தஞ்சை ஜில்லா சுயமரியாதை மகாநாடு பிறையாறு
தஞ்சை ஜில்லா சுயமரியாதை மகாநாடு பிறையாற்றில் 24, 25 தேதிகளில் கூடியது. மகாநாட்டு வரவேற்புத் தலைவராக பிறையாறு திருவாளர் கனகசபை நாடார் அவர்கள் சகோதரர் திரு. ஐம்புகேசம் அவர்களது விருந்தினர்களாக உபசரிக்கப்பட்டார்கள். தலைவர் திரு. புரொபசர் லஷிமிநரசு அவர்களும் அவர்களது மனைவியாரும் தனி ஜாகையில் இருந்தார்கள். செட்டிமார் நாட்டிலிருந்து சுமார் 10 பெண்மணிகளும் 10, 15 செட்டியார்களும் விஜயம் செய்திருந்தார்கள்.கூட்டம் சுமார் 1500 பேருக்கு மேலாகவே கொட்டகையில் நிறைந்து விட்டது. கூட்டத்தின் முன்னிலையில் பிரசன்னமாய் இருந்தவர்கள் திருவாளர் காரைக்குடி சொ. முருகப்ப,மு.மரகத வல்லி, ராமசுப்ரமணியம், நீலாவதி, அள. அருணாசலம்,
என். வரதராஜன், மு.ராம. சுப்பையா, சு.ப. விசாலாட்சி ப.ஜீவானந்தன், பூவாளூர் நா.சு.மு.செல்வக் கணபதி மனைவி செல்லம்மாள். பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி, குஞ்சிதபாதம்,வரதராஜன், திருஞானசம்பந்தம், திருவாரூர் சாமி. சிதம்பரனார், சௌரிராஜன், கும்பகோணம் சுப்ரமணிய பிள்ளை, மாயவரம் எஸ்.ராமநாதன், எம்.ஏ.பி.எல்., எஸ். சம்பந்தம், சி. நடராஜன்,எஸ்.வி. லிங்கம் ஈ.வெ.இராமசாமியார், ஸ்ரீமதி நாகம்மாள், நன்னிலம், தரங்கம் பாடி, சீர்காழி, தஞ்சை, திருச்சி, காரைக்கால், அருப்புக்கோட்டை, நாகப்பட்டினம் முதலிய இடங்களிலிருந்து சுமார் 1500 பேர்களுக்கு மேல் மகாநாட்டுப் பந்தலில் கூடியிருந்தனர்
நிறைவேறிய தீர்மானங்கள்
(1) திராவிடன் பத்திராதிபர் உயர்திரு மணி திருநாவுக்கரசு முதலியார் அவர்களின் அகால மரணத்தைக் குறித்து அனுதாபம் காட்டுவதாகவும்.
(2) தீண்டாமையும் ஜாதி வித்தியாசமும் ஒழிய வேண்டுமானால் அதற்கு முட்டுக் கட்டையாக இருக்கும் இந்துமதம் என்பது ஒழிக்கப்பட வேண்டி யது மிக்க அவசியமாகுமென்றும்,
(3) மக்கள் சமதர்மமும் உண்மையான சுதந்திரமும் பொது வுடைமைத் தத்துவமும் அடைய வேண்டுமானால் அதற்கு இடையூறாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும் அதன் மீது பொறுப்பு சுமத்தும் உணர்ச்சியும், ஒழிக்கப்பட்டாக வேண்டு மென்றும்
(4) பெண்கள் உண்மையான விடுதலையும் சுதந்திரமும் சமதர்ம ஒழுக்கமும் அடைய வேண்டுமானால் அதற்கு இடையூறாக இருக்கும் பிள்ளைகளைப் பெறுதல் என்னும் கர்ப்பத்தை அடக்கி ஆள வேண்டுமென்றும்,
(5) தூத்துக்குடித் தீர்மானத்தை உறுதிப்படுத்துகிற முறையில் பகத்சிங்கின் தியாகத்தை மறுபடியும் பாராட்டுகிறதென்றும்,
(6) கும்பகோணம் பார்ப்பனர்கள் தெருக் கூட்டுவதற்குக் கூட கும்பகோணம் முனிசிபாலிட்டி யார் தீண்டப்படாதார் என்பவர் களை நியமனம் செய்யாமல் ஜாதி இந்துக்களை நியமிக்க வேண்டு மென்று முனிசிபாலிட்டியாரைக் கேட்டுக் கொண்டி ருப்பதைக் கண்டித்தும்,
(7) கோபிச்செட்டிப் பாளையத்திற்கு அடுத்த கூகலூர் கே. சுப்பணகவுண்டர் அவர்கள் தனது தோட்டத்துக் கிணற்றைத் தீண்டாதார்களென்று சொல்லப்படும் சகல வகுப்பார்களுக்கும் உபயோ கித்துக் கொள்ளத் தாராளமாய் விட்டுவிட்டதோடு தாங்களும்தங்கள் நெருங்கிய பந்துக்களும் அக் கிணற்றையே உபயோகித்துக் கொண்டு வருவதைப் பாராட்டுவதாகவும்,
(8) மாகாணத்திற்கென்று சுயமரியாதை பிரச்சாரக் கமிட்டியொன்று ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும்,
(9) மலையாளத்தில் தீண்டப்படாதார் நடக்கக்கூடாத சில தெருக்களுக்குப் போர்டு எழுதித் தொங்கவிட வேண்டுமென்று தீர்மானம் செய்த மலையாள ஜில்லா போர்டாரை கண்டிப்பதாகவும்,
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேல் கண்ட தீர்மானங்களின் மீது பேசியவர் திருவாளர்கள் : எஸ். ராமநாதன், சாமி சிதம்பரனார், செல்வ கணபதியார், திருஞான சம்பந்தம், தமிழ்ப் பண்டிதர் நீலாவதியம்மை, மரகதவல்லியம்மை, அழகிரி சாமி, ஈ.வெ.ரா., சி. நடராஜன், கும்பகோணம் சுப்பிரமணிய பிள்ளை, ராமாமிர்தம்மாள், ராமசுப்ரமணியம், சொ.முருகப்பா முதலியவர்கள் ஆவார்கள்.
குடி அரசு: 31.5.1931
1.இம்மாதம் 24, 25 தேதிகளில் பொறையாற்றில் நடந்த தஞ்சை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் முக்கியமாகக் கருதப்படுவதும், பலருக்குத் திடுக்கிடும்படியான அளவுக்கு பிரமாதமாய் காணப்படுவதுமான தீர்மானங்கள் மூன்று.
அதாவது,
- “மக்களுக்குள் இருந்துவரும் தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும் அடியோடு ஒழிக்கப்பட வேண்டுமானால் அதற்கு முட்டுக்கட்டையாகவிருக்கும் ‘இந்து மதம்’ என்பது அழிக்கப்பட வேண்டியது மிக்க அவசியமாகும்.”
- “மக்கள் உண்மையான சுதந்திரமும், சமதர்மமும், பொதுவுடைமைத் தத்துவமும் அடைய வேண்டுமானால் அவற்றிற்கு இடையூறாகவிருக்கும் கடவுள் நம்பிக்கையும், எதற்கும் அதையே பொறுப்பாக்கும் உணர்ச்சியும் ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.”
- “பெண்கள் ஆண்களைப் போன்ற விடுதலையையும் சமதர்ம ஒழுக்கத்தையும், சுதந்திரத்தையும் அடைய வேண்டுமானால் அவற்றிற்குத் தடையாயிருக்கும் பிள்ளைப்பேற்றை (கர்ப்பத்தை) அடக்கி, ஆள வேண்டியது அவசியமாகும்” என்பவைகளாகும்.
ஆகவே இதன் கருத்து மத உணர்ச்சி, கடவுள் உணர்ச்சி ஆகியவை மக்கள் வாழ்க்கைக்குள் புகுந்து கொண்டு இருக்கக் கூடாதென்பதேயாகும்.
பொதுவாக நமது நாடானது உண்மையான விடுதலையும், சுதந்திரமும், சமதர்மமும் அடைவதற்கு நாம் வெகுகாலமாகவே மேல்கண்ட இம்மூன்று தன்மைகள் அதாவது மக்களுக்குள் தீண்டாமை ஒழிவதும், ஜாதி வித்தியாசம் நீங்குவதும், பொருளாதார சமதர்மம் ஏற்பட வேண்டுமென்பதும், பெண்கள் விடுதலையும், சமஉரிமையும் அடைய வேண்டும் என்பதையுமே முக்கியமாய்ச் சொல்லி வந்திருக்கின்றோம். இதை அன்று முதல் இன்று வரை மறுப்பவர்கள், மறுத்தவர்கள் யாருமில்லை. ஆகவே, இம்மூன்று காரியங்களும் ஏற்படவேண்டுமென்று உண்மையாயும், யோக்கியமாயும் விரும்பும். ஒப்புக்கொள்ளும் ஒவ்வொருவரும் அவற்றிற்கு இடையூறுகளாயிருப்பவைகளை ஒழிப்பதின் மூலம்தான் அவைகளை அடைய முடியுமென்பதை ஒப்புக்கொண்டே தீருவார்கள்.
இந்நிலையில் பார்த்தோமானால் நமக்குத் தீண்டாமைக்கும், ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வுக்கும் ஆதாரமாக ‘நமது மதம்’ என்று சொல்லப்படும், ‘இந்து மதம்’ என்பதாக ஒன்று இருந்து கொண்டுதான் முட்டுக்கட்டையாக இருக்கின்றதே யொழிய வேறொன்றுமில்லை.
இந்து மதம் என்பதின் ஜீவ நாடியே தீண்டாமையும் ஜாதி வித்தியாசமுந்தான் என்பதை இந்து மத சம்பந்தமான ஒரு சிறிது ஞானமுள்ள மக்களும் உணருவார்கள்.
அன்றியும், இன்றைய தினம் தீண்டாமையையும், ஜாதி வித்தியாசத்தையும் ஒழிக்கவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பவர்களான நமது எதிரிகள் எதைப் பிரதானமாய்ச் சொல்லுகின்றார்களென்றால் ‘இந்து மதத்’தைத் தான் பிரதானமாய்ச் சொல்லுகின்றார்கள்.
ஆகவே, இந்து மதத்தின் நிழலில்தான் தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும் அடைக்கலம் புகுந்து கொண்டிருக்கின்றதே யொழிய வேறு எவருடைய பலத்தாலும், ஆதாரத்தாலும் அவை இருக்கவில்லை. அன்றியும், ஜாதி வித்தியாசத்தைக் காப்பாற்றுவதுதான் இன்று இந்துமத சம்பிரதாயமாக இருக்கின்றதேயொழிய, வேறு ஒரு காரியமும் இந்து மதத்தின் அனுபவமாய் எந்த இந்து மக்களிடமுமில்லை என்பதும் அனுபவ ஞானமுள்ள யாவரும் நன்றாய் அறியலாம்.
முதலாவது, இந்த ஜாதி வித்தியாசம், தீண்டாமை ஆகியவைகள் அனுபவத்தி லிருப்பது தான் இந்து மதம் என்பதைத்தவிர, மற்றபடி இந்துமதம் என்றால் என்னவென்று இந்துக்கள் என்பவர்களில் கோடிக்கு ஒருவராவது விளக்க முடியுமா, அல்லது தங்களுக்காவது தெரியும்படி விளங்கிக் கொண்டிருக்கின்றார்களா? என்று பந்தயம் கூறி கேட்கின்றோம். வார்த்தையளவு அல்லாமல் கருத்தளவில் யாருக்காவது விளங்குமா? விளங்கியிருக்கின்றதா? என்றும் கேட்கின்றோம்.
தவிரவும், இந்து மதம் என்று சொல்லப்படுவதற்கு ஆதாரமென்று சொல்லக்கூடியதும், இந்துக்கள் என்ற தலைப்பின்கீழ் கட்டுப்பட்ட மக்களில் 100 க்கு 25 பேராவது தெரிந்து, ஒப்புக்கொள்ளக் கூடியதுமான ஆதாரமோ, தர்மமோ கொள்கைகளோ, கோட்பாடுகளோ எதுவுமில்லையென்று நம்மால் தைரியமாய்ச் சொல்லக் கூடுமானாலும், ஒரு சமயம் வேறு யாராவது இருப்பதாகச் சொல்லி கட்டாயப்படுத்தி மக்களை ஒப்புக்கொள்ளச் செய்யும் எந்த ஆதாரத்திலாவது தீண்டாமையையும், ஜாதி வித்தியாசத்தையும் வற்புறுத்தாத ஆதாரமோ, தருமமோ, கொள்கையோ, கோட்பாடோ இருக்கின்றதாயென்றும் கேட்கின்றோம்.
இஸ்லாம் மதத்திற்கு குர் ஆன், கிறிஸ்தவ மதத்திற்கு பைபிள் என்பவை இருப்பது போல் இந்து மதத்திற்கு என்னயிருக்கின்றது என்பதாக இந்து மத அபிமானிகள் யாராவது சொல்லமுடியுமா? இந்துக்களுக்கு மேற்கண்டதைப் போன்ற ஒரு வேதமிருக்கின்றதா? இருந்தால் அது இந்துக்களென்பவர்கள் தெரியக்கூடியதா? அது இந்துக்கள் என்பவர்கள் எல்லோரையும் கட்டுப்படுத்தக் கூடியதா? என்று கேட்பதோடு இந்து மதத்தைக் காப்பாற்ற கவலை கொண்டவர்கள் என்பவர்களாவது அதில் உள்ளவற்றிற்குக் கட்டுப்படச் சம்மதிப்பார்களா? என்பதின் மூலம் தான் ஒரு மதத்தின் ஆதாரமின்னதென்பதை நிச்சயிக்க முடியுமே யொழிய மற்றபடி எவருக்கும் புரிவிக்கப்பட முடியாமலும், தங்களுக்கே புரியாமலும் பேசுவதில் யாதொரு பயனும் ஏற்படாதென்பதுடன் இந்த நிலையிலுள்ள இந்துமத சம்பந்தமான வக்காலத்தே பரிகாசத்திற்குமிடமாகு மென்பதையும் ஞாபகப்படுத்துகிறோம்.
இந்திய பாமர மக்களின் முட்டாள் தனத்தையும், கற்ற மக்களின் அயோக்கியத் தனத்தையும் உலகுக்கு எடுத்துக் காட்டுவதற்கறிகுறியாகத்தான் இந்துமதமென்ற உணர்ச்சி இருக்கின்றதே என்பதோடு இந்தியாவில் 100க்கு 10பேருக்குக்கூட இந்து மதமென்றாலென்னவென்பது விளங்காமலே அதற்கு அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களென்றும் நாம் பந்தயம் கூறிச் சொல்லுவோம்.
மேலும், தீண்டாமையும் ஜாதி வித்தியாசமும் ஒழிவதற்கு மாத்திரமல்லாமல், இந்து மக்களின் அறிவுவிர்த்திக்குமான உதயத்திற்கு இந்துமதம் என்கின்ற உணர்ச்சி ஒழிய வேண்டியதவசியமென்று மேலும் மேலும் வலியுறுத்திச் சொல்லுவோம்.
ஆகவே, இவ்வித இந்துமதமென்பதைக் கட்டிக் கொண்டு அழுவதும். அதற்கு ஏதேதோ வியாக்கியானங்கள் சொல்லுவதும். அசிங்கத்தையெடுத்து மேலே பூசிக்கொள்ளுவதையொக்குமே தவிர புத்திசாலித்தனம் ஒன்றும் விளங்காது. பொதுவாக, மதங்கள் என்பதே ‘அதாவது கடவுளுக்கும் மனிதனுக்குமுள்ள சம்பந்தத்தைக் காணவும் கடவுளை மனிதன் அடையவும்’ என்று சொல்லப்படுவதான மதங்கள் என்பதே ‘மூட நம்பிக்கை’யென்றும், ‘ஹம்பக்’கென்றும் உலக மக்கள் பெரும்பாலோரால் சொல்லிக்கொண்டு வருகின்ற இந்தக் காலத்தில் பல இடங்களில் அவையொழிக்கப்பட பிரச்சாரங்கள் செய்து கொண்டும் வரப்படுகின்ற இந்தக் காலத்தில் கேவலம் அர்த்தமில்லாத, ஆதாரமில்லாத இந்து மதம் என்பதற்கு ஒருவர் வக்காலத்துப் பேச வருவதென்றால் இதைவிடப் பரிகாசத்திற்கிடமான காரியம் வேறில்லை என்றே சொல்லுவோம். அடுத்தபடியாக, இந்து மதம் எதற்காகக் காப்பாற்றப்பட வேண்டு மென்பதே நமக்குப் புலப்படவில்லை. அதில் ஏதாவது உயர்ந்த கொள்கைகளோ, பிரயோஜனப்படத்தக்கத் தத்துவங்களோ அல்லது ஞானங்களோ இருக்கிறதென்று யாராவது சொல்லவந்தால், அவர்களைப் பற்றி நாம் சிரிப்பதுடன் அவர்களுக்கு, உவமையாகவுமொரு பழமொழியைச் சொல்லிக் காட்ட வேண்டியவர்களாகவுமிருக் கின்றோம். அதாவது, ஒருவன் “பஞ்சபாண்டவர்களை எனக்குத் தெரியாதா? கட்டில் கால்கள் போல் மூன்று பேர்களென்று சொல்லி, இரண்டு விரல்களைக் காட்டி, தரையில் ஒன்றை எழுதி, கடைசியில் அதையும் காலால் தேய்த்து விட்டானாம்” என்பதையொக்கும். ஆகவே, இப்பழமொழிப்படி எப்படி இந்த நபர் பஞ்சபாண்டவர்கள் என்பவர்கள் கட்டில் குத்துக்கால்கள் அய்ந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று ஆகிய இவையொன்றுமே தெரியாதவர் என்று ஏற்படுகின்றதோ, அதுபோல் இந்து மதம் என்பது எனக்குத் தெரியாதா? அது அநேக உயர்ந்த தத்துவங்கள், ஆத்ம ஞானங்கள் முதலியவைகள் கொண்ட பழைமையானதென்று சொல்லுபவர்களுமாவார்கள் என்றுதான் நாம் அபிப்பிராயப்பட வேண்டியிருக்கிறது.
எனவே, இப்படிப்பட்ட மக்களின் அபிப்பிராயத்திற்கு யாரும் பயப்பட வேண்டியதில்லை யென்பதைத் தவிர, வேறு சமாதானம் பொதுமக்களுக்கு நாம் சொல்ல வேண்டியதில்லை என்றே கருதுகின்றோம். மற்றபடி சமதர்மத்திற்கும் பொதுவுடைமைக் கொள்கைக்கும் கடவுள் உணர்ச்சி ஒழிக்கப்பட வேண்டிய தென்பதும் நமது உறுதியான அபிப்பிராயமேயாகும். கடவுள் நம்பிக்கையும், கடவுள் மீது பொறுப்பு போடுபவனும் சுதந்திர மனிதனாயிருக்க நியாயமேயில்லையென்று பல தடவைகளிலும் சொல்லி வந்திருக்கின்றோம்.
கடவுள் உண்டா? இல்லையா? என்கின்ற பிரச்சினையில் நாம் புகவில்லை. அது முடிந்த விஷயமாகும். எப்படியெனில் “தொட்ட தற்கெல்லாம் கடவுள்! கடவுள் என்று சொல்லி சதா பிரார்த்தனை செய்துகொண்டிருக்கும் திரு. காந்தியும், சைவ சமய நிபுணர்களும் மகாநாடு கூட்டமும், ஏற்கனவே இதைப்பற்றி ஒரு முடிவு சொல்லியாய்விட்டது. அதாவது, “கடவுளிருப்பதாய் மனிதன் நினைத்துக் கொள்வது நல்லது” என்று மாத்திரம்தான் சொல்லிவிட்டார்கள். ஆதலால், அது ஒரு மனிதன் ஒரு பலனை யுத்தேசித்து நினைத்துக் கொள்ள வேண்டிய விஷயமாகப் போய்விட்டதென்பதனால் புலனாகின்றது. ஆகையால் நாம் இனியும் அதில் பிரவேசிக்க வேண்டிய வேலையில்லை. ஆனால், மனிதனுடைய தற்கால நிலைக்குக் கடவுள்தான் காரணமென்றால் மனிதனின் நிலையை மாற்ற வேண்டுமென்று சொல்ல நமக்கு யோக்கியதை ஏது? இப்படிப்பட்டவர்களுக்கு முயற்சி செய்யத்தான் மனம் எப்படி வரும்? என்பதுதான் நமது கருத்து, ஆதலால்தான் கடவுள் உணர்ச்சி யையும், அதன் மேல் பொறுப்பு சுமத்துவதையும் அழிக்க வேண்டுமென்கிறோம்.
பிறகு, பெண்கள் கர்ப்பத்தடை விஷயம். நாம் பெண்கள் பிள்ளைகளைப் பிரசவிக்கவே வேண்டாமென சொல்லவரவில்லை. அச்செய்கையினால், பெண்கள் அடிமைகளாகின்றார்கள் என்பதற்காகவே, முக்கியமாய் அதைத் தங்களாதிக்கத்தில் வைத்து, இஷ்டப்படி தாங்கள் சுதந்திரமாயிருக்கத் தக்க மாதிரியாக உபயோகித்துக் கொள்ளச் சொல்லுகின்றோம். ஆண்கள், பெண்களைத் தங்களைப் போலெண்ணுவார் களானால் அப்போது பிள்ளைகளைப் பிரசவிப்பதன் கஷ்டமும், அதனால் ஏற்படும் அடிமைத்தனமும் அவர்களுக்கு விளங்கும். அவர்களை அடிமைகளென்று கருதிக்கொண்டிருப்பவர்களுக்கு, இதிலுள்ள கஷ்டம் விளங்காது.
மற்றபடி பெண்களின் ‘கற்பு ஒழுக்க’த்தில் சம சுதந்திரம் இருக்க வேண்டுமென்னும் விஷயத்தில், சிலருக்கு அதாவது சில ஆண்களுக்குப் பெரிய கஷ்டமிருப்பதாகத் தெரிய வருகின்றது. பெண்கள் கற்புள்ளவர்களாயிருக்க வேண்டுமெனச் சொல்லுவதற்கு, எந்த ஆணுக்குரிமையுண்டென நாம் கேட்கின்றோம்.
தவிரவும், பெண்களுக்குப் புத்திச் சொல்ல ஆண்கள் யாரெனவும் கேட்கின் றோம். ‘கற்பு’ என்னும் பூச்சாண்டியின் யோக்கியதை யாவருமறிந்த இரகசியமே யொழிய, அது ஒருவருக்கும் தெரியாதது அல்ல. பெண்களை நாம் உலகத்திலுள்ள எல்லா மனிதர் களுக்கும் பொது மகளிராயிருக்க வேண்டுமெனச் சொல்ல வரவில்லை.
ஆனால் மற்றபடி நாம் சொல்லுவதென்னவென்றால் எல்லா விஷயங்களிலும் ஆண்களுக்குள்ள சுதந்திரம், பெண்களுக்குமிருக்க நியாயமுண்டு. ‘கற்பு’த் தவறும் விஷயத்திலும், ஆண்களுக்குள்ள நிபந்தனைகளும், தண்டனைகளும்தான் பெண் களுக்கு இருக்க வேண்டுமென்று சொல்லுகின்றோமேயொழிய, வேறில்லை, ‘கற்பு’ என்பதாக ஒரு குணம் உண்டா? இல்லையா? அது இயற்கைக்கும் சாத்தியத் திற்கும் ஏற்றதா? என்கின்ற பிரச்சினைகள் அது வேறு விஷயம். ஆனாலும் யோக்கியமான ஆண்பிள்ளைகள் இதற்குப் பயப்பட வேண்டியதவசியமேயில்லை.
எவனொருவன், தான் கற்புள்ளவனாயிருக்கவில்லையோ, எவனொருவனால் இருக்க முடியவில்லையோ அவனுக்குத்தான் இதில் அதிகமான கவலையும், பயமுருமிக்க நியாயமுண்டே தவிர மற்றவர்கள் இதைப்பற்றி கவனிக்க வேண்டியதேயில்லை. அல்லாமல் நாமாவது “ஆண்கள் கற்புள்ளவர்களாயிருந்தாலும் பெண்கள் கற்புள்ளவர் களாயிருக்கக் கூடாது” என்று சொல்லியிருந்தால்தான், நம்மீதுமொருவர் கோபித்துக் கொள்ளவும் உரிமையுண்டு. இப்படிக்கெல்லாம் இல்லாமல் சும்மாவீணே ‘கற்பு’ போய்விட்டதே, கற்பு போய்விட்டதேயென்று யாராவது கூப்பாடு போட்டால் அதைப் போலிக்கூச்சலென்று தான் கருதி, குப்பைத் தொட்டியில் போட வேண்டுமே தவிர அதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.
ஆகவே, தஞ்சை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்கள் மிக முக்கியமானதும், நியாயமானதுமென்பதோடு, கூடிய சீக்கிரத்திலிதுவே, உலகத் தீர்மானங்களாகயேற்படப் போகின்றதென்பதோடு, இதே தீர்மானங்கள் இன்னும் வெகு சமீப காலத்திற்குள், ‘இந்திய தேசிய காங்கிரசிலும்’ புகாதவரையில் அக்காங்கிரசே இருக்குமிடம் தெரியாமல் மறைந்து போகப்போகின்றதென்ற உறுதியையும் கொண்டிருக்கின்றோம்.
– குடிஅரசு
– தலையங்கம் – 31.05.1931