சென்னை, ஜூலை 10 கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, கோவை மாவட்டம் வட வள்ளியில் மேற்கொண்ட பிரச்சாரத் தின்போது, “தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா, இல்லையா என்ற முகவரியே இல்லை’’ என்று விமர்சித்தார்.
தகுதி இல்லை
இதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளி யிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘‘அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சொந்தமாக சிந்தித்து அரசியல் முழக்கங்களை உருவாக்க முடியாமல், கடந்த 2021-ஆம் ஆண்டுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் இருந்தபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த ’தமிழ்நாட்டை மீட்போம்’ என்ற அரசியல் முழக்கத்தை, இன்றைக்கு காலப் பொருத்தம் இல்லாமல் பேசி வருகிறார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை எப்படியாவது பிரித்து விட முடியாதா என பாடுபட்டு வருப வர்களின் அடிமைபோல செயல்படும் அவர், தனது முயற்சியில் தோல்வியை தழுவி சித்தம் கலங்கிப் பேசுகிறார்.
ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு சட்டம், உதய் மின் திட்டம் போன்ற மக்களின் உரிமைகளை பறிக்கும் திட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர் மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா. பாஜகவோடு இனி எந்த காலத்திலும் அதிமுக கூட்டணி அமைக்காது என்றார். அவரது வார்த்தைகளை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டார் பழனிசாமி. உரிமைக்காக போராடும் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி பேச அவருக்கு எந்த தகுதியும் இல்லை. 2026 தேர்தலில் முகவரியை இழப்பது யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.