சுயமருந்து கலாச்சாரமும், பாதிப்புகளும்!

viduthalai
5 Min Read

பேரா.முனைவர்
இரா. செந்தாமரை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி,
திருச்சி

மருத்துவம்

நோயின்றி வாழவேண்டும் என்பது தான் நம் ஒவ்வொருவருடைய எண்ணமாக இருக்கின்றது. ஆனால் அதற்கான வாழ்வியல் நெறிமுறைகளையும் பழக்கவழக்கங்களையும் நாம் சரியாக கடைப்பிடிக்கின்றோமா என்றால் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது. இன்றைக்கு படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கின்றது. தொழில்நுட்ப வளர்ச்சி அபரிமிதமான உச்சத்தை எட்டியிருக்கின்றது. மருத்துவ வளர்ச்சி எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு புதிய உயரத்தை அடைந்திருக்கின்றது. ஆனால் இன்றைக்கும் சளி, காய்ச்சல், தலைவலி என்றால் அருகிலுள்ள பெட்டிக்கடைகளில், காலாவதி தேதிகூட குறிப்பிடப்படாத மருந்துகளை படித்தவர்களேகூட வாங்கி பயன்படுத்தக்கூடிய அவல நிலை இருக்கின்றது.

அதுமட்டுமல்ல, அவர் இந்த மருந்தை பயன்படுத்தினார் முகம் பொலிவானது. இவர் இந்த மாத்திரையை உட்கொண்டார் உடல் எடை குறைந்து விட்டது என்று மற்றவர் பயன்படுத்தக்கூடிய மருந்து மாத்திரைகளை தாமாகவே எடுத்துக்கொள்கின்றனர். இன்னும் மெத்தப்படித்தவர்கள் ஒருபடி மேலே சென்று கூகுளில் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இதய நோய்களுக்கு மருந்து மாத்திரைகளை தேடிப்பார்த்து பயன்படுத்துகின்றனர். இதன் விளைவுதான் நாளுக்கு நாள் ஊடகங்களில் வரும் திடீர் உயிரிழப்புக்கள்.

சுய மருந்து

சுய மருந்து என்பது மருந்துகள், மூலிகைகள் மற்றும் வீட்டு வைத்தியங்களை ஒருவரின் சொந்த முயற்சியிலோ அல்லது மற்றொரு நபரின் ஆலோசனையிலோ மருத்துவரை அணுகாமல் சுயமாக எடுத்துக்கொள்வது ஆகும்.

சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்வதற்கான காரணங்கள்

மருந்துகளைப் பற்றிய அரை குறை அறிவை பெற்றிருத்தல். முன் அனுபவம், சுலபமாகக் கிடைப்பது, மருத்துவர், மருந்தாளுநர் அல்லாத மற்ற பணியாளர்களை அணுகுதல், மருத்துவ ஆலோசனை பெற போதிய பொருளாதார வசதியின்மை, போதிய நேரமின்மை, நோயாளியின் தனிப்பட்ட விஷயங்களை பரிமாறுவதற்கான அச்சம், மருந்துகள் பற்றிய ஊடக விளம்பரங்கள், தகவல் சுரண்டல்கள்.

ஏன் சுயமாக மருந்துகளை
எடுத்துக்கொள்ளக் கூடாது?

மனிதர்கள் ஒரே விதமான உடற்கூறியலை கொண்டிருந்தாலும் ஒரே மருந்து அனைவருக்கும் ஒத்துவரும் என்று கூற முடியாது. குழந்தைகள், முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் என ஒவ்வொருவருக்கும் அவர்களின் உடல்நிலைக்கு ஏற்றவாறு மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும். வயது, மருந்தை எடுத்துக்கொள்ளும் கால அளவு, நேரம், மருந்தின் தன்மை, மருந்தின் அளவு, நோயாளியின் நிலை, இணைப்பு நோய்கள் மற்றும் நோயாளி எந்தெந்த மருந்துகளை தொடர்ந்து எடுத்து வருகிறார் போன்ற பலவற்றையும் ஆராய்ந்துதான் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் நம்முடைய எண்ணத்திற்கு ஏற்றாற்போல் மருந்துகளை அவ்வாறு எடுத்துக்கொண்டால் பக்கவிளைவுகளும், எதிர்விளைவுகளும் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

ஆன்டிபயாடிக்…

உலகளவில் குறிப்பாக வளரும் நாடுகளில் மருந்துச்சீட்டு இல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகள் கிடைக்கின்றன. இதனை பயன்படுத்தும் மக்கள் அதனை உட்கொள்ளும் கால அளவு, நேரம், அதிகப்படியான மருந்தின் பக்க விளைவு, எதிர் விளைவு குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாமல் அவற்றை எடுத்துக்கொள்வதால் நோய்க்கிருமிகளின் எதிர்ப்பு அதிகரித்தல், தோல் நோய், அதிக உணர் திறன் மற்றும் ஒவ்வாமை போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

இருமல் மருந்துகள்

இருமல் என்பது நோய்க்கிருமிகள், தூசு. காற்று மாசு போன்றவற்றில் இருந்து நம் உடலில் காப்பாற்றிக் கொள்ள இயற்கையாகவே அமைந்துள்ள பாதுகாப்பு செயல்முறை என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தொண்டையிலிருந்து நுரையீரலில் கடைசி பாகமான மூச்சுக்குழல் வரை எங்கு வேண்டுமானாலும் இருமல் தொற்று இருக்கலாம். இருமல் தொற்று எங்கே இருக்கிறது என்பதை கண்டறிந்த பின்னரே மருத்துவர் சிகிச்சை அளிப்பார்கள். சாதாரண இருமலுக்கு மருந்தோ, சிகிச்சையோ எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. உணவோ, குடிநீரோ எடுத்துக்கொள்ள முடியாத நிலை, பேசவோ தூங்கவோ முடியாத அளவுக்கு தொடர்ந்து அன்றாட வாழ்க்கை முறைகளை பாதிக்கும் அளவிற்கு இருந்தால் மட்டுமே இருமல் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இருமல் மருந்துகள் குறிப்பாக Over The Count (OTC) இருமல் மருந்துகள் Dextromethorphan, Guaifenesin, Carbinoxamine, Brompheniramine, Cetirizine போன்ற மூலக்கூறுகள் இருமல் மருத்துகளில் இருக்கின்றன. இவைகளை அதிகம் எடுத்துக்கொண்டால் தலைவலி, தூக்கம், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வாய் வறட்சி மற்றும் தலைசுற்றல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். சில இருமல் மருந்துகளில் அதிக தூக்கத்தை ஏற்படுத்துகின்ற Codeine, வலி நிவாரணியாகவும் கடுமையான இருமலுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இது போதையை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.

அரியானா மாநிலத்தில் 66 குழந்தைகளும் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளும் இருமல் மருந்தால் உயிரிழந்த சம்பவங்களை இன்றும் நினைத்தால் இதயம் கனக்கிறது. இருமல் மருந்துகளை குறிப்பிடப்பட்ட கால அளவில் பரிந்துரைக்கப்பட்ட அளவை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். இருமல் அதிகமாக இருப்பதால் ஒரே நேரத்தில் அதிக அளவை எடுத்துக்கொள்ளக்கூடாது. குழந்தைகளுக்கு மருத்துவரின் பரிந்துரை யில்லாமல் இருமல் மருந்துகளை கட்டாயம் கொடுக்கக்கூடாது.

பாதிப்புகள்

சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்வதால் தலைவலி, மயக்கம், தூக்கமின்மை, மலச்சிக்கல், தோல்களில் அரிப்பு, வயிற்றுப் போக்கு, குமட்டல் மற்றும் வாந்தி, வாய் உலர்ந்து போதல், அதிகப்படியான சிறுநீர் வெளியேறுதல், சில நேரங்களில் உயிரிழப்பும் கூட ஏற்படும்.

தற்பொழுது மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உடலில் ஊட்டச்சத்தை சமாளிக்க வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அடங்கிய மருந்து மாத்திரைகளை தாங்களே எடுத்துக்கொள்கிறார்கள். குறிப்பாக பெண்கள் இது போன்ற மருந்துகளை அதிக அளவு எடுத்துக்கொள்கின்றார்கள். சைவ உணவு உண்பவர்களுக்கு multi vitamin அவசியம்தான். ஆனால் ஒரே dose அனைவருக்கும் பொருந்தாது. மருத்துவர் பரிந்துரைக்கும் கூடுதல் ஊட்டச்சத்து மருந்துகளை குறிப்பிட்ட அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். வைட்டமின் E மற்றும் ஒமேகா 3 போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை அதிகப்படியாக உட்கொள்வதால் அது உடலில் படிந்து விடும். உடலிலிருந்து வெளியேறாமல் மோசமான விளைவுகள் ஏற்படுத்தும்.

வைட்டமின் A அதிகமாக எடுத்துக்கொள்வதால் எலும்புகளின் அடர்த்தி குறைதல் மற்றும் பலவீனமடைதல் போன்ற பிரச்சினைகளும் வைட்டமின் E காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு, தசைகள் பலவீனமடைதல் மற்றும் அதிக இரத்தக்கசிவு போன்றவைகளும் ஏற்படக்கூடும். வைட்டமின் B இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. ஆனால் இவை நீரிழிவு நோயாளிகளுக்கு வழக்கமான மருந்துகளுடன் கொடுக்கப்படுகிறது. அவர்கள் தனியாக இதனை எடுத்துக் கொள்ளக் கூடாது. வைட்டமின் D அதிக அளவு இயற்கை ஆதாரமான சூரியனிடமிருந்து பெறப்படுகிறது. ஆனால் இன்று உடல் உழைப்பு குறைந்து அடைபட்ட இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் சூழல் வைட்டமின் D உட்கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதனை அதிகளவு எடுத்துக்கொண்டால் சுவாசிப்பதில் சிரமம், செரிமானக்கோளாறு, சோர்வு, தலைசுற்றல் போன்றவை ஏற்படுகிறது. கால்சியம் அதிகம் எடுத்துக்கொண்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. இதயத் தமனிகளை கடினப்படுத்துகிறது.

இவ்வாறு உயிர் காக்கும் மருந்துகளே உயிரை பறிக்கும் மருந்துகளாக மாறக்கூடிய பேராபத்து சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதால் ஏற்படுகின்றது. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல அரசாங்கம் பல சட்டதிட்டங்களையும் நலத்திட்டங்களையும் செயல்படுத்தினாலும் மருத்துவர். மருந்தாளுநர், நலவாழ்வுத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அதற்கு சரியான ஒத்துழைப்பை வழங்கினால்தான் சுயமருந்து கலாச்சாரத்தை ஒழிக்க முடியும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *