தியாகங்கள் புரிந்த தலைவர்களை நினைவு கூரும் வகையில் 4 ஆண்டுகளில் 63 சிலைகள், 11 மணிமண்டபங்கள் அமைப்பு தமிழ்நாடு அரசு பெருமிதம்

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 30- தியாகங்கள் புரிந்த தீரர்கள், அறிஞர்கள், தலைவர்களை போற்றி 4 ஆண்டுகளில் 63 சிலைகள், 11 மணி மண்டபங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞர் ஆற்றிய பணிகளில் சிறந்த பணி, பல்லாயிரக்கணக்கான தலைமுறைகளுக்கும் தனித்தோங்கி நிற்கும் பணி, தென்கோடி குமரி முனையில் திருவள்ளுவருக்கு உலகமே கண்டு வியக்கும் வண்ணம் 133 அடி உயரத்தில் 7,000 டன் எடை கொண்ட மாபெரும் கற்சிலையை ரூ.9 கோடியே 65 லட்சத்தில் நிறுவி 2000ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி திறந்து வைத்தார்.

திருவள்ளுவர் சிலை போல எண்ணற்ற சிலைகள் மற்றும் மணிமண்டபங்கள் நிறுவி தியாகிகளை போற்றியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குமரி முனையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் வெள்ளி விழாவை 2024ஆம் ஆண்டு டிசம்பர் 30, 31ஆம் தேதிகளில் மாபெரும் கலை விழாவாக கொண்டாடினார். திருவள்ளுவர் சிலையை, பேரறிவுச் சிலை என முதலமைச்சர் போற்றி மகிழ்ந்தார்.

அறிஞர் பெருமக்களின் எழுத்தாவணங் களை தொகுத்து வெள்ளி விழா மலர் ஒன்றையும் வெளியிட்டார். திருவள்ளுவரின் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைத்து ரூ. 37 கோடி செலவில் இந்தியாவிலேயே முதலாவதாகக் கடல் மீது கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான கண்ணாடி இழைப் பாலத்தை 2024ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி திறந்து வைத்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், ஆட்சியை பார் முழுதும் பாராட்டும் வண்ணம் நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியத் திருநாட்டின் எழுச்சிக்கு விதையாக வித்தாக அமைந்த சுதந்திர போராட்ட தியாகிகள், அன்னை தமிழ் மொழியை காத்திட ஆருயிர்கள் தந்து போராடிய அற்புத தியாகிகள் அனைவரையும் போற்றி பாராட்டும் பெருமைக்குரிய சின்னங்களாக சிலை களையும், மணிமண்டபங்களையும் தமிழ் நாடு முழுவதிலும் ஏராளமாக ஏற்படுத்தி வருகிறார். இவை அனைத்தும் எதிர்காலத் தலைமுறை இளைஞர்களுக்கு நல்வழி காட்டி உணர்வூட்டும் உயிரோவியங்களாகும்.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டா லின் பதவி ஏற்ற நாளில் இருந்து இதுநாள் வரை நாட்டுக்காகவும், தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட பெருமக்களின் தியாகங்களை வருங்கால இளைஞர்கள் அறிந்து போற்றி பின்பற்றும் வண்ணம் 63 சிலைகள், 11 மணிமண்டபங்களை அமைத்ததுடன் மேலும் 28 தியாகிகளுக்கு சிலைகளும், 12 அரங்கங்களும் அமைத்து வருகிறார்கள்.  ஆனால் அதிமுக 10 ஆண்டு கால ஆட்சியில் 25 தியாகிகளுக்கான சிலைகள் மட்டுமே அமைக்கப்பட்டன என்பது நினைவுகூரத்தக்கது. இந்த விவரங்கள், இந்திய நாட்டுக்கே வழி காட்டும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டுக்கு உழைத்த நல்லோரை எல்லாம் போற்றி வரும் மாட்சிகளை எடுத்துரைக்கும் சிறந்த சாட்சிகள் ஆகும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *