பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களும், முக்கியத்துவம் இல்லாத நபர்களும் – விரயமாகும் மக்கள் பணமும்!

viduthalai
2 Min Read

இந்தியப் பிரதமர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது, வழக்கம் போல் துறைச் செயலாளர்கள், நிதித்துறை அதிகாரிகள், திட்ட மேலாண்மை நிபுணர்கள், வணிகம், ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான வல்லுநர்கள் மற்றும் தனியார்துறை உயரதிகாரிகள் போன்றோர் உடன் செல்வது வழக்கம். இவர்களின் பங்களிப்பு, நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த அவசியமானதாகக் கருதப்படுகிறது.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் பங்கு குறைந்துவிட்டதாகவும், அதற்குப் பதிலாக அதானி மற்றும் அம்பானி போன்ற குறிப்பிட்ட சில தனியார்துறை நிறுவனங்களின் உயரதிகாரிகளின் ஆதிக்கமே வெளிநாட்டுப் பயணங்களில் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கார்ப்பரேட் நண்பர்கள்

குறிப்பாக, இலங்கை மற்றும் கென்யா போன்ற நாடுகளுக்குப் பிரதமர் சென்றிருந்தபோது, தனது நெருங்கிய நண்பரான அதானிக்கு பெரும் வணிக வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அதானி குழுமத்தின் திட்டங்கள் தேவையில்லை என்று இலங்கை அரசு முடிவெடுத்ததும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலு சேர்த்தது. இது போன்ற விவகாரங்கள், நாட்டின் வெளியுறவுக் கொள்கையும், வணிக நலன்களும் சில தனிப்பட்ட குழுமங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வியை எழுப்புகின்றன.

ஹிரன் ஜோஷியின் பயணமும் சர்ச்சையும்:

தற்போது புதியதொரு சர்ச்சையாக, பிரதமரின் ஒவ்வொரு அசைவையும் கேமராவில் பதிவு செய்து, விளம்பரப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் ஹிரன் ஜோஷி, மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் உடன் செல்கிறார் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரதமரின் தனிப்பட்ட பிம்பத்தைக் கட்டமைப்பதில் ஹிரன் ஜோஷி முக்கியப் பங்கு வகிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

பிரதமரின் ஒவ்வொரு அசைவையும் காட்சிப்படுத்தும் நபர் வெளிநாடு செல்வது சாதாரணமாகத் தோன்றினாலும், அதி முக்கியமான உயர்மட்டத் தலைவர்கள் சந்திப்புகள் நடக்கும்போது ஹிரன் ஜோஷிக்கு அங்கு என்ன வேலை என்ற கேள்வி எழுகிறது. இத்தகைய உயர்மட்டச் சந்திப்புகளின்போது, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துச் சேவைகளுக்கும் பல கோடிகள் மக்கள் பணம் செலவிடப்படுகிறது. பிரதமரின் தனிப்பட்ட செய்தித் தொடர்பாளரின் பயணச் செலவிற்கும் மக்கள் பணம் விரயமாக்கப்படுகிறதா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

நாட்டின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய நலன்கள் தொடர்பான பயணங்களில், யார் யார் உடன் செல்கிறார்கள் என்பதும், அவர்களின் பங்கு என்ன என்பதும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே பரவலான எதிர்பார்ப்பாக உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *