ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் – 8 “நீண்ட கீழ்த்தாடையை, இயல்பாக்கிய சீரிய மருத்துவம்”

viduthalai
8 Min Read

நீல வண்ணத்தில், நீண்ட நீலமலையின் அழகு மலைத்தொடர்களைத் தாண்டி, சிலுசிலுப்பை உண்டாக்கி வீசும், தென்மேற்குப் பருவக் காற்று, காற்றோடு கலந்து வந்த சாரல் மழை. மேற்கே சாரல், கிழக்கே கதிரவனின் காலைக் கதிரொளி கதிரொளிப் பட்டு சாரல் மழைத் துளியிலிருந்து, வண்ணங்கள் கலவையாக ‘வானவில்’ வானத்தையும், பூமியையும் இணைத்து நின்றது. மருத்துவமனை, புற நோயாளிகள் பகுதியில் அமர்ந்து, நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் புறநோயாளிகள் சீட்டோடு வந்து நின்றார். அவரிடம் நான், “என்னங்க, உங்களுக்கு என்ன செய்யுது?” என்று கேட்டேன். அவர் வந்து நின்றதுமே, நான் கேள்வி எழுப்புவதற்கு முன்பே அவரை கவனித்தேன். அவர் முகம் இயல்பாக இல்லாமல் மாறுபட்டு அமைந்திருந்தது.

என் கேள்வியைத் தொடர்ந்து, சீட்டோடு வந்த அந்த நோயாளி பதிலிறுத்தார். “சார், என் பெயர் சிறீதர். நான் ஒரு எஞ்சினியர். குன்னூர் நகராட்சியில் வேலை செய்கிறேன். எனக்கு வேறு பெரிய பிரச்சினை என்று எதுவும் இல்லை. என் கீழ்த்தாடை நீண்டு இருப்பதுதான் பிரச்சினை. இதனால் என் மூஞ்சியே அழகில்லாமல் இருக்குது. எனக்கு 32 வயசாச்சு. திருமணம் செஞ்சுகிட்டு வாழ்க்கையில் செட்டில் ஆகலாம்னு பாக்குறேன். என் முகம் இப்படி இருப்பதால் பெண் எதுவும் அமைய மாட்டேங்குது. நீங்கள் ஏதாவது செஞ்சி என் மூஞ்சியை சரியாக்க முடியுமா?” என்று கேட்டார் அந்த இளைஞர்.

“சரிங்க தம்பி, பார்க்கலாம்” என்று நான் அவரைப் பரிசோதிக்கத் துவங்கினேன். 32 வயதுக்குரிய வாலிபனாக நல்ல வாட்ட சாட்டமாக இருந்தார் சிறீதர். அவரது உடல் நிலை நல்ல நிலையில் இருந்தது. இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, மூச்சுவிடுதல், உயிர் மூச்சுக் காற்றழுத்தம் (SO2) போன்றவை இயல்பான அளவில் இருந்தன. வாயைப் பரிசோதனை செய்தேன். இயல்பான நிலையில் மேல்நாடி வெளிப்புறமும், கீழ்நாடி சற்று உள்புறமும் அமைந்திருக்கும் மேல் நாடி முன் பற்கள் வெளிப்புறமும், கீழ் நாடி முன்பற்கள் உள்ளடங்கியும் இருக்கும். சிறீதருக்கோ அதற்கு முற்றிலும் மாறாக கீழ்த்தாடை பற்கள் வெளிப்புறமும், மேல் தாடைப் பற்கள் உள்புறமாகவும் அமைந்திருந்தன. கீழ்த் தாடை எலும்பும் அதிக வளர்ச்சியடைந்து நீட்டிக் கொண்டிருந்தது. இதை “புரேக்னாதிசம்” (Prognathism) என்றழைப்போம். இது மேல் தாடை, அல்லது கீழ்த் தாடை, அல்லது இரண்டு தாடைகளிலும் வரலாம். சாதாரணமாக இது மரபு வழி குறைபாடாக வரும்.

அது தவிர “அக்ரோமெகலி” (Acromegaly) (பிட்யூட்டரி சுரப்பு அதிகமாக சுரப்பதால் உடலில் அனைத்து எலும்புகளும் வளர்ச்சி கூடிய நிலையில் இருக்கும்). “டவுன் சின்ட்ரோம்” (Down Syndrome) (இதுவும் ஒரு மரபணு குறைபாடுதான்) இவ்விதமான குறைபாடுகளால் தாடை அதிகளவு வளர்ச்சியடையும். பெரும்பாலும் கீழ்த்தாடையில்தான் இந்தக் குறைபாடு அதிகளவில் தோன்றும். ஒரு தாடை மட்டும் இயல்பை மீறி அதிகளவில் வளருவதால், பற்கள் சேர்க்கை (occlusion) பாதிப்படையும். அதனால் உணவை மெல்லுவதற்கு இடையூறு ஏற்படும். தவறான பற்சேர்க்கையினால் தாடை மூட்டுகள் பகுதியில் வலி ஏற்படலாம். ஒரு தாடை மட்டும் அதிக வளர்ச்சி ஏற்படுவதால் வாயின் இயக்கக் குறைபாடு (Functional Deformity) ஏற்படும்.

தாடை எலும்பு அதிக வளர்ச்சி சிறீதருக்கு இருந்தாலும், சிறிய வயதிலேயே இந்தக் குறைபாடு தோன்ற ஆரம்பித்து விட்டதால் உணவை வாயில் அரைத்து சாப்பிட்டுப் பழகி விட்டிருந்தார். அதனால் அவருக்கு சாப்பிடும்பொழுது வலி ஏதும் இல்லாமல் இருந்தது. அவரே குறிப்பிட்டது போல் நீண்ட தாடை என்பதைத் தவிர வேறு சிக்கல் ஏதும் அவருக்கு நல்வாய்ப்பாக இல்லாமலிருந்தது. கீழ் தாடையின் பின் பற்களும், மேல்தாடை பின் பற்களும் சேர்க்கை சமமாக இருக்கும். “புரோக்னாதிசம்” என்ற இந்தக் குறைபாட்டிலோ, நீண்ட தாடையின் பின் பற்கள் முன்புறம் நகர்ந்து விடுவதால் பற்களின் சேர்க்கைக் குறைபாடு (Malocclusion) மட்டும் இருந்தது.

இந்தக் குறைபாட்டை அறுவை மருத்துவத்தால் மட்டுமே சீராக்க முடியும். வேறு எந்த வகையிலும் சரியாக்க முடியாது. அதை அவரிடம் விளக்கினேன். அவர், “சார், நீங்க என்ன வைத்தியம் வேண்டுமானாலும் செய்யுங்க, மற்றவர்கள் முகம் போல் இயல்பான முகமாக எனக்கு செஞ்சா சரி” என்று பதிலிறுத்தார். “உயிருக்கு ஆபத்து ஒன்றுமில்லை என்றால் நான் ஆபரேஷன் செஞ்சுக்கிறேன்” என்று பதில் கூறினார். அடுத்த நாள் மீண்டும் வரச் சொன்னேன். அதே போல் வந்தார். கூடவே அவரின் பெற்றோர். சிறீதர் அதற்கு முந்தைய நாள் கேட்ட கேள்விகளையே அவர்கள் கேட்டனர். அவர்களுக்கு அந்த அறுவை மருத்துவத்தைப் பற்றியும், பின் விளைவுகள் எதுவும் இல்லை என்றும் விளக்கினேன். அவர்களும் மனம் மகிழ்ந்து அறுவை மருத்துவம் செய்வதற்கு சம்மதித்தனர். சிறீதரை அன்றே மருத்துவமனையில் சேர்த்தேன். அறுவை மருத்துவத்திற்கு முன் பரிசோதனைகளான இரத்தம், சிறுநீர் ஆய்வுகள் செய்யப்பட்டன.

அனைத்தும் சீராக இருந்தன. தாடை எழும்புகள் ஊடுகதிர் எடுக்கப்பட்டன. ஏறத்தாழ 1¼ செ.மீ. கீழ்த்தாடை வெளியே நீண்டிருந்தது. பொதுவாக மண்டை ஓட்டையும், கீழ்த் தாடையின் அளவுகளையும், இணைப்பையும் சரியாகப் பார்க்கவும் ஒரு சிறப்பான ஆய்வாக “தலை முக அளவு” (Cephalometry) எடுப்போம். அந்த சிறிய மருத்துவமனையில் அந்த வசதியில்லை. அந்தக் காலத்தில் CT ஸ்கேன் எல்லாம் கிடையாது. அதனால் இருக்கின்ற வசதிகளைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டேன். மேல் நாடி, கீழ் நாடி அளவுகளை எடுத்தேன். அதை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் மறுபதிவு செய்தேன். அந்த மாடல்களை வைத்து எவ்வளவு கீழ் தாடை எலும்புகளை நீக்கி, மீதிப் பகுதியை பொருத்தி சீராக்க வோண்டும் என்று ஆய்வு செய்தேன். இந்த அறுவை மருத்துவத்தை வாயின் உள்புறத்திலோ (Intra Oral) அல்லது வெளிப் புறத்திலோ (Extra oral), அல்லது இரண்டும் கலந்தவாறோ செய்யலாம். இந்தமுறைகளில் வாயின் உள்புறமாக செய்வதற்கு சில நவீன இருவிகள் தேவை. அவை எங்கள் சிறிய மருத்துவமனையில் கிடையாது. இருக்கின்ற சில அறுவை மருத்துவக் கருவிகளைக் கொண்டே, வாயின் உள்புறம், வெளிப்புறம் என்ற முறையில் செய்வதென்று முடிவெடுத்தேன்.

மயக்குநரின் பார்வைக்கு நோயாளியை அனுப்பினேன். அவரும் வழமையான ஆய்வுகளை மேற்கொண்டு அறுவை மருத்துவத்திற்கு அனுமதி அளித்தார். அறுவை மருத்துவத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது. அந்த நாளும் வந்தது. படுக்கைப் பகுதியிலிருந்து நோயாளி அறுவை அரங்கிற்கு மாற்றப்பட்டார். வாயில் முதலில் அறுவை மருத்துவம் செய்ய வேண்டியிருந்ததால் மயக்க மருந்துக்குழாய், மூக்கின் வழியே மூச்சுக் குழாய்க்குள் செலுத்தப்பட்டது. ஏறத்தாழ 1.5 செ.மீ. கீழ்த்தாடை எலும்பை வெட்டி, மாற்று நிலையில் பொருத்த வேண்டியிருந்ததால், எதை எப்படி செய்வது என்று திட்டமிட்டிருந்தேன். முதல் கடைவாய் பற்கள் (I Molars) ஏறத்தாழ 1 செ.மீ. அகலத்திற்கு அவருக்கு இருந்தது. அவற்றை அகற்றி அந்த இடைவெளியில் முன்பக்க எலும்பை நகர்த்திப் பொருத்துவது என்று முடிவெடுத்திருந்தேன். கீழ்த் தாடைகளின் மய்யப் பகுதியில் ஒரு நரம்பும், இரத்தக் குழாயும், ஒரு நரம்பு கால்வாய் (Inferior Nerve canal) வழியே செல்லும் இந்த நரம்பும், இரத்தக் குழாயும் முன் கடைவாய் பற்களின் கீழ் தாடை எலும்பிலிருந்து வெளியேறி கீழ் உதடுகள் வரை பரவி இருக்கும்.

கீழ்த்தாடையின் ஒரு புறம், கீழ் உதட்டின் ஒரு புறம், நாக்கின் ஒரு புறம், கீழ்த்தாடைப் பற்கள் ஆகியவற்றிற்கு இந்த நரம்புதான் உணர்ச்சியைக் கொடுக்கின்றது. தப்பித் தவறி இந்த நரம்பு அடிபட்டு விட்டால், மேற்கண்ட பகுதிகள் உணர்ச்சியின்றி போய்விடும். அதனால் எச்சரிக்கையுடன் தான் இந்த அறுவை மருத்துவம் செய்ய வேண்டும். வாயைத் திறக்கும் கருவி மூலம் அவர் வாயைத் திறந்து (மயக்க நிலையில் அவர் இருப்பதால் இந்தக் கருவியைப் பொருத்த வேண்டும்). முதல் கடைவாய் பற்களை (இரண்டு புறமும் – I Molars) அதன் கீழ் உள்ள இணைப்பு எலும்புகளோடு நரம்பு கால்வாய் வரை (நரம்புகளைப் பாதுகாத்து) அகற்றினேன். இரண்டு புறமும் வாயில் பற்களும், அதனோடு சேர்த்து இணைப்பு எலும்புகளும் அகற்றப் பட்டதால் வாயின் இரண்டு புறமும் 1 செ.மீ. அளவுக்கு இடைவெளி உண்டாக்கப்பட்டது. பின் வெளிப்புறம் அறுவை மருத்துவம் செய்யத் துவங்கினேன்.

கீழ்த்தாடையின் அடிப் பாகத்தில் ஒரு சிறிய கீரல் போட்டு, சதைகளை நீக்கி விட்டு தாடை எலும்பை அடைந்தேன். தாடை எலும்பைச் சுற்றியுள்ள தசை நாண்கள், தசைகளை நீக்கி, ஏற்கெனவே வாயில் எலும்புகளை அகற்றிய பகுதிகளை கண்டு அறிந்தேன். பின் நரம்புக் குழாய்க்குக் கீழ் இருந்த எலும்புப் பகுதியை, ஏற்கெனவே வாயில் எலும்பை அகற்றியப் பகுதிக்கு நேர் கீழாக அகற்றினேன். இது கீழ்த்தாடையின் இரண்டு பக்கமும் சீராக செய்யப்பட்டது. கீழ்த்தாடையின் முன் பகுதி I செ.மீ. அளவிற்கு இடைவெளியோடு துண்டாக நின்றது. அந்த முன் பகுதியை அந்த இடைவெளியில் பின் தள்ளி தாடை எலும்பின் பின் பகுதியில் பொருத்தினேன். அந்த எலும்புகளை இரண்டு புறமும் அசையாதவாறு கம்பிகள் மூலம் பொருத்தினேன் பின் சதைகள், தோல் என்ற அனைத்துப் பாகங்களையும் தையலிட்டுப் பொருத்தினேன் இப்பொழுது சிறீதரனின் முகம் இயல்பான நிலைக்கு வந்துவிட்டது. மகிழ்ச்சியோடு மயக்க நிலையில் இருந்து தெளிய வைத்து, படுக்கைப் பகுதிக்கு மாற்றினோம். ஒரு வாரத்தில் மருத்துவமனையிலிருந்து அனுப்பிவைத்தேன். மிகுந்த மகிழ்ச்சியோடு விடை பெற்றார் சிறீதரன்.

ஒரு பத்தாண்டுக்கு முன் நான் ஓர் உணவகத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர், 45 வயது மதிக்கத்தக்கவர், ஓர் அம்மையார், ஒரு பத்து வயது சிறுமி ஆகியோர் என் முன் நின்றனர். “சார், என்னத் தெரியுதா? நான் சிறீதரன். இது என் மனைவி, பாப்பா, என் குழந்தை. நீங்கள் செஞ்ச அறுவை மருத்துவத்தால் என் வாழ்க்கையே மாறிடுச்சு. திருமணம் செஞ்சுக்கிட்டேன். மகிழ்ச்சியா இருக்கிறேன். இங்கே எதேச்சையா உங்களப் பார்க்க நேர்ந்தது. ரொம்ப, ரொம்ப நன்றி சார்” என்று நாத்தழுக்க, தழுக்க அவர் கூறினார். அவருக்கு ஆறுதலையும், வாழ்த்துகளையும் கூறி விடைகொடுத்தேன். ஒரு ரூபாய் கூட அவர் செலவு இல்லாமல் இம்மருத்துவம் செய்து கொண்டார்.

தந்தை பெரியார் கூறிய “மனிதன் தானாகவும் பிறக்கவில்லை, தனக்காகவும் பிறக்கவில்லை” என்பதை என் வாழ்வியலாகக் கொண்டதால்தான் என்னால் இந்த வகைச் செயல்பாடுகளை செய்ய முடிந்தது என்பதை அந்த நேரத்தில் நன்றியோடு நினைத்தேன். வாழ்க தந்தை பெரியார்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *