சென்னை, ஜூன்.30- பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு விலை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.2.5 கோடி வரை கிடைக்கும்.
பரந்தூர் விமான நிலையம்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 13 கிராமங்களை உள்ளடக்கி சென்னையின் 2ஆவது பசுமை வழி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.இதற்காக சுமார் 3 ஆயிரத்து 31 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில் அதற்கான பணிகள் தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
விமான நிலைய கட்டுமான பணிகளை 4 கட்டங்களாக பிரித்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்ட கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
விலை நிர்ணயம்
இந்தநிலையில் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள நிலங்களுக்கான விலையை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.அதன்படி, கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள 3,331.25 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2.57 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, குறிப்பிட்ட நிலம் எந்த பகுதிக்குள் வருகிறது, குறிப்பிட்ட அந்த பகுதியில் ஒரு ஏக்கருக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலை விவரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு கணக்கீடு செய்யப்பட உள்ளது.
இழப்பீட்டு தொகை
இழப்பீட்டு தொகை இறுதி செய்யப்பட்டதும், உடனடியாக அந்த தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு அந்த அரசாணையில் தெரிவித்துள்ளது