திருச்செங்கோடு, ஜூலை 29, ”எங்களை எதிர்க்க எதிர்க்கத்தான் அதிக பலத்துடன் எழுந்து வருவோம் என்பதை கொள்கை எதிரிகளுக்கு அறிவிக்கக் கடமைப்பட்டி ருக்கிறோம்” என்று திருச்செங்கோட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை ஆற்றினார்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு விழா – திறந்த வெளி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நிறைவுரையாற்றினார். உடன்: நாமக்கல் மேற்கு மாவட்ட தி.முக. செயலாளர் கே.எஸ்.மூர்த்தி, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், மேட்டூர் கழக காப்பாளர் பழனி.புள்ளையண்ணன், திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியாரியல் பேருரையாளர் பேராசிரியர் ப. காளிமுத்து, வழக்குரைஞர் ப. இளங்கோ, வீரமணி ராஜூ , ஆனந்தகுமார் கணேசன், வெ. மோகன் மற்றும் பல்வேறு கட்சிப் பொறுப்பாளர்கள் உள்ளனர். (திருச்செங்கோடு 28.6.2025)
திருச்செங்கோடா – கழகக் கொடிகளின் காடா!
நாமக்கல் கழக மாவட்டம் சார்பில் திருச்செங்கோட்டில், சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு – ”குடிஅரசு” இதழ் நூற்றாண்டு நிறைவு விழாக்கள், 28.06.2025 அன்று மாலை 6 மணியளவில், சங்ககிரி முதன்மைச் சாலையில், அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் திறந்தவெளி மாநாடாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருச்செங்கோடா – கழகக் கொடிகளின் காடா என்று வியக்கும் வண்ணம், சாலைகளின் இருமருங்கிலும் எங்கெங்குக் காணினும் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தன. அத்துடன் நிகழ்ச்சியை விவரிக்கும் பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. 360 டிகிரியில் கழகக் கொடிகள் கட்டிய வட்ட வடிவ கொடி அலங்காரப் பதாகைகள் கண்களைப் பறித்தன. நான்கு சாலை சந்திப்புகளின் நடுவில் இருக்கும் வட்டவடிவ (ரவுண்டானா) பூங்காவைச் சுற்றிலும் கழகக் கொடிகள் படபடவெனப் பறந்தது கண்கொள்ளாக் காட்சிதான். ஏறக்குறைய ஊரிலிருக்கும் அனைவருக்குமே இப்படியொரு நிகழ்வு நடப்பதை விளம்பரம் செய்யுமளவுக்கு இக்காட்சிகள் அமைந்திருந்தன.
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த திறந்தவெளி மாநாட்டில் மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆனந்தகுமார் கணேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பெரியாரியல் பேருரையாளர் பேராசிரியர் ப.காளிமுத்து “சுயமரியாதை இயக்கமும், சமதர்மமும்” எனும் தலைப்பிலும், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், “சுயமரியாதை இயக்கம் சந்தித்த எதிர்ப்புகள்” எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.
கழகத் தலைவருக்கு எடைக்கு எடை நாணயங்கள்!
நிகழ்வின் தொடக்கத்தில் தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன் உணர்ச்சி கொப்பளிக்கும் கொள்கை முழக்கமிட, தோழர்கள் அவற்றை அதே உணர்ச்சியுடன் எதிரொலித்தனர். தொடர்ந்து ஆசிரியர் ஒருபக்க தராசில் அமரவைக்கப்பட்டார். அடுத்த தராசில் நாணயங்கள் வைக்கப்பட்டன. ஆசிரியரின் எடைக்கு சமமாக ரூபாய் 50,000/- மதிப்புள்ள நாணயங்கள் தேவைப்பட்டன. தொடர்ந்து பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க. சண்முகம் ஆசிரியருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார். அத்துடன், பெரியார் உலகம் நன்கொடையாக ரூபாய் 50,000/-, ‘விடுதலை’ அரையாண்டு சந்தா ஒன்றும் வழங்கினார். மாநாட்டின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன் கழகத்தலைவருக்கு ஆடையணிவித்து மரியாதை செய்தார். முன்னதாக, 850/- ரூபாய் மதிப்புள்ள 6 புத்தகங்கள், ரூபாய் 600/-க்கு உரிய தொகை கொடுத்தவர்களுக்குக் கழகத் தலைவர் வழங்கினார்.
தந்தை பெரியார்தான்
என்றைக்கும் வெற்றி பெறுவார்!
என்றைக்கும் வெற்றி பெறுவார்!
இறுதியாக கழகத் தலைவர் எழுச்சி உரையாற்றினார். ‘‘தொடக்கத்தில், எடைக்கு எடை நாணயங்கள் வழங்கப்படுவது எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. இது எதிர்பாராதது. பெரியார் காலம் தொடங்கி இன்று வரை நன்கொடைகள் எங்கள் வீட்டுக்குப் போகாது. நாட்டுக்குத்தான் சென்று கொண்டு இருக்கின்றது” என்று குறிப்பிட்டார். மேலும் அவர், ‘‘திருச்செங்கோட்டில் புதிய முகங்களை பார்க்கிறேன்; ஆனால் திருச்செங்கோடு எனக்குப் புதிதல்ல. வழக்கமாக இங்கே கோயிலுக்கு முன்புதான் கூட்டங்கள் நடைபெறும். அன்றைக்கு கலகம் இல்லாமல் கூட்டம் நடக்காது. கூட்டம் நடக்கும்போது பன்றியை விரட்டி விடுவார்கள்; கற்களை எறிந்து கலகம் செய்தார்கள்; இன்றைக்கு என்னை எடைபோட்டு, எடைக்கு எடை நாணயங்கள் வழங்கியிருக்கிறார்கள். ஆகவே, என்றைக்கும் தந்தை பெரியார்தான் வெற்றி பெறுவார்” என்று ஒரு பிரகடனம் போல அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, சுயமரியாதை இயக்கத்தின் 100 ஆண்டு கால வரலாற்றை சுருங்கச் சொல்லி, ஆழமாகப் புரியவைத்தார். மேலும் அவர், “இதையெல்லாம் தாண்டித்தான் இந்த இயக்கம் வளர்ந்திருக்கின்றது” என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தொடர்ந்து, நீதிக்கட்சியை நினைவுபடுத்தி மிகமுக்கியமான ஒரு தகவலை பகிர்ந்துகொண்டார். அதாவது, ”நீதிக்கட்சி ஆட்சியில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகஇருந்த டாக்டர் சுப்பராயன், இந்த திருச்செங்கோட்டையைச் சேர்ந்தவர்தான்” என்றும், என்.கே.பி.வேலு, பரமசிவன், வரதராஜூலு, முனியப்பன், சங்கரலிங்கம், தராசு மணியம், சாந்தலிங்கம் என்று திருச்செங்கோட்டைச் சேர்ந்த தலைவர்களின் பட்டியலை எடுத்தியம்பி, சுயமரியாதை இயக்கத்தின் ஆழமான வேர்கள் திருச்செங்கோட்டில் வேரூன்றி இருப்பதை சுட்டிக்காட்டினார்.
‘‘திராவிட மாடல்’’ அரசின் ஆகச்சிறந்த சாதனைகள்!
திராவிடர் இயக்கத்தின் 100 ஆண்டுகால வரலாற்றில் மிகமுக்கிய ஒரு சாதனையான பகலுணவுத் திட்டம் பற்றி, ஒரு பருந்துப் பார்வை போல சொல்லிச் சென்றார். அதாவது, 1920 இல் சர்.பிட்டி தியாகராயர் சென்னை மாகாணத்தில் மாநகராட்சிப் பள்ளிகளில் கொண்டு வந்தது; பின்னர் கல்வி வள்ளல் காமராசர் அரசுப் பள்ளிகளில் கொண்டு வந்தது; எம்.ஜி.ஆர். அதை சத்துணவு என்று பெயர் மாற்றியது; முத்தமிழறிஞர் கலைஞர் உண்மையாகவே சத்துணவாக மாற்றியது; இன்று ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் பகலுணவுடன் காலைச் சிற்றுண்டியும் சேர்த்து வழங்கி வருவது என்று அடுக்கிவிட்டு, இதனால் ஏற்பட்ட கல்விப் புரட்சியை சுட்டிக்காட்டினார். இன்றைக்கு (28.06.20250 ஒரு முக்கியமான நாள் என்று சொல்லி நிறுத்தி, “அந்த பகலுணவு அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டிருக்கிறது” என்று அந்த முக்கியத்துவத்தை அறிவித்தார்.
ராமனை செருப்பால் அடித்தால் ஓட்டு விழுமா?
நீண்ட நெடிய இந்த வரலாற்றில்தான், ”இன்றைக்கு சிலர் கடவுள்களை தூக்கிக்கொண்டு வருகிறார்கள்” என்று பூடகமாகச் சொல்லி, 1971 இல் நடந்த தேர்தல் வரலாற்றை கோடிட்டுக் காட்டினார். ‘‘ராமனை செருப்பால் அடிப்பதற்கு முன்பு தி.மு.க. பெற்ற இடங்கள் 138, செருப்பால் அடித்த பிறகு 184” என்ற அரிய அரசியல் வரலாற்றை எடுத்தியம்பி, அன்றைக்கு பம்பாயிலிருந்த வந்த ‘‘கரண்ட்” பத்திரிகை வியந்து, “ராமனை செருப்பால் அடித்தால் ஓட்டு விழுமா?” என்று எழுதியிருந்தை குறிப்பிட்டார். சுயமரியாதை இயக்கம் பெண்களுக்கு செய்திருக்கும் சாதனைகளையும், 1921 இல் பெண்களுக்கு ஓட்டுரிமை; 1929 இல் பெண்களுக்கு சொத்துரிமை தீர்மானம்; 1954 இல் புரட்சியாளர் அம்பேத்கரால் முடியாததை 1989 இல் கலைஞர் தமிழ்நாட்டில் சாதித்துக் காட்டியது; 2004 இல் இந்தியா முழுவதும் யு.பி.ஏ.அரசின் மூலம் அதே கலைஞர் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் கொண்டு வரக்காரணமாக இருந்தது என வரிசையாக அடுக்கினார். பெண்கள் உளப்பூர்வமாக கைதட்டினர். ஆண்களும்தான். இந்த வரலாற்றில் இன்றைக்கு அ.தி.மு.க. அடமானம் வைக்கப்பட்டிருப்பதையும் மறக்காமல் தாய்கழகம் என்ற உரிமையுடன் வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார். மேலும் அவர், ”ஜாதியைக் காப்பாற்றத்தான் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. போன்ற அமைப்புகள். ஜாதியை வேருடன் அழிப்பதுதான் தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம். ஆகவே நீதிக்கட்சியின் நீட்சியான தி.மு.க.வுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வாக்கு செலுத்துங்கள். இது எங்களுக்காக அல்ல; உங்களுக்காக; உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக என்று அடுக்கி, தனது உரையை நிறைவு செய்தார்.
நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த தோழர்கள்!
இந்நிகழ்வில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர், 103 வயதான பொத்தனூர் க. சண்முகம், அதே 103 வயதான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் ஏ.வி. தங்கவேல், நாமக்கல் மாவட்டத் தலைவர் குமார், செயலாளர் வழக்குரைஞர் பெரியசாமி, திராவிடர் கழக மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஈரோடு சண்முகம், தி.மு.க. மேற்கு நகரப் பொறுப்பாளர் நடேசன், தி.மு.க. வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தங்கவேல், தி.மு.க. தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் தாமரைச் செல்வன், ஆதித்தமிழர் பேரவை பொறுப்பாளர் சரவணகுமார், சி.பி.எம்.நகரச் செயலாளர் சீனிவாசன், கொங்கு மக்கள் தேசியக்கட்சி மாவட்டச் செயலாளர் ராயல் செந்தில், தீரன் தொழிற்சங்கப் பேரவை மாநில செயலாளர் கொங்கு சோமகன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டுப் பணிகளை முன்னின்று சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன். திராவிட முன்னேற்றக் கழக நாமக்கல் மாவட்ட செயலாளர் கே.எஸ். மூர்த்தி மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி கலந்து கொண்டனர். மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் வழக்குரைஞர் இளங்கோ இணைப்புரை வழங்கினார். கலந்து கொண்டார்கள். திருச்செங்கோடு நகரக் கழக செயலாளர் வே மோகன அவர்கள் நன்றி கூறினார். நாமக்கல், சேலம், மேட்டூர், ஆத்தூர், கரூர் ஆகிய மாவட்டங்களின் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் ஏராளமாக இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.