நாகர்கோவில், ஜூலை 8- குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. குழந்தைகள் இல்லை. இந்தநிலையில், உடல்நலக்குறைவு காரணமாக தாய் வீட்டில் இருந்தார். அப்போது உறவினர்கள் கூறியதன் அடிப்படையில் மண்டபம் பாண்டிவிளை பகுதியில் உள்ள ஒரு சபைக்கு சென்றுள்ளார். சபை போதகரான ரெஜிமோன் (வயது 43) இளம்பெண்ணின் நோய் குணமாக தனிமையில் ஜெபம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய பெற்றோர், மகளை மட்டும் ஜெபம் செய்யும் அறைக்கு அனுப்பி உள்ளனர். அந்த சமயத்தில் போதகர் ரெஜிமோன் அந்தப் பெண்ணிடம் பாலியல் வன்முறைக்கு முயன்றுள்ளார்.
மதபோதகரின் அத்துமீறிய செயலால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், போதகரின் பிடியில் இருந்து தப்பித்து வெளியே ஓடி வந்துள்ளார். பிறகு நடந்த விவரத்தை பெற்றோரிடம் கூற அவர்கள் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரெஜிமோனை கைது செய்தனர். மேலும் இதுபோன்று அவர் வேறு பெண்களிடம் அத்துமீறியுள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.