காசா முனை, ஜூலை 14- பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து, தொடர்ந்து அம்மக்களை நசுக்கி வரும் இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக் கானோர் பணயக் கைதிகளாக சிறை பிடித்துச் செல்லப்பட்டனர்.
58 ஆயிரம் உயிரிழப்பு
இதனை தொடர்ந்து அவர்களை மீட்பதற்காக, காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. இந்நிலையில், 21 மாதங்களாக நடந்து வரும் போரில், காசா பகுதியில் 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்குகும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர். இந்த சூழலில், இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் பலியாகி உள்ளனர்.
தண்ணீர் பிடிக்கச் சென்றவர்கள்
அவர்களில் பலர் தண்ணீர் பிடிக்கச் சென்றவர்கள் என்ற சோகத் தகவல் வெளியாகி உள்ளது. 2 கி.மீ. தூரத்திற்கு நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், தண்ணீர் பிடிப்பதற்காகக் குறிப்பிட்ட பகுதியில் 30-க்கும் மேற்பட்டோர் வரிசையில் காத்திருந்துள்ளனர். அவர்களில் 20 பேர் சிறுவர்கள். 14 பேர் பெரியவர்கள் ஆவர்.
இந்நிலையில், இஸ்ரேல் தரப்பில் இருந்து திடீரென தாக்குதல் நடந்ததும் அவர்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர். எனினும், பலர் தாக்குதலில் பாதிக்கப்பட்டு, அப்படியே தரையில் சாய்ந்தனர். இதில், பலியானவர்களில் 6 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது. அமெரிக்க ஆதரவுடனான போர்நிறுத்தம் பற்றி விவாதித்து வரும் சூழலில், அவற்றுக்கு அடங்காமல் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.