மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டன உரையாற்றினர்
கோவை, ஜூன் 18 – பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத – மக்கள் விரோத – பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் கோவையில் 16.6.2023 அன்று மாலை “மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்” நடைபெற்றது.
இலட்சக்கணக்கானோர் திரண்ட இந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் தி.மு.கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.
கூட்டத்தில் உரையாற்றிய தமிழர் தலைவருக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் பயனாடை வழங்கினார்.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் புலனாய்வு விசாரணை அமைப்புகளை குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள் மீது பயன்படுத்தாமல், தன்னுடைய அரசியல் எதிரிகள் மீது பா.ஜ.க. பயன்படுத்தி வருவதை ஊடகங்கள் புள்ளி விவரங்களுடன் பலமுறை அம்பலப்படுத்தி இருக்கிறது. ஆனாலும் பா.ஜ.க. தலைமை திருந்தவில்லை. வெளிப்படையாக – ஆணவமான முறையில் விசாரணை அமைப்புகளை அரசியல் உள்நோக்கத்தோடு பயன்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடுதான் பா.ஜ.க.வை பின்னங்கால்
பிடரியில் அடிபட விரட்டும் மாநிலம்!
எல்லா மாநிலங்களிலும் சுற்றிய பழிவாங்கும் படலம், தமிழ்நாட்டுக்கும் வந்துவிட்டது. தமிழ்நாடு என்பது பா.ஜ.க.வை பின்னங்கால் பிடரியில் அடிபட விரட்டும் மாநிலம். இங்கு அவர்களால் எப்போதும், எந்த சூழ்நிலையிலும் வெல்ல முடியாது என்பது மட்டுமல்ல, தனியாக நின்று டெபாசிட்கூட வாங்க முடியாது என்பது தெரியும். அதனால் தான் நேர்வழி இல்லாமல் நேர்மையற்ற வழிகளில் பா.ஜ.க. தனது கீழான செயல்களைச் செய்கிறது.
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 13 ஆம் தேதி அன்று விசாரணை என்ற பெயரால் சித்திரவதை செய்துள்ளார்கள். நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இதயச் சிகிச்சை செய்ய வேண்டிய அளவுக்கு நெருக்கடியை உண்டாக்கி விட்டார்கள். விசாரணைக்கு அமைதியாக ஒத்துழைப்புத் தந்தவரையே இந்தளவுக்கு வேண்டுமென்றே தொல்லையையும், நெருக்கடியையும் கொடுத்திருப்பது பழிவாங்குவதே தவிர, விசாரணை அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை – அதுவும் அமைச்சரைச் சித்திரவதை செய்வதன் மூலமாக அச்சுறுத்துவது அரசியலே தவிர, விசாரணை அல்ல.
மேலும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்துக்குள் ஒன்றிய பாதுகாப்புப் படைப் பிரிவு காவல்துறையினர் அழைத்து வருவதுதான் மாநில ஆட்சியின் மாண்பைக் காக்கும் முறையா? இதன் மூலமாக எங்கும், எப்போதும் நுழைந்து எதையும் செய்வோம் என்ற ஆணவப் போக்கே தெரிகிறது. எச்சரிக்கை விடுக்கிறார்களா? மிரட்டுகிறார்களா?
அமித்ஷாவின் சென்னை பயணம்
படுதோல்வி என்பதை மறைக்கவே கைது நடவடிக்கை!
மூன்று நாள்களுக்கு முன்னால்தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வந்து சென்றார். அவரது பயண நோக்கமும், பிரச்சாரக் கூட்டமும் படுதோல்வி என்பதை அனைவரும் அறிவார்கள். இதனை மறைப்பதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கையை பாய்ச்சி இருக்கிறார்கள்.சொராபுதீன் என்கவுன்டர்வழக்கில் சி.பி.அய். வழக்குப் பதிவு செய்தவுடன் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்து கொண்டே தலைமறைவானவர் அமித்ஷா என்பதை நாட்டு மக்கள் மறக்கவில்லை.
“Don’t Create atmosphere of fear” என்று சில வாரங்களுக்கு முன்புதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமலாக்கத்துறையை எச்சரித்து இருந்தார்கள். இப்படி உச்சந்தலையில் உச்சநீதிமன்றம் கொட்டிய பிறகும் பா.ஜ.க.வின் அமலாக்கத் துறை திருந்து வதாகத் தெரியவில்லை. திருத்தும் கடமையும், பொறுப்பும் நாட்டு மக்களுக்கே உண்டு.
பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத – மக்கள் விரோத – பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டித்து கோவை மாநகர், சிவானந்தா காலனியில் 16.06.2023 அன்று மாலை 5.00 மணி அளவில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ‘‘மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்” நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களின் அறிவிப்பிற்கு இணங்க இந்த மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க.வுக்கு இறுதித் தோல்வியைத் தரும் வரையில் நமது மக்கள் பிரச்சாரம் தொடரும் என கட்சித் தலைவர்கள் உரையாற்றினர்.
இக்கூட்டத்தில் டி.ஆர்.பாலு, (பொருளாளர், தி.மு.க.), ஆசிரியர் கி.வீரமணி, (தலைவர், திராவிடர் கழகம்), கே.எஸ்.அழகிரி, (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி), வைகோ, (பொதுச்செயலாளர், ம.தி.மு.க.), கே.பாலகிருஷ்ணன் (செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்மாநிலக் குழு), ஆர்.முத்தரசன் (செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்மாநிலக்குழு), கே.எம்.காதர்மொகிதீன் (தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), தொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), எம்.எச்.ஜவாஹிருல்லா, (தலைவர், மனிதநேய மக்கள் கட்சி), ஈ.ஆர். ஈஸ்வரன் (பொதுச் செயலாளர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), தி.வேல்முருகன் (தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி) மற்றும் ஒன்றிய மேனாள் அமைச்சர் ஆ.இராசா எம்.பி. உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள், பொதுமக்கள் என்று பல்லாயிரகணக்கானோர் திரண்டனர்.
கூட்டணிக்கட்சித் தலைவர்கள் உரை!
ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைப்பாவையாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மற்றும் சி.பி.அய். அமைப்புகள் செயல்படுவதாக மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மோடி அரசின் சதி வேலைகள் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
டி.ஆர்.பாலு எம்.பி.
கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, ஒன்றிய பா.ஜ.க. ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும் என்றார். அமலாக்கத்துறையின் துன்புறுத்தலால் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், மருத்துவமனையில் வைத்து 8 நாள் விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நலத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மிரட்டலுக்கு பணியாத மாநிலம் தமிழ்நாடு, அதுவும் தி.மு.க. அரசு என்றும், நெருப்பாற்றில் பயணிப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும் டி.ஆர்.பாலு கூறினார்.
ஒன்றிய மேனாள் அமைச்சர் ஆ.ராசா எம்.பி.!
கண்டனப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஆ.ராசா எம்.பி., இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தையும், மதசார்பற்ற கொள்கைகளையும் காப்பாற்றக் கூடியவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.
கொங்கு மண்டலத்தில் தி.மு.க. வெற்றி பிரகாசமாக உள்ளதால், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கொடுமைப்படுத்தி உள்ளதாகவும், அதானி குழும குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பிரதமர் மவுனம் சாதிப்பதாகவும் ஆ.ராசா விமர்சித்தார்.
ஓர் ஆண்டுகாலம் முழுவதும் கலைஞரின் நூற்றாண்டு விழா நடைபெறும் என்றும், அவ்வாறு அடுத்தாண்டு நடைபெறும் கலைஞரின் நூற்றாண்டு விழா மேடையில், பா.ஜ.க. அல்லாத பிரதமர் மேடையில் இருப்பார் என்றும், அப்போது, மோடியும், அமித்ஷாவும் இந்தியாவிலேயே இருக்கமாட்டார்கள் என்றும் ஆ.ராசா எம்.பி., தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.