சென்னை ஜீன்.27- மெட்ரோ குடிநீர் லாரிகள் மூலம் முன்பதிவு செய்து தண்ணீர்வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.இதன் மூலம் சரியான நேரத்தில் தண்ணீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது
தண்ணீர் வினியோகம்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளுக்கு மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக சென்னையில் 450 மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரிகள் சுழற்சி முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த லாரிகள் ஒரு நாளைக்கு 9 முதல் 10 நடைகள் வீதம் குறைந்தது 3,500-க்கும் மேற்பட்ட நடைகளில் தண்ணீர் வினியோகம் செய்கிறார்கள்.
வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்படும் குடியிருப்புகளில் தங்கியிருப்பவர்களுக்கு இந்த லாரிகள் மூலம் தண்ணீர் தட்டுப்பாடின்றி இலவசமாக வழங்கப்படுகிறது. இதுதவிர, https://dfw.chennaimetrowater. in/#/index என்ற சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்தால் மெட்ரோ குடிநீர் ஒப்பந்த லாரிகளில் தண்ணீர் வினியோகம் செய்யப்படும். வீடு, வணிக நோக்கத்துக்கு என தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
புதிய வசதிகள்
அந்த வகையில் 6 ஆயிரம், 9 ஆயிரம், 16 ஆயிரம் லிட்டர் என்ற அடிப்படையில் லாரி களில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த நடைமுறையில் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதிகளை குடிநீர் வாரியம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
அதன்படி, முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ஓ.டி.பி. செல்வதுடன், எந்த லாரியில்யில் தண்ணீர் கொண்டு வரப்படுகிறதோ? அந்த லாரியின் ‘டிராக்கிங்’ செய்தியும் அனுப்பப்பட உள்ளது.
இதன் மூலம் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருக்கும் லாரி தண்ணீருடன் எந்த இடத் தில் வந்து கொண்டு இருக்கிறது? எவ்வளவு நேரத்தில் வந்து சேரும்? என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் வழங்கப்பட்டுவிடும். டிரைவர்கள் இதில் ஏமாற்ற முடியாது.
ஒரு வாரத்துக்குள்…
இதுதவிர ஆன்லைன் முன்பதிவுக்கான நேரமும் தளர்வு செய்யப்பட உள்ளது. தற்போது காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை என இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மொத்தமாக முன்பதிவு செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட இருக்கிறது. இந்த நடைமுறைகள் இன்னும் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் அமலுக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.