கீழடி அகழாய்வில் 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘தமிழர்களின் மண்டை ஓடுகள் முகம்’-மாதிரி அறிவியல் பூர்வமாக நிரூபணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 30- கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை இங்கிலாந்து ஆய்வகம் ஆய்வு செய்து வெளி யிட்டுள்ள முகமாதிரிகளை சுட்டிக் காட்டி, ‘கீழடி வாழ்வி யல் அறிவியல் பூர்வமாக நிரூ பணம் ஆகி இருக்கிறது’ என முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கீழடி அகழாய்வுப் பணி

கடந்த 2014ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய தொல்லியல் துறை அகழாய்வைத் தொடங்கியது. தற்போது வரை இங்கு 10 கட்டமாக அகழாய்வுப் பணிகளை தொல்லியல்துறை நடத்தி உள்ளது.இந்த அகழாய்வில் 5,300– க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்ததுடன் ஒரு நகர அமைப்புக்கான சான்றுகளும் கிடைத்தன.இங்கு கிடைத்த தொல் பொருட்களை சோதனை செய்த போது அவை 2,800 ஆண்டுகள் வரை பமைமையானது என தெரியவந்தது.

முகங்களின் மாதிரி

இந்தநிலையில் கீழடி அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர் முகங்களின் மாதிரிகள் தற்போது வடிவமைக்கப்பட்டு உள்ளன.இங்கிலாந்தில் உள்ள ஆய்வகத்தில் 3டி முறையில் 80 சதவீதம் அறிவியல், 20 சதவீதம் கலையை பயன்படுத்தி இவை உருவாக்கப்பட்டு உள்ளன.மேலும், டி.என்.ஏ.வை பகுப்பாய்வு செய்து இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்பதை அறிய திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

முதலமைச்சர் பெருமிதம்

இதற்கிடையே இங்கிலாந்து ஆய்வகத்தின் முக மாதிரிகளை சுட்டிக்காட்டி, ‘கீழடி வாழ்வியல் அறிவியல் பூர்வமாக நிரூபணம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார்.இதுதொடர்பாக அவர் சமூக வலைதள பதிவில், ‘சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல் வழி நிறுவப்பட்ட சான்றாக கீழடியில்’ என தெரிவித்துள்ளார்.

தங்கம் தென்னரசு

இதேபோன்று நிதி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் கீழடி அகழாய்வில் எடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை ஆய்வு செய்து, சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய மக்களின் முக அம்சங்களை மீண்டும் உருவாக்கி தமிழ் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் தொன்மையை உலகிற்கு மீண்டும் எடுத்துக்காட்டி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒன்றிய பா.ஜனதா அரசு தமிழர்களின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை வஞ்சகமாக நசுக்க முயன்றாலும், கீழடி அகழ்வாராய்ச்சியில் இருந்து, வெளிவரும் ஆக்கப்பூர்வமான அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் ஒன்றிய அரசின் அநீதி மற்றும் மறுப்புகளை தொடர்ந்து முறியடித்து வருகின்றன. கீழடி ஆராய்ச்சி அறிக்கையை குறைந்தபட்சம் இப்போதாவது வெளியிடுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்” என கூறி உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *