அக்னி பகவான் சேட்டையோ! காஞ்சிபுரம் ஏகம்பரநாதன் கோயில் உண்டியலுக்கு தீ வைப்பு தண்ணீர் ஊற்றி அணைப்பு

viduthalai
1 Min Read

காஞ்சிபுரம், ஜூன் 30- காஞ்சிபுரம் ஏகாம்பரநாதன் கோவில் உண்டியலுக்கு தீ வைக்கப் பட்டது. தண்ணீர் ஊற்றி தீயை அணைத்ததால் ரூ.90 ஆயிரம் காணிக்கை தப்பியது.

உண்டியலில் இருந்து புகை

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு நடை பெறுவதற்கான பணிகள் ரூ.28 கோடியே 48 லட்சம் செலவில் நடந்து வருகிறதாம்!

ஏகாம்பரநாதன் கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்கின்றனர். அந்த பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் 27.6.2025 அன்று காலை திருப்பணி உண்டியலில் இருந்து திடீரென புகை வந்தது.

ரூ.90 ஆயிரம் காணிக்கை

கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதைப் பார்த்து பணியாளர்களுக்குத் தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து செயல்பட்ட கோவில் பணியாளர்கள் திருப்பணி உண்டியலில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமர துரையின் அனுமதியை பெற்று கோவில் உண்டியலை திறந்து பார்த்தனர். தீப்பிடித்த குச்சியை உள்ளே போட்டு தீ வைக்க முயன்றுள்ளது தெரியவந்தது.

தண்ணீர் ஊற்றியதால் நனைந்து போயிருந்த பணத்தை காயவைத்து எண்ணியதில் ரூ.90 ஆயிரத்து 918 இருந்தது.

சிறிதளவு ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்து சாம்பலானது. மீதி காணிக்கை பணம் வங்கியில் செலுத்தப்பட்டது.

மேலும் கோவில் உண்டியலில் தீ வைத்த சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் சிவகாஞ்சி காவல் துறையிடம் புகார் அளித்ததன் பேரில், கோவில் வளாகத்தில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *