தமிழ்நாடு காவல்துறை சமீபத்தில் மிகப்பெரிய போதைப் பொருள் வலைப் பின்னலை கண்டுபிடித்துள்ளது
இதன் துவக்கம் எங்கே? கோவையில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக அதிமுக அய்.டி. விங் நிர்வாகி பிரசாத்குமார் கைது செய்யப்பட்டார். இந்தக் கைது நடவடிக்கை தமிழ்நாட்டில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், “ஒருவேளை இந்த வழக்கில் திமுக அய்.டி.விங் நிர்வாகி ஒருவர் கைதாகியிருந்தால் என்ன நடந்திருக்கும்?” என்ற கேள்வி சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
திமுக நிர்வாகி சிக்கியிருந்தால், இந்த விவகாரம் நிச்சயம் ஒரு மாதத்திற்கு தேசிய செய்தியாகியிருக்கும். பிரதமர் நரேந்திர மோடி பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் கூட இதுகுறித்து பேசவாய்ப்புண்டு
பாஜகவின் தேசிய மற்றும் தமிழ்நாடு தலைவர்கள் இரவு பகலாக விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, திமுகவை கடுமையாக விமர்சித்திருப்பார்கள். பாஜகவின் அகில இந்திய கொள்கைப் பரப்பு ஊடகம் போல செயல்படும் ஏ.என்.அய். (ANI) போன்ற முதன்மை செய்தி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கானோரிடம் பேட்டி எடுத்து, ஆயிரக்கணக்கான பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கும்.
முதல் தகவல் அறிக்கையை அமலாக்கத்துறை சென்னை பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு எடுத்து, ஆளும் கட்சியில் உள்ள முக்கியப் புள்ளிகளின் வீடுகளை வாரக்கணக்கில் சோதனை செய்திருப்பார்கள். அண்ணாமலை போன்ற தலைவர்கள் ஊடகங்களில் அமர்ந்து, “தேசப் பாதுகாப்புக்கே ஆபத்து” என்று பேசியிருப்பார்கள்.
போதைப்பொருள் ஒழிப்புத் துறை (NCB) இதை ஒரு பெரிய அரசியல் பிரச்சினையாக மாற்றியிருக்கும். NCB-யின் தலைமைப் பொறுப்பில் இருந்த அதிகாரி, தினசரி தேசிய ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்து, இந்த விவகாரத்தை இமயமலை உயரமாக்கியிருப்பார்.
கடந்த ஆண்டு டில்லியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திமுக பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஒன்றிய அரசின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாகப் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஜாபர் சாதிக் திமுகவில் பொறுப்பில் இருந்த ஒரே காரணத்தால், போதைப்பொருள் ஒழிப்புத் துறையே தரமிறங்கி அரசியல் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன. தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் வரை ஜாபர் சாதிக்குடன் தொடர்புபடுத்தி, மாநில ஆட்சிக்கு எதிராக திட்டமிட்டு சதித் திட்டம் தீட்டி, பொய்களை பரப்பி அவமானப்படுத்தும் வேலையைத் துணிச்சலாகச் செய்தது ஒன்றிய அரசின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு என்று பரவலாகக் கூறப்பட்டது.
எட்டு மாதங்கள் கடந்த பிறகும் ஜாபர் சாதிக்கிற்கு எதிராக ஒரே ஓர் ஆதாரத்தைக்கூட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை. ஜாபர் சாதிக்கின் ஜாமீன் உத்தரவைப் படித்தால், போதைப்பொருள் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணையின் போது போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் எவ்வளவு அவமானப்பட்டிருப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
பாஜகவுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்குமென்றால், போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கூட NCB அரசியல் அடியாளாக மாறி விடுகிறது என்பதற்கு ஜாபர் சாதிக் வழக்கு ஓர் உதாரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆனால், கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட கோக்கைன் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை அப்படியெல்லாம் செயல்படாமல், சட்டப்படி விசாரித்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையையும், சட்டபூர்வமான அணுகுமுறையையும் தமிழ்நாடு காவல்துறை கடைப்பிடிப்பதை எடுத்துக்காட்டுகிறது.
வட மாநிலங்களில் குறிப்பாக குஜராத்தில் போதைப் பொருள் கடத்தல் என்பது சர்வ சாதாரணம்.
கடந்த அய்ந்து ஆண்டுகளில் குஜராத் மற்றும் மகாராட்டிர துறைமுகங்களில் ரூ.11,311 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் என்பது சாதாரணமானதுதானா? இதில் குஜராத்தில் மட்டும் ரூ.7350 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் வர்த்தகம் நடந்துள்ளது.
உண்மை இவ்வாறு இருக்க தி.மு.க. ஆட்சியில் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்தால் காற்றடித்து ஊதிப் பெருக்கச் செய்யும் அரசியலை என்ன சொல்ல!