சென்னை, ஜூலை 13– அதிமுக – பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுபற்றி முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
“திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா என்று கேட்கும் போது, ‘அரசின் திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கிறது. அதேசமயம் அ.தி.மு.க. – பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது, கூட்டணியல்ல;
தமிழ்நாட்டை – தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்து, மீண்டும் நூறாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித்திட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்’ என்று தெளிவாக எடுத்துச் சொல்லி ‘ஓரணியில் தமிழ்நாடு’ என இணைகின்றனர் தமிழ்நாட்டு மக்கள். இந்த முன்னெடுப்பைக் கண்காணிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு அமைத்துள்ள ‘வார் ரூம்’ – அய்த் திறந்து வைத்தேன்.
விறுவிறுவென நடைபெற்று வரும் இந்த பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
அதிகபட்சமாக, கரூர் மாவட்ட தி.மு. கழகத்தினர் 41% வாக்காளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து முன்னணி வகிக்கின்றனர். அவர்களை முந்தும் வகையில் பிற மாவட்ட தி.மு. கழகத்தினரும் மும்முரம் காட்டிடக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.