கேள்வி 1: ஆங்கிலத்தில் பேசும் இந்தியர்கள் வெட்கப்பட வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை என, அந்நிய மொழியில் நமது கலாச்சாரம், பண்பாடு, வரலாற்றை புரிந்து கொள்ள முடியாது என பாஜக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதற்கு பதிலடியாக, காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி ஆங்கிலம் அணை இல்லை. அது ஒரு பாலம், ஆங்கிலம் அவமானது அல்ல. அது அதிகாரமளிக்கும். சங்கிலியை உடைக்கும் கருவி என தெரிவித்துள்ளாரே?
– மன்னை சித்து, மன்னார்குடி
பதில் 1: ராகுல்காந்தியின் பதில் கனக்கச்சிதமானது. அறிவு பூர்வமானது. அமித்ஷாவின் கருத்து எந்த அறிவியல் அறிந்த மனிதர்களாலும் ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.
அவரது அரசு கையாளும் நவீன தொழில்நுட்பம் முனிபுங்கவர்களாலோ, முப்பத்து முக்கோடி தேவர்களாலோ வழங்கப்பட்டதல்ல, R.S.S. என்ற மூன்றெழுத்துக்கு வெட்கப்படுகிறாரா? அதன் மூளையாக இருந்து உள்துறை அமைச்சராக உள்ளாரா அவர்!
கேள்வி 2: சுயமரியாதை மாகாண முதல் மாநில மாநாடு நடைபெற்ற அதே செங்கற்பட்டில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு 04.10.2025 அன்று முழு நாள் மாநாடாக நடைபெறும் என திராவிடர் கழகம் அறிவித்ததை அறிந்த தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும் கையொலி எழுப்பி வரவேற்பது தந்தை பெரியார் கொள்கைக்கு, அவரது தன்னலமற்ற தொண்டுக்குக் கிடைத்த வெற்றி என்று கருதலாமா?
– சு.உமா மகேஸ்வரி, செங்கற்பட்டு.
பதில் 2: உங்கள் மகிழ்ச்சிக்கு நன்றி. சுவரெழுத்துப் பணி போன்றவற்றை விரைவில் தொடங்குவோருக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்!
கேள்வி 3: மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும், உறுதிமொழிக்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், முருக பக்தர்கள் மாநாட்டுத் தீர்மானங்களை அ.தி.மு.க. ஏற்காது என்றும் மேனாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருப்பது ஏற்புடையதா?
– எஸ்.பாபு, மதுரை.
பதில் 3: பரிதாபத்துக்குரிய வகையில் ஆப்பசைத்த நிலை! பெரியார் – அண்ணாவை இப்படி இழிவுபடுத்துவது, எத்தகைய எதிர்ப்பு பூகம்பமாய் வெடிக்கும்!! ‘பெரியார் மண் இது’ என்பதைப் பாடமாக அவர்களுக்கும், அவாளுக்கும் புரியவைக்க வேண்டாமா? பா.ஜ.க.வே அலறுகிறதே!
கேள்வி 4: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் நிகழ்வுகள் இடம்பெறாது என்று நீதிமன்றத்தில் கூறிவிட்டு, ‘தர்மம் காப்போம்’ எனும் பெயரில் ஒளிபரப்பப்பட்ட காட்சிப் பதிவில் பெரியார், அண்ணா படங்களை காண்பித்து அவதூறு வசனங்களை அள்ளி வீசியது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா?
– பி.செல்வி, மானாமதுரை.
பதில் 4: சட்ட நடவடிக்கைகள் – உயர்நீதிமன்ற முந்தைய நடப்புகள்படி, தொடர வேண்டியதுதான் நியாயம்.
கேள்வி 5: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவில், இனமுரசு சத்யராஜ் அவர்கள் ‘பெரியார் ஒளி’ விருது பெற்றுக்கொண்டு பேசுகையில், முருகனுக்காக ஒரு மாநாடு நடத்தி இவர்களை ஏமாற்றிவிட்டோம் என்று நினைக்கிறார்கள். ஆனால், முருகன் உங்களை ஏமாற்றி விடுவார் என்று கூறியிருப்பது 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா?
– இரா.கண்மணி, காஞ்சிபுரம்.
பதில் 5: அதிலென்ன சந்தேகம்? ‘வித்தைகளால்’ தமிழ்நாட்டை மாற்ற முடியாது!
கேள்வி 6: இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடத்தைப் பற்றி குறிப்பாக பெரியார், அண்ணா ஆகியோரைப் பற்றி விமர்சித்து காண்பிக்கப்பட்ட காணொலிக் காட்சிகளை தவிர்த்து இருக்க வேண்டும் என்றும், இந்நிகழ்வு வருத்தம் அளிக்கிறது என்றும் பி.ஜே.பி. கூட்டணியில் அங்கம் வகிக்கும் டி.டி.வி.தினகரன் கூறியிருப்பது சம்பந்தப்பட்டவர்களின் செவிகளுக்கு எட்டுமா?
– எஸ்.கண்ணன், வெங்கோடு.
பதில் 6: மேற்சொன்ன பதிலே இதற்கும்!
கேள்வி 7: ‘நீட்’ தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது என்றும், நீட் எனும் தேர்வுமுறையே ஓர் ஊழல் என்றும் சமூகநீதியின் சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை ஒன்றிய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளுமா?
– எஸ்.ஆர்.வெங்கடேஷ், மேற்கு தாம்பரம்.
பதில் 7: ஒன்றிய அரசு மட்டுமா? உச்சநீதிமன்றமும் கவனத்தில் எடுத்துக்கொண்டால் நீதியும், நியாயமும், மனித உயிர்களும் பிழைக்கும்!
கேள்வி 8: சைபர் குற்றங்களை செய்பவர்களுக்கு எதிராக குண்டர் தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக பயன்படுத்தி வருவதாக உச்ச நீதிமன்றம் பாராட்டு தெரிவித்திருப்பதை இங்குள்ள அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சியினர் உணர்வார்களா?
– ம.அருள்ஜோதி, திருவான்மியூர்.
பதில் 8: கண்ணிருந்தும் பார்க்கத் தவறுபவர்களுக்கு எதுவும் உரைக்காது!
கேள்வி 9: ரயில்வே காலிப்பணியிடங்களில் மேனாள் ஊழியர்களை பணியில் நியமிப்பதற்கு ஒன்றிய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருப்பது, படித்துவிட்டு வேலையின்றி அல்லல்படும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம், எதிர்கால நலன் உள்ளிட்டவை கேள்விக்குறி ஆகிவிடும் அல்லவா?
– க.காமராஜ், செய்யாறு.
பதில் 9: ரயில்வே துறை தண்டவாளத்தை விட்டு கடந்த 10 ஆண்டுகளாகி விட்டதே! அதனால்தான்!!
கேள்வி 10: மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற முருகப் பக்தர்கள் மாநாட்டில், பெரியார், அண்ணா பற்றி விமர்சித்துப் பேசியதை அதிமுக மேனாள் அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட மேனாள் அமைச்சர்கள் எதிர்த்து பொங்கி எழாமல் கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தது ஏன் என தமிழ்நாடு தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி .ஆர்.பி. ராஜா கேள்வி எழுப்பியுள்ளாரே ?
மன்னை சித்து, மன்னார்குடி – 1.
பதில் 10: மேலே உள்ள இது சம்பந்தப்பட்ட கேள்விக்குரிய பதில்தான் இதற்கும்!