சமூக அறிவியல் ஊற்று – தொடர் வரிசை எண் 7

viduthalai
7 Min Read

அறிய வேண்டிய அம்பேத்கர்

சூத்திரர்கள் – எதிர்ப்புரட்சி (3)

சூத்திரர்கள் அரசின் அமைச்சர்களாக இருந்தது மட்டுமன்றி அரசர்களாகவும் ஆகியிருந்தனர். ஒரு சூத்திரர் மன்னனாகும் தகுதி பற்றிய மனுவின் கருத்துகளை, ரிக்வேதம் சூத்திரர் பற்றி பேசுவதுடன் ஒப்பிடும்போது முன்னவற்றில் ஒரு கொடூரமான தன்மையைக் காண்கிறோம்.

சுதனுடைய ஆட்சி குறிப்பிடப்படும் இடம் சுதனுக்கு யார் புரோகிதராக அல்லது அரசு புரோகிதராக இருப்பது என்பது குறித்து விசுவாமித்திரருக்கும் வசிஷ்டருக்கும் ஏற்பட்ட கடுமையான போட்டியைப் பேசும் சந்தர்ப்பம் மட்டுமே. வசிஷ்டர் பார்ப்பனர், ஏற்கெனவே அவ்வரசனுக்கு அரசப் புரோகிதராக இருந்த அவர் ஒரு பார்ப்பனர் மட்டுமே அரசப் புரோகிதராக ஆக முடியும் என்று உரிமை கோரினார். மாறாக, சத்திரியரான விசுவாமித்திரர், ஒரு சத்திரியர் அப்பதவிக்கு தகுதி படைத்தவன் என வாதிட்டார். இப்போட்டியில் விசுவாமித்திரர் வென்று, அவரது முறை வந்தபோது சுதனின் புரோகிதர் ஆனார். இப்போட்டி பார்ப்பனருக்கு ஒரு நிரந்தர இழப்புக்கு வழிகோலவில்லை. எனினும் இது மிக முதன்மையான வாதப் பொருள் ஒன்றை உள்ளடக்கியது. எனவே, இது நம் நினைவில் இருத்திக்கொள்ளத்தக்கது.

பழைய இலக்கியத்தில் சமூக வரலாறு பேசுவனவற்றுள் இப்புனைந்துரை மிகச் சிறந்த ஒன்றாகக்கூடும் என்பதில் அய்யமில்லை. கெடுவாய்ப்பாக, ஒருவரும் இதனை முறையான கவனத்திற்குரிய ஒன்றாகக் கொள்ளவில்லை. இவ்வரசன் யாரென்றுகூட ஒருவரும் வினவவில்லை. சுதன், பைஜாவனனின் புதல்வர்; பைஜாவனன் காசியின் அரசனான தேவதாஸின் மகன். சுதனின் குலம் என்ன? அவன் ஒரு சூத்திரர் என்றால் அதனை நம்புபவர்களின் எண்ணிக்கைக் குறைவாகவே இருக்கும். ஆனால் உண்மை அதுதான். இதனை மகாபாரதச் (முயிர் சமற்கிருத நூல்கள், தொகுதி, பக். 366) சான்று கொண்டு மெய்ப்பிக்க முடியும். இந்நூலின் சாந்தி பருவத்தில் பைஜாவனன் ஒரு சூத்திரர் எனக் குறிப்பு வருகிறது. இக்குறிப்பிலிருந்து நாம் காணும் சுதன் பற்றிய கதை, ஆரிய சமூகத்தில் சூத்திரரின் சமூகப்படிநிலை பற்றி நமக்கு ஒரு புதிய தெளிவினை அளிக்கிறது.

சூத்திரர்கள் வேதச் சடங்குகள் புரியாதவராய் இருந்திருப்பின் இவ்வனைத்திற்கும் பொருளொன்றும் இருக்க முடியாது. ஒரு சூத்திரப் பெண்மணி அசுவமேதம் என்ற வேத வேள்வியில் கலந்துகொண்டதற்குச் சான்று உள்ளது.

ஒரு சூத்திரர் ஆளும் மன்னனாக முடிந்தது என்பதை இது காட்டுகிறது. ஒரு சூத்திர அரசனின் சேவையில் பார்ப்பனரும் சத்திரியரும் மதிப்பிழப்போ தாழ்ச்சியோ காணவில்லை என்பதோடு அவனது ஆதரவைப் பெறுவதற்கு அவர்கள் ஒருவரோடொருவர் போட்டியிட்டனர். அவனது இல்லத்தில் வேதச் சடங்குகள் இயற்றவும் தயாராக இருந்தனர்.

பிற்காலங்களில் சூத்திர அரசர்கள் இல்லை எனக் கூற முடியாது. மாறாக, மனுவுக்கு முந்தைய இரு அரச குலங்கள் சூத்திர குலங்கள் என்பதை வரலாறு காட்டுகிறது. பொ.ஆ.மு. 413-322 காலகட்டத்தில் ஆட்சி செலுத்திய நந்தர்கள் சூத்திரர்கள். அவர்களுக்குப்பின் வந்த பொ.ஆ.மு. 322-183 வரை ஆட்சி செய்த மவுரியர்களும் சூத்திரர்களே. (இந்த ஆண்டுகள் கையெழுத்துப் படியில் இருக்கவில்லை, தொகுப்பாசிரியர்களால் சேர்க்கப்பட்டன.-ஆங்கிலத் தொகுப்பாசிரியர்கள்) இந்தியாவின் பேரரசராக விளங்கிய அசோகர் சூத்திரர். அவருடைய பேரரசு சூத்திரர்களால் உருவாக்கப்பட்டது என்பதைக் காட்டிலும், சூத்திரர்கள் பெற்றிருந்த உயரிய நிலைக்கும் மரியாதைக்கும் சிறப்பான எடுத்துக்காட்டு வேறென்ன இருக்க முடியும்? சூத்திரர் வேதம் பயிலும் உரிமை பற்றிய அய்யப்பாட்டிற்கான விளக்கம் சந்தோக்கிய உபநிடதத்தில் (தொகுதி 1, 2) கிடைக்கிறது. அதில் காணப்படுவதாவது: வேதாசிரியர் ராய்சுவர், ஜனசுருதி என்பவருக்கு வேதப்பொருள் பயிற்றுவித்தார். ஜனசுருதி ஒரு சூத்திரர் – இது நம்பக் கூடியதாயின், சூத்திரர் வேதம் கற்பதற்குத் தடை இல்லாதிருந்த காலம் ஒன்றிருந்தது என்பதில் அய்யமில்லை.

சூத்திரர் வேதம் கற்பதற்குத் தடையில்லாதிருந்தது மட்டுமல்ல, சூத்திரர்கள் முனிவர் நிலை எய்தியும் இருந்தனர். அவர்களில் வேதப் பாடல்களை இயற்றுபவரும் இருந்தனர். இதற்குக் கவஸ் அலியுச முனிவரின் வரலாறு (ஐத்ரேய பிராமணம், தொகுதி 2, பக். 112) ஒரு சிறந்த சான்று. ரிக்வேதம் பத்தாவது தொகுதியில், அவர் இயற்றிய பல பாடல்கள் காணக்கிடைக்கின்றன. (மாக்ஸ்முல்லர், பண்டைய சமற்கிருத இலக்கியம், 1860. பக். 58)

சூத்திரர்களின் வேதச் சடங்குகள், வேள்விகள் புரிவதற்கான ஆன்மிகத் தகுதி நிலை பற்றிய கேள்விக்கான விளக்கம் பின்வரும் தரவுகளில் காணக்கிடைக்கிறது. பூர்வ மீமாம்சையின் ஆசிரியர் ஜைமினி (பார்க்க: கானே, தரும சாத்திரங்களின் வரலாறு) பதாரி எனும் தொல்லாசிரியர் பற்றிக் குறிப்பிடுகிறார். இவரது படைப்புகள் காணக்கிடைக்கவில்லை. இவர் சூத்திரரும் வேத வேள்விகள் புரிய முடியும் எனும் கருத்தை ஆதரித்தவர். மறைவழி வேள்வி இயற்றத் தேவையான புனிதமான முத்தீயைப் படையல் செய்ய இயலும் எனும் கருத்து நிலைகொண்ட வேறொரு பிரிவினரும் இருந்தனர் என்பதைப் பிரத்வாஜ ஸ்ரவுத சூத்திரம் (V.28) ஏற்றுக் கொள்கிறது. அதுபோன்றே, சூத்திரர் வேதச் சடங்குகள் புரிய தகுதி வாய்ந்தவர் என உய்த்துணரச் செய்யும் வேத நூல்கள் இருந்தன என்று காத்யாயன ஸ்ரவுத சூத்திரத்தின் (1 & 5) உரையாசிரியர் ஏற்றுக்கொள்கிறார். வேள்வி இயற்றுங்கால் அதை வளர்க்கும் புரோகிதர் கடைப்பிடிக்கவேண்டிய மறைநெறிகளைச் சத்பத பிராமணம் (1.4.12) தெளிவுபடுத்துகிறது. அதில் ஹவிஸ்குட்டை (வேள்வி இயற்றுவிப்போன்) அதைத் தொடங்கிவைப்பதற்காகப் புரோகிதர் அழைக்கும் முறை பற்றி கூறப்படுகிறது. அவ்விதியாவது:

“அவரை விளிக்கும் முறை நான்கு அவையாவன: அவர் பார்ப்பனராயின், அணுக ‘ஈண்டு வருக’ என்பதாகும்; அவர் வைசியர் அல்லது சத்திரியராயின் ‘அணுகுக, ஈண்டு விரைந்திடுக’. என்பதாகும்; அவன் சூத்திரராயின் அது ‘ஈண்டு ஓடி வருக’ என்பதாகும்.”

சூத்திரர்கள் சோம வேள்வி இயற்றவும் தெய்வீகத் தன்மையுடைய சோம பானம் பருகுதலில் கலந்துகொள்ளவும் தகுதியுடையோர் என்பதற்குச் சத்பத பிராமணம் (கானே, தரும சாத்திரங்களின் வரலாறு நூலில் மேற்கோள் காட்டியது) சான்று பகர்கிறது. அது இயம்புவதாவது: பால் மட்டுமே அருந்த வேண்டும் எனும் ‘பாயோ’ நோன்பிற்குப் பதில் நடைபெறும் சோம வேள்வியில் மாஸ்து எனப்படும் ஊறல் நீர் சூத்திரருக்கு உரியது. இதே நூல் (மேற்கோள்: முயிர், சமற்கிருத நூல்கள் 1. பக். 367) வேறொரு இடத்தில் கூறுவதாவது:

“பார்ப்பனர், அரசர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்கு குலங்களில் சோம பானத்தை விரும்பாதார் எவருமிலர். அவ்வாறு ஒருக்கால் யாரேனும் இருப்பாராயின், அதற்காக அவர் கழுவாய் ஆற்ற வேண்டும்.”

இதன் பொருளாவது, சோம பானம் அருந்துவது அனுமதிக்கப்பட்டது மட்டுமின்றி, சூத்திரர் உட்பட அனைவருக்கும் அது கட்டாயமான ஒன்றாகவும் கொள்ளப்பட்டது. ஆனால் அஸ்வினிகள் பற்றிய கதையில் சூத்திரர் சோம பானம் அருந்த உரிமையுடையவர் என்பதற்கான தெளிவான சான்று கிடைக்கிறது. இக்கதையின்படி (ஃபவுஸ்பாய்ல், இந்தியப் புராணங்கள், பக். 128-134.) அஸ்வினிகள் ஒரு முறை சுகன்யா குளித்து முடித்து, வெற்றுடலுடன் இருந்தபோது பார்க்க நேர்ந்தது, சியவனர் என்ற மரணத்தின் வாசலில் நின்ற ஒரு முதிய முனிவருக்கு மணம் செய்விக்கப்பட்ட இளம் பெண் அவள். சுகன்யாவின் அழகில் கட்டுண்ட அஸ்வினிகள் “உன் இளமை இவ்வாறு வீணாதல் தகாது; எங்களில் ஒருவரை மணாளனாக ஏற்றுக்கொள்” என்றனர்.

சுகன்யா அதை மறுத்து, “நான் என் கணவனுக்கு உரியவள்” என்று எடுத்துரைத்தாள். மீண்டும் அவர்கள் சுகன்யாவிடம். இதுபற்றி பேசினர். இம்முறை ஒரு பேரத்தை முன் வைத்தனர். “பேர்பெற்ற விண்ணுலக மருத்துவர்களான நாங்கள் உன் கணவருக்கு இளமையும் வனப்பும் அளிப்போம். அதன்பின் எங்களில் ஒருவரை நின் கணவனாக ஏற்றுக்கொள்” என்றனர். தன் கணவரிடம் அப்பெண் பேரத்தின் நிபந்தனைகளைப் பற்றிக் கூறினாள். சியவனர் “அவ்வாறே செய்க” எனப் புகல, ஒப்பந்தப்படி அவருக்கு இளமை மீண்டும் கிடைத்தது. அதன்பின் அஸ்வினிகள் சோம பானத்திற்கு உரிமையுடையவர்களா என்பது பற்றிய சிக்கல் எழுந்தது. இந்திரன் அஸ்வினிகள் சூத்திரர்களாகையால் அவர்கள் சோம பானத்திற்கு உரிமைபெற்றவர்களாகார் என மறுத்துரைக்க, மாறா இளமை பெற்ற சியவனர் இந்திரனின் வாதத்தை நிராகரித்து அஸ்வினிகளுக்கு சோம பானம் நல்கச் செய்தார்.

சூத்திரர்கள் வேதச் சடங்குகள் புரியாதவராய் இருந்திருப்பின் இவ்வனைத்திற்கும் பொருளொன்றும் இருக்க முடியாது. ஒரு சூத்திரப் பெண்மணி அசுவமேதம் என்ற வேத வேள்வியில் கலந்துகொண்டதற்குச் சான்று உள்ளது. (ஜெய்சுவால், இந்திய ஆட்சியில், பகுதி 2, பக். 17.)

பூணூல் அணிவிக்கும் சடங்கு செய்வதிலும் பூணூல் அணியும் உரிமைத் தொடர்பாகவும் சூத்திரருக்கு எதிரான குறிப்பிட்ட ஏதும் இல்லை.மாறாக சம்சகார கணபதியில் சூத்திரர் பூணூல் அணிவிக்கும் சடங்குக்குத் தகுதியுடையவர் எனச் சாற்றும் வெளிப்படையான கூற்று காணப்படுகிறது. (மாக்ஸ் முல்லர், பண்டைய சமற்கிருத இலக்கியம், 1860. பக். 207).

மனுவின் காலத்திற்கு முன்பு சூத்திரர், கீழ் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும் சுதந்திர மக்களாகவே வாழ்ந்தனர் என்பது வெளிப்படை, கவுடில்யரின் அர்த்த சாத்திரத்தில் உள்ள பின்வரும் பிரிவுகளைக் கருதுவோம்:

‘பிறப்பால் அடிமையல்லாத, இன்னும் வயது முதிராத, ஆனால் பிறப்பால் ஆரியன் ஆகிய ஒரு சூத்திரனின் வாழ்க்கையை அவனது உறவினன் அடகுவைப்பது இரண்டு பணம் தண்டத்துக்குரியது.”

“ஓர் அடிமையின் பணத்தை ஏமாற்றுவதோ, தான் ஆரியன் என்ற முறையில் (ஆரியபாவா) அவன் கொண்டுள்ள தனியுரிமைகளைப் பறிப்பதோ (ஓர் ஆரியனை அடிமையாக்குவதற்கான தண்டத்தில்) பாதியளவு தண்டத்துக்குரியது.”

“குறிப்பிட்ட மீட்புத் தொகையைப் பெற்ற பின்பும் அடிமைக்கு விடுதலை வழங்கத் தவறுவது 12 பண தண்டத்துக்குரியது. ஓர் அடிமையைக் காரணமின்றி சிறைப்படுத்தி வைத்திருப்பதும் இதுபோன்ற தண்டனைக் குரியதே.”

“தன்னை அடிமையாக விற்றுக்கொண்ட ஒருவனுடைய குழந்தையை ஆரிய குலத்ததாகவே கொள்ள வேண்டும். ஓர் அடிமை தன் ஆண்டையின் தொழில் வரவிலிருந்தும் அவன் தந்தையிடமிருந்து பெற்ற மரபுவழிச் சொத்திலிருந்தும் பங்குபெற உரிமையுடையவர்.”

மனு ஏன் சூத்திரரை ஒடுக்கினார்?

இப்புதிர் சிக்கல் நிறைந்தது; எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதல்ல. ஆரியர்கள் ஆரியல்லாதாரை ஆரியராக்கும் (அதாவது அவர் ஆரியப் பண்பாட்டிற்குக் கொண்டுவர) முயற்சியில் எஞ்ஞான்றும் ஈடு பட்டுவந்தனர். இம்முயற்சியில் அவர்களது முனைப்பு, பேரளவில் மற்றவர்களை ஆரியராக்கும் நோக்கில் விராத்திய ஸ்தோமா எனும் மதச் சடங்கினைப் புதிதாக உருவாக்கும் அளவுக்குச் சென்றது. இச்சடங்கு பற்றி மகாமகோபாத்யாய ஹர பிரசாத் சாஸ்திரி கூறுவதாவது:

– தொடரும்

– அண்ணல் அம்பேத்கர்
‘இந்து மதம்: வரலாறு – ஆய்வு’  நூலிலிருந்து

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *