25.06.1931 அன்று பிறந்த வி.பி.சிங், மாண்டாவின் ராஜாவாக இருந்தாலும் மண்ணின் மைந்தர்களான அடித்தட்டு மக்களின் உணர்வுகளைத் தன் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலித்த அற்புத மனிதர். டேராடூன் கர்ணல் பிரவுன் பள்ளியில் பள்ளிப் படிப்பு, இளங்கலைப் பட்டப்படிப்பு புனே பெர்குஷன் கல்லூரி, சட்டப்படிப்பு அலகாபாத் பல்கலைக்கழகம் என்று படிப்பில் படு சுட்டியாக இருந்தவர், மக்கள் மனங்களையும் வெகு விரைவில் படித்த அரசியல் மேதை.
எத்தனையோ வட இந்தியத் தலைவர்களை (காந்தி,நேரு, மோத்திலால், பட்டேல், ராஜேந்திர பிரசாத், இந்திரா, ராஜீவ்)தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தனர். ஆனால் அந்தத் தலைவர்களெல்லாம் தமிழர்களை எந்த அளவிற்கு நேசித்தார்கள் என்பதையோ (அ) அவர்கள் எப்படி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள் என்பதையோ நாம் கண்கூடாக அறிந்ததில்லை. ஆனால் வி.பி.சிங் ஒருவர்தான் தமிழர்களின் இதயத்தோடு மட்டுமல்லாமல் உணர்வுகளோடும் உரிமைகளோடும் ஒன்றாய் இணைந்தவர். உறவாய் இருக்க உண்மையிலேயே ஆவலாய் இருந்தவர். பூதான இயக்கத்தில் பங்கெடுத்து தனக்குச் சொந்தமாக பல ஏக்கர் நிலங்களை கொடையாக அளித்தார். அதை எந்தக் காலத்திலும் விளம்பரப்படுத்திக் கொள்ளாத பரந்த மனம் கொண்டவர்.
சிறந்த கவிஞரான அவர் “ஒரு துளி பூமி ஒரு துளி வானம் ” என்ற கவிதை நூலைத் தமிழில் மொழி பெயர்க்க அனுமதி அளித்து அதன் வருவாயை திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கே அளித்த அன்பு நெஞ்சினர். எனது கவிதைகளில் என் அரசியல் வரலாற்றைத் தேடாதீர்கள். அவற்றில் இருப்பது என் உள்ளத்தின் பயணம் என்றார்.
காகித உறை (கவர்) பற்றிய அவரது சிறிய கவிதை சுவையானது: “செய்தி உன்னுடையது முகவரி அவருடையது இருவருக்கும் இடையில் நான் கிழிக்கப்படுகிறேன்”.
காங்கிரசில் பழமைவாதிகள் விடாப்பிடியாக இருந்த போது அவர்கள் பிடி குறைய தனது 38ஆம் வயதில் 1969இல் உ.பி. சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். இந்திரா அம்மையார் விருப்பப்படி 1971இல் M.P. ஆனார். இவரது அரசியல் ஈடுபாடு அம்மையாரைப் பெரிதும் கவர, 1974இல் ஒன்றிய வர்த்தத் துறை துணை அமைச்சரானார். 1977இல் இந்திரா அம்மையாரின் தோல்விக்குப் பிறகு அவரை விட்டு விலகாமல் இருந்தார். அதற்கு அவர் கூறிய காரணம், அம்மையார் ஆட்சியில் பதவியில் இருந்து விட்டு பின்பு பதவி போன பின்பு ஓடுவது நன்றியுடைமை அல்ல என்று பின்பு ஒரு பேட்டியில் கூறினார். இந்த இயல்பு 1980இல் உ.பி. முதலமைச்சராகும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. ஆனால் தன் உடன்பிறந்த அண்ணன் சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட போது உ.பி. முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். இந்திரா அம்மையார் தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றவர், பின்பு சில மாதங்கள் கழித்து ஒன்றிய உரத்துறை அமைச்சரானார்.
பல ஆண்டுகளாய் காவிரிப் பிரச்சினையில் தமிழ் நாட்டுக்கு விடிவு கிடைக்காத வேளையில் தான் அங்கம் வகிக்கும் ஜனதா தளம் கருநாடகாவில் ஆட்சியில் இருக்கும் போதே “காவிரி நடுவர் மன்றம் ” அமைக்க உத்தரவிட்டார். அதன் மூலம் தமிழ்நாடு விவசாயிகளின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றார். இன்று மோடி அரசு நடுவர் மன்றத்தை நீர்த்துப் போகச் செய்தாலும் வி.பி.சிங்கின் செயல் ஒரு மைல் கல்லே.
ஒரு முறை அவர் பிரதமராக இருந்த போது நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் புலிகள் பயங்கரவாதிகள் தானே? என்று வினா எழுப்பப்பட்டது. பளிச்சென்று வி.பி.சிங் “யார் யார் பயங்கரவாதிகள் என்று அடையாளம் கண்டு முத்திரை குத்த என்னிடம் அந்த ரப்பர் ஸ்டாம்ப் இல்லை” சொன்னார். இந்தக் கருத்தை எப்போதும் போல் துக்ளக்கில் வசைபாடி வி.பி.சிங்குக்கெதிராக விஷம் கக்கினார் சோ. ஈழத்தை அமளிக் காடாக மாற்றி தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய ராணுவத்தை திரும்பப் பெற்றார்.
தி.மு.க.ஆட்சி நடக்கும்போது 1989ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற 10ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய முன்னணி ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் தி.மு.க.சார்பில் முரசொலி மாறனை கேபினட் அமைச்சராக்கி தமிழ்நாட்டிற்குரிய பிரதிநிதித்துவம் அளித்தார். அந்த பிரதிநிதித்துவம் 1996 முதல் 2014 வரை தி.மு.க. ஒன்றிய அரசில் இடம் பெற முன்னோடியாக இருந்தது.ராஜீவ் காலத்தில் இணை, துணை அமைச்சர்களாகத்தான் தமிழர்கள் இருந்தனர். அதிலும் அதிக M.P. தொகுதிகள் தந்தது தமிழ்நாடே.
சமூக நீதி என்பதன் கருத்தை சரியாக பெரியார் மண்ணிலிருந்து உணர்கிறேன்., பெறுகிறேன் என்ற வி.பி.சிங், தமிழ்நாட்டின் சமூக நீதித் தத்துவத்தை சரியாகப் புரிந்து கொண்டு பிற்பட்டோர்க்கான மண்டல் பரிந்துரையினை அமல்படுத்தினார். ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது அவர் ஆற்றிய அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத, அற்புதமான உரை இன்று படித்தாலும் அவரின் ஆழ்ந்த சமூக நீதிக்கான புரிதலைத் தெரிந்து கொள்ளலாம்.
மண்டலுக்கெதிரான அத்வானியின் ர(த்)த யாத்திரையை தடுத்து நிறுத்தி மத ரீதியான பதட்டத்தைத் தணித்தார். சென்னை விமான நிலையத்தின் பெயர்களாக காமராஜர் மற்றும் அண்ணா பெயரைச் சூட்டி அழகு பார்த்தார்.
அவரது ஆட்சிக் காலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் நூற்றாண்டு வந்தது. அவரது நூற்றாண்டை ஆண்டு முழுதும் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்ததோடல்லாமல் அவரது நூல்களை இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க உத்தரவிட்டார். ‘பாரத ரத்னா’ என்ற விருதுக்கு உண்மையான அர்த்தம் டாக்டர் அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா’ கொடுத்த போது தான் தெரிந்தது. 1989 நாடாளுமன்றத் தேர்தல் சுற்றுப் பயணத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பாபாசாகேப் அம்பேத்கர் சிலைகள் வைக்கப்பட்டதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
அவரது 11 மாத ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு மாநில ஆட்சியையும் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி கலைக்காமல் உண்மையான ஜனநாயகம் மலரச் செய்தார்.
கருப்புப் பணம், ஊழல், வெளிநாட்டில் பணம் பதுக்கல், வரி ஏய்ப்பு போன்றவற்றிற்கு எதிராக உறுதியான நடவடிக்கையை எடுத்தார்.அம்பானி, அமிதாப்பச்சன், வாடியா என்று யாரையும் இவர் ராஜீவ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தபோது விட்டு வைக்கவில்லை. எந்த நிர்ப்பந்தத்திற்கும் அடிபணியாமல் கருப்புப் பண பறிமுதல் செய்து கருப்புப் பணமுதலைகள் கலங்கச் செய்தார். இதனால் ராஜீவ் பாதுகாப்பு அமைச்சராக மாற்றினார். பாதுகாப்பு மந்திரியான போது போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தார். இது சம்பந்தமாக தலைச்சாயம் (அ) சாயமிடல் என்ற தலைப்பில் “வரி” பற்றி அவர் எழுதிய கவிதை “இங்கே
“அனைவரும் வெள்ளையை கருப்பாக்குகிறார்கள். சிலர் தலைமுடியை வரிவரியாய் கருப்பாக்குகிறார்கள். பலர் வரிக்காக வெள்ளையை கருப்பாக்கி கணக்கு எழுதுகிறார்கள்”
தேவகவுடா பிரதமர் பதவி விலகியவுடன் மற்ற தலைவர்கள் மீண்டும் வி.பி.சிங்கை பிரதமராக்க முனைந்த போது பிடிவாதமாக மறுத்தார். “நான் அரசியலுக்கு வந்ததன் நோக்கம் நூற்றாண்டுகளாக அரசியல், சமூக, பொருளாதார அதிகாரம் உரிமைகள், சலுகைகள் மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அவற்றை வழங்குவதே ஆகும். அவர்கள் எதைக் கேட்கிறார்களோ, எதைப் பெறுகிறார்களோ அது அவர்களுக்கு நியாயமாக உரியது. அந்த சமூகத் தலைவர்கள் அதிகாரம் பெற்று அதைச் சிறப்பாகப் பயன்படுத்தும் போது என் வரலாற்றுப் பங்களிப்பு முழுமை பெறுகிறது. எனவே பதவி முக்கியமில்லை” என்றார்.
ஆயிரக்கணக்கில் டில்லியில் வசித்த குடிசைவாசிகள் அவர்களது வசிப்பிடத்தி லிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டதை எதிர்த்து சாகும் வரை உண்ணாநிலை மேற்கொண்டதால் அவருக்கு சிறுநீரகச் செயலிழப்பு ஏற்ப்பட்டது அதுவே அவர் மரணத்திற்கும் காரணமாகி விட்டது.
தமிழ்நாட்டில் உள்ள திராவிடர் இயக்கத் தலைவர்கள் மேலும் தமிழர்கள் மேலும் தனி அன்பைச் செலுத்திய வி.பி.சிங்கின் முழுமையான பெயரான “விஸ்வநாத் பிரதாப் சிங் ” என்ற பெயரை பலருக்கு கி.வீரமணி சூட்டி மகிழ்ந்தார். சமூக நீதிக்கான வீரமணி விருதினை வி.பி.சிங் மகிழ்வுடன் பெற்று ஆற்றிய சிறப்பான உரையைக் கேட்டாலோ, படித்தாலோ இன்றும் உயிர்ப்புடன் இருக்கும்.
அவரது ஓவியங்கள் கவித்துவமானது. அவரது கவிதைகள் ஓவியத் தன்மை வாய்ந்தது. “ஒரு துளி பூமி ஒரு துளி வானம்” என்பது அவரது கவிதை நூலின் தலைப்பு பூமியும் கடலும் துளியாகத் தெரிந்த அவருக்குப் பதவி ஒரு தூசு தான்.
“நீ என்னை எரிக்கப் போகிறாயா? எங்காவது சாம்பல்
தீப்பிடித்து எரிந்ததுண்டோ?” என்ற அவரது கவிதை வரிகள் மண்டல் அறிக்கை அமல் செய்த போது அவரைக் கொன்று விடுவோம் என்று மிரட்டியவர்களுக்கு பதிலாக அளித்தார்.
வி.பி.சிங் உயிரோடு இருந்த போது அவரது மகன் அஜய் சிங் “செயின்ட் கீட்ஸ்” என்ற தீவில் சொத்து வாங்கியதாக அவதூறு கிளப்பினர்.ஆவணங்களைப் போலியாகத் தயாரித்தனர். ஆனால் பின்பு அதைத் தயாரித்தவர்கள் வெட்கித் தலை குனிந்தனர். தன் மொத்த சொத்துக்களை பூமிதான இயக்கத்திற்குத் தந்த அவரின் மகனா வெளிநாட்டில் உள்ள தீவில் நிலம் வாங்குவார்?
இந்தியாவில் வி.பி.சிங்குக்கு சிலை இல்லை என்பதைப் போக்கும் விதமாக 27.11.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநிலக் கல்லூரியில் சிலை திறந்த ஒடுக்கப்பட்ட மக்களின் நன்றியைத் தெரிவித்தார். அந்த விழாவில் கலந்து கொண்ட அவரது குடும்பத்தினர் நெகிழ்ந்து போயினர் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
வி.பி.சிங் அரசியலின் அதிசயம்.
தமிழர்கள் நாம் நன்றியுடன் நினைவில் கொள்ள அவரது இந்தப் பிறந்த நாள் நமக்குப் பயன்படட்டும். வாழ்க வி.பி.சிங்! வெல்க சமூக நீதி!!
இட ஒதுக்கீட்டின் பலன் அனைத்துத் துறைகளிலும் அனைத்துப் பிரிவினருக்கும் கிடைத்திட உறுதியேற்போம்.
சு.குமாரதேவன்