திருவனந்தபுரம், ஜூலை 8 திருவனந்தபுரம் மாவட்டம் காட் டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பருத்திப்பள்ளி ரேஞ்சின் வனப் பிரிவு பெண் அதிகாரி ரோஷ்னி சர்வ சாதாரணமாக பிடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பீட் ஃபாரஸ்ட் அதிகாரி ஜி.எஸ். ரோஷ்னி, பெப்பரா அருகே உள்ள ஒரு ஓடையில் இருந்து 18 அடி நீளமுள்ள ஒரு பெரிய ராஜ நாகப்பாம்பை தனியாகப் பிடிப்பதைக் காட்டுகிறது. பருத்திப்பள்ளி ரேஞ்சின் விரைவு மீட்புக் குழுவைச் (Rapid Response Team) சேர்ந்த ரோஷ்னி, ஒரு நீண்ட குச்சி மற்றும் பையைப் பயன்படுத்தி ஆறு நிமிடங்களில் இந்த முதிர்ந்த ராஜநாகத்தை பயமின்றி பிடித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
6.7.2025 அன்று மதியம் 12.30 மணியளவில் மீட்புப் பணிகள் நடைபெற்றன. பின்னர், அந்த ராஜ நாகப்பாம்பு பாதுகாப்பாக அடர்ந்த காட்டில் விடப்பட்டது. அந்த பெண் வன ஊழியரின் துணிச்சலான செயல் சமூக ஊடகங்களில் பாராட்டுகளை பெற்றது. திருவனந்தபுரம் பகுதியில் இது மாதிரியான மிகப்பெரிய பெரிய ராஜநாகம் சிக்கியிருப்பது இதுவே முதன்முறை. ஏனெனில் இப்பகுதியில் ராஜநாகங்கள் அரிதாகவே காணப்படுகின்றன.