள். இதற்கடுத்தபடியில் உள்ளவர்கள் சோழிய, துளுவ, கொடிக்கால் முதலிய பலவகை வேளாளர்களாவார்கள். (இவர்கள் மாமிச போஜனம் செய்பவர்கள்) இவரிற் தாழ்ந்தோர் அகம்படியர், அவரிற்றாழ்ந்தோர் மறவர், அவரிற்றாழ்ந்தோர் கள்ளர், அவரிற்றாழ்ந்தோர் இடையர். இவர்கட்கடுத்த படியிலுள்ளோர் கவரைகள், கம்மவர்கள் என இந்தப்படியாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இவற்றுள் எதிலும் ‘பிராமணர்கள்’ விஷயத்தில் எவ்விதமான பாகுபாடும். தாழ்வுக்கிரமமும், சந்தேகமோ, ஆட்சேபனையோ சொல்லுவதற்குச் சிறிதும் இடமில்லாமல் செய்து கொள்ளப்பட்டிருப் பதைக் கவனித்தால் ஜாதியின் சூழ்ச்சித் தத்துவம் நன்றாய் விளங்கும். மற்றப்படி சத்திரியர்களிலும், வைசியர்களிலும் இருக்கும் சண்டைகளிலும் ஆட்சேபனைகளும், சத்திரியர், வைசியர் என்று சொல்லிக்கொள்வதில் எவ்வித உயர்வுத் தத்துவமும் இல்லாமல் ஒருவருக் கொருவர் தங்களில் வீண் வழக்காடிக்கொண்டு பொதுஜனங்களாலும் ஒப்புக் கொள்ளப்படாமல் ஒருவரை யொருவர் இழித்துரைத்து, குறைவு படுத்தி வருவதும் அநேக இடங்களில் பிரத்தியட்சமாய்க் காண்கிறோம். மற்றும் ஒவ்வொரு ஜாதியாரும் தங்கள், தங்கள் ஜாதிகளைப் பற்றிய எவ்வளவு மேன்மை ஆதாரங்கள் கற்பித்துக் கொண்டாலும், கண்டு பிடித்தாலும், எந்த விதத்திலும் பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்களுக்கு மற்றவர்கள் எல்லாரும் கீழ்ப்பட்டவர்கள்தான் என்பதை நிலை நிறுத்துவதற்கு மாத்திரம் அவ்வாதாரங்கள் பயன்படுகின்றனவே தவிர. மற்றப்படி எந்தக்கருத்தைக் கொண்டு கஷ்டப்பட்டு இவ்வித ஆதாரங்கள் கற்பிக்கப்பட்டனவோ. கண்டுபிடிக்கப்பட்டனவோ அவற்றிற்குச் சிறிதும் பயன்படுத்துவதில்லை என்பதையும் பிரத்தியட்சத்தில் பார்க்கிறோம்.
எனவே, இந்த நிலையில் இன்று நமது நாட்டில் பார்ப்பான் ஒருவனைத் தவிர மற்றவர்கள் தாழ்ந்த ஜாதியார்கள், அதாவது பார்ப்பனரைத் தொடவும் சமபந்தி போஜனம் பண்ணவும், மற்றும் சில பொது உரிமைகள் பெறவும் கூடாத ஜாதியார்கள் என்பதும், அவனுக்கு அடிமையாக இருக்கவும், ஒழுக்கம் தவறுதலால், அதாவது ‘விபச்சாரம்’, ‘கீழ்மேல் ஜாதிக்கலப்பு’ என்று சொல்லும்படியான ‘இழிதன்மை’யில் பிறந்தவர்கள் என்பதும், இன்றைய நம் ஜாதித் தத்துவமாயிருக்கின்றதை யாரும் மறுக்க முடியாதென்று உறுதிகூறுவோம்.
மற்றபடி இவற்றிற்கு எவ்விதத் தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை மூடர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக்கொள்ளக் கூடுமே தவிர, ஜாதிக்கும் ஜாதியைக் கற்பித்த மதத்திற்கும் இவ்விரண்டிற்கும் ஆதாரமான வேதம், சாஸ்திரம், தர்மம் என்று சொல்லப்பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும், எவ்வித ஆட்சேபணையும் எவ்விதத் தத்துவார்த்தமும் சொல்ல முடியாது என்பதையும், யாதொரு பதிலும் சொல்லாமல் இழிவை ஒப்புக்கொண்டுதான் தீர வேண்டியதாகும் என்பதையும் கண்டிப்பாய்ச் சொல்லுவோம்.
இவை ஒரு புறமிருக்க, இந்த ஜாதிக்கிரமத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் யோக்கியதைகளையும். உரிமைகளையும் பார்ப்போமானால் கடுகளவும் பகுத்தறிவோ, மானமோ இருக்கின்ற மனி தர்கள் ஒருக்காலமும், தங்கள் ஜாதிப் பேரைச் சொல்லிக்கொள்ள முடியாதபடியும். அதைக் கனவிலும் நினைக்க முடியாதபடியும் இருப்பதை நன்றாய் உணரலாம்.
அதாவது நாலாவது ஜாதியாளர்களாக சூத்திரர்கள் என்று சொல்லப்படுகின்ற வகுப்பாருக்குப் பார்ப்பனர்கள் ஏற்படுத்தியிருக்கும் உரிமையானது எப்படியிருக்கிறதென்று பார்த்தால், இப்போது பாரம்பரியமாய்க் குற்றம் புரியும் வகுப்பான் (அதாவது கிரிமினல் ட்ரைப்ஸ்) என்று சொல்லக்கூடியவர்களுக்கு, சர்க்காரால் ஏற்படுத்தப்பட்ருக்கின்ற நிர்பந்தந்திற்கும், சட்ட திட்டங்களுக்கும், அவர்களை நடத்துகின்ற மாதிரிக்கும் சிறிதுகூட குறைவில்லாமல் நடத்துகின்ற மாதிரியாகவே ஏற்படுத்தியிருக்கின்றார்கள். உதாரணமாக இரண்டொன்றைச் சொல்லுவோம்.
அதுவும் தர்ம சாஸ்திரங்கள் என்று சொல்லப்பட்ட சட்டங்களில் உள்ளதையே சொல்லுவோம்.
“ஸ்நா தமஸ்வம், கஜமத்தம்,
ரிஷபம் காம மோஹிதம்.
சூத்தர மக்ஷர சம்யுக்தம்
தூரதல்பரிவர்ஜ்ஜையேல்.”
அதாவது குளிப்பாட்டிய குதிரையையும், மதங்கொண்ட யானையையும், காமவிகாரத்தைக் கொண்ட காளை மாட்டையும், எழுத்துத் தெரிந்த சூத்திரனையும் பக்கத்தில் சேர்க்கக் கூடாது என்பது கருத்தாகும்.
“ஜபம், ஸ்தப; தீர்த்தயாத்திர
பிரவர்ஜ்ஜப, மந்திர சாதனம்
தேவதாரா தனம் சசய்வஸ்திரீ
சூத்திர பத்தானிஷள் ‘
அதாவது ஜபம், தபசு, தீர்த்தயாத்திரை, சந்நியாசம், கடவுள் தோத்திரம், ஆராதனை இந்தக் காரியங்கள் பெண்களும், சூத்திரர்களும், ஒரு போதும் செய்யக்கூடாது என்பது கருத்தாகும்.
“நபடேல் சமஸ்கிருதம் வாணீம் .”
(சூத்திரன்) சமஸ்கிருதம் படிக்கக் கூடாது என்பது கருத்தாகும்.
“நைவ சமஸ்கிருதம் படே நைவ சுருணுயாட்வை திகாக்ஷரம் நஸ் நாயாதுதயால் பூர்வம் தபோ மந்திரம் கவர்ஜ்ஜயேல்;’ (சூத்திரன்) சாஸ்திரம் படிக்கவோ, வேதத்தைக் கேட்கவோ ஒருக்காலும் கூடாது. அவன் சூரிய உதயத்திற்கு முன் குளிக்கவும், மந்திரம் ஜெபிக்கவும், தபசு செய்யவும் கண்டிப்பாய்க் கூடாது என்பது கருத்தாகும்.
“இதிஹாச புராணானி
நபடேச்ரோது மர்ஹசி’
இதிகாச புராணங்களும்கூட (சூத்திரர்கள்) படிக்ககூடாது. ஆனால் (பிராமணர்கள் படிக்க) காதால் கேட்கலாம்.
“சதுர்வர்னியம்
மயா சிருஷ்டம்
பரிசரியாத் மகம்
கர்மம் சூட்ரஸ் ஸியாபி பாவானம்”
– கீதா ஸ்லோகம்
நான்கு வர்ணங்களும் (ஜாதிகளும்) என்னால் சிருஷ்டிக்கப் பட்டவை. அவற்றுள் சூத்திரனுக்குப் பிராமண சிசு ருஷைதான் தர்மம் என்பது கருத்து.
இதுபோல் ஆயிரக்கணக்காக எழுதிக் கொண்டேபோகலாம். இவைகள் எல்லாம்தான் நமது ஜாதி. மத. ஆச்சார அனுஷ்டானங்களாக இருக்கப்பட வேண்டியவை என்று வேதங்கள்,தர்மசாஸ்திரங்கள். பகவான் வாக்குகள் என்று சொல்லப்படுபவைகளாகும்.
– தொடரும்
(தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை) ‘விடுதலை, 6.9.1950