தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மய்யங்கள் மூடப்படுகிறதா? முற்றிலும் பொய்ச்செய்தி! –அமைச்சர் கீதா ஜீவன் அறிக்கை

2 Min Read

சென்னை, ஜூலை 8 தமிழ்நாடு அங்கன்வாடி மய்யங்கள் குறித்து தவறான தகவல் பரப்பிய நாளிதழ் செய்திக்கு மறுப்பு தெரிவித்து அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு,

அங்கன்வாடி மய்யம்

“தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி மய்யங்களில் போதிய ஊழியர்கள் இல்லாததால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர் எனவும், இந்த ஆண்டு மட்டும் 501 அங்கன்வாடி மய்யங்கள் மூடப்பட்டுள்ளன என 05.07.2025 அன்று நாளிதழில் வெளி யிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வண்ணம் தொடர்ந்து இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்தி பிரசுரிக்கப்பட்டு வருகிறது. இச்செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், மேனாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ்நாட்டில் 500 அங்கன்வாடி மய்யங்களை மூடுவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்து அறிக்கை வெளி யிட்டுள்ளனர். அவ்வறிக்கைகள் உண்மை நிலைக்குப் புறம்பானவைகளாக உள்ளன.

இவ்வரசு 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற போது 54,439 அங்கன்வாடி மய்யங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்தன. கழகத் தலைவர் தளபதியார் ஆட்சி பொறுப்பேற்றபின்பு கடந்த நான்கு ஆண்டுகளில், மேலும் கூடுதலாக 44 அங்கன்வாடி மய்யங்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டு தற்போது 54,483 அங்கன்வாடி மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன.

எண்ணிக்கை
குறைக்கப்படாது!

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை, அனைத்து குழந்தைகள் மய்யங்களும் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அந்த எண்ணிக்கை ஒருபோதும் குறைக்கப்படாது. தேவைப்படின், கூடுதலாக அங்கன்வாடி மய்யங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே அங்கீ கரிக்கப்பட்ட 54,483 அங்கன்வாடி மையங்கள் எண்ணிக்கைக்குள், தேவையான இடத்திற்கு குழந்தைகள் மய்யங்களை இடமாற்றம் செய்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதனடிப்படையில்தான், அதிக நகரமயமாக்கல் காரணமாக இடம்பெயரும் மக்கள் தொகை (migration population), பயனாளிகளின் வருகை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, முதன்மை அங்கன்வாடி மய்யத்தினை குறு மய்யமாகவும், குறு மய்யத்தினை முதன்மை அங்கன்வாடி மய்யமாக மாற்றிடவும், திட்டம் சென்றடையாத புதிய பகுதிகளில், புதிய மய்யங்களை துவக்கி டவும், குறைவான பயனாளிகள் கொண்டு அருகருகே உள்ள இரு மய்யங்களை இணைத்தி டவும், தூரத்தில் செயல்படும் மய்யங்களை பயனாளிகளின் வசிப்பிடத்திற்கு அருகிலேயே புதிதாக ஆரம்பிக்கவும், மலைப்பகுதி மற்றும் யாரும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளை கண்டறிந்து புதிதாக குறு மய்யங்களை ஆரம்பித்திடவும், கடந்த ஆறு மாதங்களாக அங்கன்வாடி மய்யங்கள் மறுசீரமைப்பு நட வடிக்கைக்காக (rationalisation exercise) புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

மேற்கூறிய யாவையும் தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் மட்டுமே உள்ளது. இந்த மறுசீரமைப்பு இன்னமும் நடைமுறைப்பத்தப்பட வில்லை. அவ்வாறு நடைமுறைப்படுத்தும் போதும் 54,483 குழந்தைகள் மய்யங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தும்,

உண்மைக்குப்
புறம்பானதாகும்!

நிலைமை இவ்வாறு இருக்க, தற்போது 54,483 குழந்தைகள் மய்யங்கள் செயல்பட்டு வரும் தருணத்தில் புதிதாக 501 மய்யங்கள் மூடப்பட்டுள்ளன என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும்.

மேலும், தற்போது 7,783 அங்கன்வாடி காலிப் பணி இடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகின்றது. விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *