நுழைவுத் தேர்வு அச்சத்தால் தன்னுயிர் மாய்த்துக் கொள்ளும் நிகழ்வு கவலையளிக்கும் விதத்தில் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau – NCRB) புள்ளி விவரங்கள் கூறியுள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இந்தியாவில் தற்கொலைகள் குறித்த விரிவான தரவுகளை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதில் நுழைவுத்தேர்வு அச்சம் அல்லது தேர்வு தோல்வியால் ஏற்படும் தற்கொலைகள் பற்றிய தகவல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருவது கவலையளிக்கும் ஒன்றாகும். 2021 ஆம் ஆண்டில் 13,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நாள்தோறும் 35க்கும் அதிகமான தற்கொலைகளை என்ற விகிதத்தில் உள்ளது
NCRB அறிக்கையின்படி, “தேர்வு தோல்வி” என்பது மாணவர்களின் தற்கொலைகளுக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 10,732 மாணவர் தற்கொலைகளில், 864 தற்கொலைகள் “தேர்வு தோல்வி” காரணமாக நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நீட்’, ஜே.இ.இ. போன்ற போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பு மய்யங்கள் உள்ள கோட்டா போன்ற நகரங்களில் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. இத்தகைய தேர்வுகளுக்கான கடுமையான போட்டி, அதிக படிப்பு நேரம், பெற்றோரின் அழுத்தம் மற்றும் மனமகிழ்வு இல்லாதது போன்ற காரணங்கள் மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.
மாநில வாரியாக புள்ளி விவரங்களின்படி மகாராட்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர் தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
பொதுவாக, ஆண் மாணவர்களின் தற்கொலைகள் பெண் மாணவர்களின் தற்கொலைகளை விட அதிகமாக உள்ளன.
கடந்த பத்தாண்டுகளில் (2012-2022) மாணவர்களின் தற்கொலைகள் 96.03% அதிகரித்துள்ளன. 2012 இல் 6,654 ஆக இருந்த மாணவர் தற்கொலைகள், 2022 இல் 13,044 ஆக உயர்ந்தன.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக, இந்தியாவில் இளைஞர்களின் (15-29 வயது) இறப்புக்கான முதல் காரணம் தற்கொலை ஆகும்
உலகளாவிய ஒப்பீடு
15-29 வயது பிரிவில் தற்கொலையால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை (60,700 க்கும் மேல்) இந்தியாவில் அதிகமாக இருப்பது ஆச்சரியமல்ல, ஏனெனில் இந்த வயது பிரிவில் அதிக மக்கள்தொகை இந்தியாவில்தான் உள்ளது. இந்த எண்ணிக்கை சீனாவை விட (10,700) ஆறு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.