பொறுத்துக்கொள்ள முடியாத இன எதிரிகள் ‘திராவிட மாடல்’ ஆட்சியின்மீது கோபப்படுகிறார்கள்

viduthalai
14 Min Read

நாள்தோறும் சாதனைகள்; ஒரு சாதனையைப் பாராட்டி,
வரவேற்று எழுதுவதற்குள், மேலும் இரண்டு சாதனைகள்!

சென்னை வில்லிவாக்கம்: செம்மொழி நாள் விழாப் பொதுக்கூட்டத்தில்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விளக்கவுரை

சென்னை, ஜூன் 28 இன்றைக்குத் ‘திராவிட மாடல்’ ஆட்சிமீது ஏன் கோபப்படுகிறார்கள்? மீண்டும் இந்த ஆட்சி வரக்கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்? ஆரியம் ஏன் சீறுகிறது? என்று சொன்னால் நண்பர்களே, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாள்தோறும் சாதனைகளைச் செய்துகொண்டிருக்கின்றார். ஒரு சாதனையைப் பாராட்டி, வரவேற்று எழுதுவதற்குள், இன்னும் இரண்டு சாதனைகளைச் செய்துவிடுகிறார். இதனைப்  பொறுத்துக்கொள்ள முடியாத இன எதிரிகள் ‘திராவிட மாடல்’ ஆட்சியின்மீது கோபப்படுகிறார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை வில்லிவாக்கம்: முத்தமிழறிஞரின் (பிறந்த நாள்) செம்மொழி  நாள் விழாப் பொதுக்கூட்டத்தில்…

கடந்த 24.6.2025 அன்று மாலை சென்னை வில்லிவாக்கத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞரின் (பிறந்த நாள்) செம்மொழி  நாள் விழாப் பொதுக்கூட்டத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பெரியார் திடலில், தமிழை அர்ச்சனை மொழியாக்க வலியுறுத்தி கலைஞர் அந்த மாநாட்டை நடத்தினார். ‘‘முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் முருகப்பெரு மானை’’ என்றைக்காவது தமிழ் குடமுழுக்கோடு கோபுரத்தில் ஏற்றி இருக்கிறார்களா?

‘‘தமிழில் முதன்முறையாக குடமுழுக்கு நடைபெறவிருக்கிறது!’’

நம்முடைய அமைச்சர் முன்னிலையில்தான், இந்தத்  ‘திராவிட மாடல்’ ஆட்சியில் தான் ‘‘தமிழில் முதன்முறையாக குடமுழுக்கு’’ நடைபெறவிருக்கிறது.

நான் இப்படி குறிப்பிட்டுப் பேசுவதால் உடனே, நாளைக்குச் செய்தியாக, ‘‘வீரமணி மாறிவிட்டார்’’ என்று வெளியிட்டு விடக் கூடாது. நாங்கள் மாறவில்லை. தமிழ் மொழியை நீஷ பாஷை என்று சொல்லி, நம்மை யெல்லாம் ஒதுக்கினார்கள் அல்லவா!

வெள்ளைக்காரர்கள் என்றைக்காவது தமிழ்மொழியை குறை சொல்லியிருக்கிறார்களா?

ஆங்கில மொழி, நம்மை ஆதிக்கம் செய்த வெள்ளைக்காரர்களின் மொழிதான். ஆனால், வெள்ளைக்காரர்கள் என்றைக்காவது தமிழ்மொழியை குறை சொல்லியிருக்கிறார்களா, என்றால், கிடையவே கிடையாது.

ஜி.யூ. போப் போன்ற அறிஞர்கள் திருக்குறளை மொழி பெயர்த்துத் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்தார்கள்.

ஆனால், பார்ப்பனர்கள் தமிழ் மொழியை நீஷ பாஷை என்று சொன்னார்கள்; சமஸ்கிருதத்தை தேவபாஷை என்று சொன்னார்கள்.

2004 ஆம் ஆண்டில் தமிழ் மொழி செம்மொழித் தகுதியை பெற்றது!

அதற்குப் பதில் சொல்லித்தான் நமது கலைஞர் அவர்கள், தமிழ் மொழி, செம்மொழி என்று இந்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்து 2004 ஆம் ஆண்டில் அந்தப் பெருமையைப் பெற்றுத் தந்தார்.

ஒரு நிகழ்வைச் சொன்னால், உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.

கல்யாண மந்திரத்திற்குப் பதில்,
கருமாதி மந்திரம்!

மதுரையில் நடைபெற்ற ஒரு வைதீக திருமணத்தில், இளம் புரோகிதர் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தத் திருமணத்திற்கு சோமசுந்தர பாரதியாரும் சென்றிருந்தார். புரோகிதரின் மந்திரத்தைக் கேட்ட பாரதியார், ‘‘ஏய், மந்திரம் சொல்வதை நிறுத்து’’ என்று சொல்லி, வேகமாக எழுந்து சென்றார்.

என்ன, இவ்வளவு பெரிய மனிதர், இப்படி கத்துகிறாரே? என்று எல்லோரும் நினைத்தார்கள்.

வேகமாகச் சென்ற பாரதியார், அந்த இளம் புரோகிதர் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

என்ன, இப்படி அநாகரிகமாக நடந்துகொள்கிறாரே, என்று ஆத்திரத்தோடு கேட்கிறார்கள்.

அப்போது, சோமசுந்தர பாரதியார், ‘‘எல்லோரும் என்மீது கோபப்படுவீர்கள், என்ன இப்படி அநாகரிகமாக நடந்துகொள்கிறேன் என்று. உங்களில் யாருக்கும் சமஸ்கிருதம் தெரியாது. ஆனால், எனக்கு சமஸ்கிருதம் தெரியும். இவ்வளவு நேரமும் மணமக்களின் முன்பு என்ன மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தான் என்றால், கருமாதி மந்திரத்தைத்தான்’’ என்றார்.

உடனே, அந்த இளம் புரோகிதன், ‘‘அய்யா, எனக்குத் தெரியாது. ஒரு விஷயத்தைச் சொல்கிறேன், என்னுடைய அப்பா எனக்கு இரண்டு மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்து, மாற்றி மாற்றி சொல் என்று சொல்லியிருக்கிறார். அதன்படியே, நான் இரண்டு மந்திரத்தைத்தான் கல்யாண வீடாக இருந்தாலும், கருமாதி வீடாக இருந்தாலும் மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டு வருகிறேன் – யாருக்கும் ஒன்றும் தெரியாது என்பதால்’’ என்றார்.

எதையும் ஆதாரத்தோடு சொல்வதுதான் எங்களுடைய வழக்கம்!

இந்த நிகழ்வை அண்ணா அவர்கள் தன்னுடைய ‘‘ஆரிய மாயை’’ புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். எதையும் ஆதாரத்தோடு சொல்வதுதான் எங்களுடைய வழக்கம்.

ஆகவே, சமஸ்கிருத மொழியைப்பற்றி நமக்கு என்னவென்று தெரியாத சூழல் உள்ளது. தமிழ் மொழியை நீஷ பாஷை – நீஷர்கள் பேசக்கூடியது. தமிழ் மொழியைப் பேசினால் தீட்டாகிவிடும் என்று சொன்னவர் சங்கராச்சாரியார்.

காலங்காலமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த தமிழை, கீழே இறக்கி, மேலே சமஸ்கிருதத்தைக் கொண்டு வைத்ததை, மறுபடியும் சமத்துவமாக மதித்து, தமிழும் நீஷ பாஷையல்ல; சமஸ்கிருதமும் தேவ பாஷையல்ல என்று பெருந்தன்மையோடு கலைஞர்  ஒப்புக்கொண்டார்.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி…

2004 ஆம் ஆண்டு, தமிழ் மொழி – செம்மொழி தகுதி பெற்றது. 2005 ஆம் ஆண்டில், சமஸ்கிருத மொழிக்கும் செம்மொழி தகுதி வழங்கப்பட்டது.

‘‘நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் (தர்ப்பைப் புல்லுக்கும்) அங்கே பொசியுமாம்’’ என்பதுதான் நடந்தது.

நான்கு மொழிகள் (கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஒடியா,) செம்மொழி தகுதியைப் பெற்றன.

‘‘தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்; தி.மு.க. ஆட்சியை நாங்கள் எப்படியா வது வீழ்த்திவிடுவோம்; எங்களுக்கு அந்தக் கடவுள் அருள் புரிவார்; இந்தக் கடவுள் அருள் புரிவார்’’ என்று வாய்ச்சவடால் விடுகின்றவர்களைப் பார்த்துச் சொல்கிறோம்.

இன்றைக்குக் காலையில் என்ன செய்தி வெளிவந்திருக்கின்றது தெரியுமா?

கடந்த 10 ஆண்டுகாலத்தில், சமஸ்கிருதத்திற்கு, ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு, அமித்ஷா அரசு எவ்வளவு நிதி கொடுத்திருக்கின்றது என்று சொன்னால், 2,533 கோடி ரூபாய்.

இந்தியாவில் எத்தனை பேர் சமஸ்கிருதம் பேசுகிறார்கள்?

ஒருபோதும் தமிழ்நாட்டில்
அதற்கு இடம் கிடையாது!

‘‘மோடிக்குத் தமிழ் மொழி பிடிக்கும்’’ என்பார்கள். ‘‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’’ என்று பாரதியார் பாடியிருப்பதை,  ‘‘நீர் உயர, நெல் உயர, உயர, உயர’’ என்று எழுதிக் கொடுப்பதை மோடி மேடைகளில் சொல்வார்.

‘‘உயர, உயர’’ என்று பா.ஜ.க.வினர், தமிழ்நாட்டில் உயரலாம் என்றுதான் பார்க்கிறீர்கள். ஆனால், ஒரு போதும் தமிழ்நாட்டில் அதற்கு இடம் கிடையாது.

தமிழ், கன்னடம், மலையாம், தெலுங்கு, ஒடியா ஆகிய அய்ந்து மொழிகளுக்கும் சேர்த்து ஒன்றிய அரசு கொடுத்த நிதி எவ்வளவு தெரியுமா?

வெறும் 147 கோடி ரூபாய்தான்.

வெறும் 24,821 பேர் மட்டும் பேசும் மொழிக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு கொடுத்த நிதி 2,533 கோடி ரூபாய்!

ஆனால், பேசப்படாத மொழியான, செத்த மொழியான, வழக்கொழிந்த மொழியான சமஸ்கிருதத்திற்கு, வெறும் 24,821 பேர் மட்டும் பேசும் மொழிக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு கொடுத்த நிதி எவ்வளவு தெரியுமா?

2,533 கோடி ரூபாய்.

எங்கள் தமிழ் உலகம் முழுவதும் இருக்கக்கூடியது!

ஆனால், எங்கள் தமிழ், சிங்கப்பூரில் ஆட்சி மொழி, எங்கள் தமிழ், மலேசியாவில் ஆட்சி மொழி, எங்கள் தமிழ் உலகம் முழுவதும் இன்றைக்குப் பரவி இருக்கக்கூடியது.

அதுமட்டுமல்ல, தமிழ் மொழிக்கு இருக்கின்ற பெருமை என்பது சாதாரணமா?

தமிழ் மொழியை, எம் மொழி செம்மொழி என்றாக்கி னார். இன்றைக்கு அந்தத் தமிழ் மொழிக்கு உரிய இடம் எங்கே உருவாக்கப்பட்டுள்ளது?

நாளைக்குக் கோபுரத்தின் மேல் வைக்கக்கூடிய அளவிற்கு, திருக்கூடல் நன்னீராட்டு விழா செய்ய விருக்கின்றார் நம்முடைய அமைச்சர்.

எங்களுக்குப் பெருமையல்லவா!

நன்னீராட்டு விழாவில், எங்களுக்குக் கருத்து மாறுபாடு இருக்கலாம்; ஆனால், தமிழ் மொழி அங்கே உயர்கின்றது என்று சொல்லும்போது, எங்களுக்குப் பெருமையல்லவா!

இதுதான் திராவிட ஆட்சி. இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா, இல்லையா?

இதுபோன்று செய்வதினால்தானே, இந்த ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

நம்முடைய அமைச்சர் அவர்கள் உரையாற்றும்போது ஒன்றைச் சொன்னார்.

ஒரு திரிசூலம் மாட்டிக் கொண்டிருக்கின்றது மோடியிடமும், அமித்ஷாவிடமும்.

அது என்ன திரிசூலம் என்றால், கடவுள்களிடம் இருக்கின்ற திரிசூலம் அல்ல; அது வெறும் பொம்மை யாகத்தான் இருக்கும்.

ஒன்றிய பா.ஜ.க. அரசு கொடுக்கும் பணம் யாருடைய பணம்?

ஆனால், இவர்கள் வைத்திருக்கும் திரிசூலம் என்பது – அதிகாரம் எப்படியோ குறுக்கு வழியில் வந்துவிட்டாலும்கூட, மைனாரிட்டி அரசாக இருந்தாலும், நாற்காலியில் ஒரு கால் இல்லை என்றாலும், அதற்கு முட்டுக் கொடுப்பது போன்று, பீகார் நிதிஷ்குமாரையும், ஆந்திரா சந்திரபாபு ஆகியோரைப் பார்த்து நிதியைக் கொடுத்து சரிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களுடைய இன்றைய நிலை என்ன? ஒன்றிய பா.ஜ.க. அரசு கொடுக்கும் பணம் யாருடைய பணம்?

எங்கள் இஷ்டத்திற்குக் கொடுப்போம் என்று சொல்வதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிதியல்ல; பா.ஜ.க.வின் நிதியல்ல;  நம் மக்களுடைய வரிப் பணம்.

எனவேதான், தமிழ் செம்மொழி ஆனது என்பது வெறும் மொழி சிறப்புக்காக அல்ல; அது நம்முடைய உரிமை.

இன்றைய ஆட்சி –  திராவிட மாடல் ஆட்சி என்பது எல்லோருக்கும் உரியது. தாய்மார்கள் எல்லாம் நிம்மதி யாக இருக்கிறார்கள்.

நூறாண்டுகளுக்கு முன்பும் நாற்காலிகள் இருந்தது. பெண்கள் அதில் அமரக்கூடிய உரிமை இருந்ததா? தைரியம் இருந்ததா?

இவ்வளவு ஆண்கள் இருக்கும்போது, பெண்கள் நாற்காலியில் அமர முடியுமா? பெண்களுக்குக் காலில் செருப்புப் போடுவதற்கு அனுமதி இருந்ததா? கேரளா வில், பெண்கள் குடைபிடித்துக் கொண்டு செல்வதற்கு அனுமதி இருந்ததா?

இதோ இந்தக் கூட்டத்தில், நிறைய மகளிர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள். ஆண்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இதுதான் திராவிட இயக்கம் – இதுதான் பெரியாரின் சாதனை – அதுதான் அண்ணாவின் சாதனை – அதுதான் கலைஞருடைய சாதனை- ஸ்டாலினுடைய சாதனை!

இவை அத்தனையும் பெற்றுத் தந்த இயக்கம் – நூறாண்டு கண்ட சுயமரியாதை இயக்கம்  – திராவிட இயக்கமாகும்.

முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்த இயக்கம்!

பெண்களுக்கு வாக்குரிமையை முதன்முதலில் 1921 இல் கொடுத்த ஓர் இயக்கம் – தென்னிந்திய நல உரிமைச் சங்கம் –  நீதிக்கட்சி – பார்ப்பனரல்லாதார் இயக்கமாகும்.

கலைஞருடைய பெருமையை பேசிக்கொண்ட போகலாம். அவர் ஒரு பல்கலைக் கொள்கலன்.

விழுதுகள் வேரைப் பாதுகாக்கின்றன; வேர்கள், விழுதுகளைப் பாராட்டுகின்றன!

ஆலமரம் போன்றவர்கள், பெரியாரும், அண்ணாவும், கலைஞரும்.  அந்த ஆலமரத்தை இன்றைக்கும் அசைக்க முடியாததற்குக் காரணம், இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி – ஸ்டாலின் ஆட்சி என்பது ஆலமர விழுதுகள். விழுதுகள் வேரைப் பாதுகாக்கின்றன; வேர்கள், விழுதுகளைப் பாராட்டுகின்றன.

எந்தக் காலத்திலாவது, இந்தியாவில், தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை உண்டா?

ஹிந்து மதத்தை அவமானப்படுத்துகிறார்கள், ஹிந்து மதத்தைப்பற்றி இழிவாகப் பேசுகிறார்கள் என்று சொல்கிறார்களே – மற்ற மதத்தைவிட, ஹிந்து மதத்தில்தானே பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமல் இருந்தது.

அந்த உரிமையைப் பெற்றுத் தந்தது திராவிட இயக்கம்.

என்னை நீங்கள் எல்லாம் இவ்வளவு உற்சாகப்படுத்து வது என்பது – என்னை என்றால், என்னை மட்டுமல்ல.

பெரியாரின் ஈரோட்டுக் குருகுலத்தில் உருவாக்கப்பட்டவர்கள்!

நாங்கள் எல்லாம் பெரியாரின் ஈரோட்டுக் குரு குலத்தில் உருவாக்கப்பட்டவர்கள். எங்களுக்கு எதிர்நீச்சல் அடித்துத்தான் பழக்கம். பாராட்டைக் கேட்டு எங்களுக்குப் பழக்கமில்லை.

எங்களைப் பார்த்து திட்டுகிறார்கள் பாருங்கள்; விமர்சனம் செய்கிறார்கள் பாருங்கள், அப்போதுதான் நாங்கள் இளமையாகின்றோம் – எதையும் எதிர்த்துச் செய்யக்கூடிய வேகம் வரும்.

ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்கிறேன் –

பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று இந்து லா  வில் கொண்டு வந்தார் ஒன்றிய சட்ட அமைச்சராக இருந்த டாக்டர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர்.

இந்து முன்னணியில் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்கிறார்களா?

பொட்டுக் கட்டுகின்ற, தேவதாசி முறையை ஒழித்துக் கட்டிய இயக்கம் எது?

தமிழ்நாட்டில், திராவிட இயக்கம் இல்லை என்றால், பெண்களை உடன்கட்டை ஏற்றியிருப்பார்களே! கணவனை இழந்த பெண்களை விதவைகள் என்று சொல்லியிருப்பார்களே!

எங்கள் தாய்மார்கள், எங்கள் சகோதரிகளை கோவிலுக்குப் பொட்டு கட்டுகிறோம் – கடவுளுக்கு விட்டுவிடுகின்றோம் என்று சொன்னார்களே – அந்தப் பொட்டுக் கட்டுகின்ற, தேவதாசி முறையை ஒழித்துக் கட்டிய இயக்கம் எது?

இந்தக் கோளாறு, வேறு மதங்களில் உண்டா?

அப்படியானால், அந்த மதத்தைப்பற்றிப் பேசாமல், வேறு எதைப்பற்றி பேசுவது?

என்னை எது தடுக்கிறதோ, எனக்கு என்ன நோய் இருக்கிறதோ, அந்த நோயைக் குணப்படுத்துவதற்காக தடுப்பூசிப் போட்டுக் கொள்ளவேண்டாமா? தடுப்பூசி போட்டால், உடனே எங்கள் மனம் புண்படுகிறது என்று சொல்வீர்களா?

உங்களுக்குப் புத்தி வரவேண்டும் என்பதற்காகத்தான் பெரியார் பாடுபட்டார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம்

நம்முடைய அமைச்சரின் பல செயல்களில் முக்கியமான செயல் என்னவென்றால், திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் 14 ஆம் தேதி,  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தின்படி பணி நியமன ஆணைகளை வழங்கினார் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

‘‘பெரியாருக்கு அரசு மரியாதை கொடுத்தேன்; ஆனால், அவர் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க வில்லை’’ என்று வேதனைப்பட்டார் கலைஞர் அவர்கள்.

உறுதுணையாக இருந்தவர்
நம்முடைய அமைச்சர்!

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்த பெருமை இன்றைய நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சாரும்; அதற்கு உறுதுணையாக இருந்தவர் நம்முடைய அமைச்சர் அவர்கள்.

ஒன்றிய பாஜ.க. அரசு திரிசூலம் வைத்திருக்கின்றது என்று சொன்னேன் அல்லவா –  அந்தத் திரிசூலத்தினை எதற்குப் பயன்படுத்துகின்றனர்?

ஒன்றிய பா.ஜ.க. வைத்திருக்கும்
திரிசூலத்தின் மூன்று முனைகள்!

ஒரு முனை – சி.பி.அய்.

இன்னொரு முனை  – வருமான வரித் துறை

மற்றொரு முனை – அமலாக்கத் துறை

நகைச்சுவை அரசராக இருக்கக்கூடிய பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்கள், ‘‘செல்வத்துள், செல்வத்துள், செல்வத்துள்’’ என்று திருக்குறளில் உள்ளதைப்பற்றிச் சொன்னார்.

அதைச் சொன்னதற்காக, அமலாக்கத் துறையினர் இவரைத் தேடி வந்தாலும், வரலாம்.

பெண்களுக்குச் சொத்துரிமை  வந்தது எப்படி?

இது என்ன கோவிலில் வேண்டியதாலோ அல்லது கும்பாபிசேகம் செய்வதினாலோ வந்ததா? என்றால், இல்லை.

பிரதமர் நேரு, மற்றவர்கள் எல்லாம் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கின்றார்கள். ஒன்றிய சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் அவர்கள் பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கும் சட்டத்தைக் கொண்டு வருகிறார்.

அந்தச் சட்டத்தை நிறைவேற்றவதற்கு வைதிகர்கள் விடவில்லை; ஆரியம் விடவில்லை; ஸநாதனம் விடவில்லை.

சங்கராச்சாரியார், அந்த சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று  சொல்கிறார்.

பிரதமர் நேருவின் ஒப்புதல் வாக்குமூலம்!

அதனுடைய விளைவு – அழுத்தம் அதிகமாக, அதிகமாக, அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த பாபு இராஜேந்திர பிரசாத் அவர்களையே தங்கள் வயப்படுத்தி விட்டார்கள்.

பிரதமராக இருந்த நேரு, ‘‘என்னால் எதுவும் செய்ய முடியாது’’ என்ற தன்னுடைய ஒப்புதல் வாக்குமூலத்தை அம்பேத்கரிடம் சொன்னார்.

மனம் நொந்து பதவி விலகிய
அண்ணல் அம்பேத்கர்!

அம்பேத்கர் அவர்கள் மனம் நொந்து, ‘‘நான் இந்திய அரசமைப்புச் சட்டத்தை வரையறுத்துக் கொடுத்தவன். என்னால், பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்கும் சட்டத்தை  நிறைவேற்ற முடியவில்லை என்றால், நான் ஒன்றிய சட்ட அமைச்சராக இருப்பதற்குத் தயாராக இல்லை. நான் என்னுடைய பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்’’ என்று சொன்னார்.

தனக்குப் பெரிய பதவி கொடுக்கவில்லையே என்று அவர்  சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகவில்லை.

அதனால்தான், பெரியாரும், அம்பேத்கரும் ஒரு நாணயத்தின்  இரண்டு பக்கங்கள்.

அன்றைக்கு அம்பேத்கரால் பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

அதனை வெற்றிகரமாக செய்து முடித்த பெருமைய யாருக்குத் தெரியுமா?

‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’ என்று தன்னை அழைத்துக் கொண்ட கலைஞர் அவர்களுடைய தலை மையில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகம்தான் அதைச் சாதித்தது.

‘‘நடந்ததா? நடந்ததா? நடந்ததா?’’ என்று கேட்பார்!

தி.மு.க.விற்கு, இந்தியா முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. ஆனால், கலைஞர் அவர்கள்,  அரசியல் வியூகத்தில், அழகாக காய் நகர்த்துவார்.  அது எப்படி என்று அவருக்கு நன்றாகத் தெரியும்,

‘‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்’’ (குறள் 517)

விடல் அல்ல; கலைஞர் விடவே மாட்டார். விரட்டிக் கொண்டே இருப்பார். ‘‘நடந்ததா? நடந்ததா? நடந்ததா?’’ என்று கேட்பார்.

2006 ஆம் ஆண்டு, பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்றினார்!

அப்படிபட்ட சூழ்நிலையில், அன்றைக்கு அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில், காங்கிரஸ் பேரியக்கத்தோடு ஒன்றிய ஆட்சியில் பங்கேற்று, 2004 ஆம் ஆண்டு தமிழ் மொழிக்கு செம்மொழி பெருமையைப் பெற்றுத் தந்த சாதனைக்கு அடுத்து,  2006 ஆம் ஆண்டு, பெண்களுக்குச் சொத்துரிமை சட்டத்தை நிறைவேற்றினார்.

இந்த ஆண்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டா கும். 1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை முதல்  மாகாண மாநாட்டில், ‘‘பெண்க ளுக்குச் சொத்துரிமை வேண்டும்’’ என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அம்பேத்கருடைய விருப்பத்தை நிறைவேற்றினார் கலைஞர்!

அப்போது கலைஞர் அவர்களுக்கு 5 வயது. அதே கலைஞர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வந்து, பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டத்தை நிறைவேற்றி னார், மாநில அரசு அளவில்.

ஒன்றிய அரசில், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி யில் இடம்பெற்று, அந்தச் சட்டத்தை நிறைவேற்றினார். அம்பேத்கருடைய விருப்பத்தை நிறைவேற்றினார்.

அன்று, அம்பேத்கரால் செய்ய முடியாத அளவிற்கு ஒரு சூழ்நிலையை உருவாக்கினார்கள் – அந்த இடத்தில் வெற்றி பெற்ற பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதனுடைய ஒப்பற்ற செம்மொழி நாயகராக இருக்கின்ற கலைஞருக்கும் உண்டு.

எனவே, செம்மொழி என்பதும் மனித சமத்துவம்.

அதேபோல, சம உரிமை என்பதும் பெண்களுக்கான சமத்துவம்.

எனவேதான், தாய்மார்கள் எல்லோரும் இன்றைக்கு நிம்மதியாக இருக்கிறார்கள்.

ஒரு குடும்பத்தில், இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் இருந்தால், ஆண்களுக்கு மட்டும்தான் சொத்துகள் சேரும். இது பழைய நிலை – பழைய இந்து லா.

ஆனால், இப்போது அந்தச் சொத்துக்களை நான்கு பங்குகளாகப் பிரித்துக் கொடுக்கவேண்டும்.

இதுவரை கலைஞர் காலத்தில் நடைபெற்றவற்றைச் சொன்னேன்.

‘திராவிட மாடல்’ ஆட்சிமீது
ஏன் கோபப்படுகிறார்கள்?

இன்றைக்குத் ‘திராவிட மாடல்’ ஆட்சிமீது ஏன் கோபப்படுகிறார்கள்? மீண்டும் இந்த ஆட்சி வரக்கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்? ஆரியம் ஏன் சீறுகிறது? என்று சொன்னால் நண்பர்களே,  நாள்தோறும் சாதனைகளைச் செய்துகொண்டிருக்கின்றார். ஒரு சாதனையைப் பாராட்டி, வரவேற்று எழுதுவதற்குள், இன்னும் இரண்டு சாதனைகளைச் செய்துவிடுகிறார். இதனைப்  பொறுத்துக்கொள்ள முடியாத இன எதிரிகள் ‘திராவிட மாடல்’ ஆட்சியின்மீது கோபப்படுகிறார்கள்.

10 விழுக்காடு சலுகை!

இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி என்ன செய்தி ருக்கின்றது என்றால், ‘‘பெண்கள் பெயரால் பத்திரப் பதிவு செய்யப்பட்டால், 10 விழுக்காடு சலுகை’’யை அறிவித்திருக்கிறது.

எனவே, இவ்வளவு பெரிய வாய்ப்பு, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது மகளிருக்கு உண்டா?

ஆகவேதான், இந்த ஆட்சியைக் காப்பாற்றவேண்டும் என்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்காக அல்ல;  எங்களுக்காக அல்ல; அமைச்சருக்காக அல்ல.

உங்களுக்காக, உங்கள் சந்ததிகளுக்காக, உங்கள் வருங்கால பேரப் பிள்ளைகளின் நல்வாழ்வுக்காகத்தான்.

கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொரிந்துகொள்ள மாட்டார்கள் தமிழர்கள். ஏனென்றால், அவர்கள் புத்திசாலிகள்.

நீங்கள் கடவுளை நம்புங்கள்;
நாங்கள் மக்களை நம்புகிறோம்!

ஆகவேதான், இன்றைக்கு எத்தனைக் கடவுள்களைக் கூட்டி வந்தாலும், பா.ஜ.க.வினரின் முயற்சிகள் பலிக்காது. நீங்கள் கடவுளை நம்புங்கள்; நாங்கள் மக்களை நம்புகிறோம்.

மக்களைச் சந்தித்துக் கேட்கிறோம் – மக்கள் இந்த ஆட்சியைப் பாதுகாப்பார்கள்.

இந்த ஆட்சியினுடைய பலம் மக்கள்தான். இந்த இயக்கம் மக்கள் இயக்கமாக இருக்கிறது.

கலைஞர் வாழுகிறார்! கலைஞருடைய பெருமைகள் இன்னும் வளர்ந்துகொண்டே வரும்!

எனவே, பெரியார் வழியில், அண்ணா வழியில், கலைஞர் வழியில், இன்றைய முதலமைச்சருடைய வழியில் – எல்லா வகையிலும் நாம் பெருமை பெறுவோம்! நமக்காக, நமக்காக, நமக்காக! வேறு யாருக்காகவும் அல்ல!

உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *