சென்னை, ஜூன் 27- தமிழ்நாடு அரசு சொத்துக்களுக்கான பட்டாவில் பெயர் மாற்றம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிலப்பட்டா
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட் டிருக்கும் அறிவிப்பில், தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப் புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, இணைய வழியில் பொது மக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும். https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இருப்பினும், பல சிட்டாவிலுள்ள பட்டாதாரர்களுள் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் அவர்களின் பெயர்களுக்கு பதிலாக வாரிசுதாரர்களின் தற்போதைய பெயர்கள் அல்லது உரிமையாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.
பெயர் மாற்றம்
திருவள்ளூர் மாவட்டம், அனைத்து வட்டங்களிலும் பட்டாவிலுள்ள இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வாயிலாக உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மய்யங்களின் வாயிலாகவோ அல்லது Citizen Portal வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி விண்ணப்பங்கள், ஆவணங்களின் அடிப்படையில் எதிர்வரும் ஜமாபந்தியில் பரிசீலனை செய்யப்பட்டு. பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு. நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்யப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்அவர்கள் தெரிவித்துள்ளார்.