சுயமரியாதைச் சுடரொளிகள்!

Viduthalai
4 Min Read

1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வரலாற்றுப் பாதை படம் பிடித்து காட்டப்படுகிறது.

  1. இராமாமிர்தம் அம்மையார்
    (தேவதாசி முறையை ஒழிக்க போராடியவர்)

மூவலூர் இராமாமிர் தம் அம்மையார் தமிழ் நாட்டில் இருந்த தேவதாசி முறையை ஒழிக்க கடுமையாக போராடி யவர். தீண்டாமை, குழந்தை திருமணம் ஜாதி  ஒழிப்பு ஆகிய சமூக சீர்கேடுகளை ஒழிப்பதில் தீவிரமாக இருந்தார்.

தமிழகத்தின் அன்னிபெசன்ட்

தன் வாழ்க்கையையே பெண்ணுரிமைக்காக அர்ப்பணித்த இராமாமிர்தம் அம்மையாரை ‘தமிழகத்தின் அன்னிபெசண்ட் என அறிஞர்  அண்ணா புகழ்ந்துரைத்தார்.

இராமாமிர்தம் அம்மையார்  1883ஆம் ஆண்டு  மயிலாடுதுறை அருகில் உள்ள  மூவலூர் கிராமத்தில் பிறந்தார். பெற்றோர் கிருஷ்ணசாமி – சின்னம்மாள்.

தந்தை பெரியாரின் முற்போக்கு எண்ணங்களால் கவரப்பட்டு அவரது கொள்கைகளைத் தீவிரமாக பின்பற்றினார். அய்யா அவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறியபோது உடன் வந்தவர்களில் அம்மையாரும் ஒருவர். பிறகு சுயமரியாதை இயக்கத்தில் முழுமையாக தன்னை ஒப்படைத்துக் கொண்டார்.

1917இல் மயிலாடுதுறையில் தமது முதல் போராட்டத்தைத் தொடங்கினார். தேவதாசி ஒழிப்புக்கு பகலும், இரவும் பாராமல் பாடுபட்டார். தேவதாசிகளை ஒழுங்கிணைத்து மேடை நாடகம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதனை பொறுக்காத ஆதிக்க ஜாதியினரும், கொளுத்த பணக்கார கூட்டமும் கொதித்தெழுந்தனர்.

நாடக மேடை ஏறி அம்மையாரிடம் ரகளை செய்தனர். அவரின் கூந்தலைப் பிடித்து இழுத்து, அறுத்து சித்ரவதை செய்தனர். அதை அவர் பொறுமையுடன் சகித்துக் கொண்டார். இருப்பினும் எதிர்ப்பாளர்கள் விடவில்லை. அம்மையார்மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தினர். விஷம் கொடுத்து கொல்லவும் சதி திட்டம் தீட்டினர். ஆனால் உயிரை துச்சமாக மதித்து, துணிச்சலுடன் செயல்பட்டு ஆதிக்க வர்க்கத்தினரின் சதியை முறியடித்து, குறிக்கோளை அடைவதில் உறுதியாக நின்றார் அம்மையார்.

தேவதாசி ஒழிப்பு சட்டம்

சென்னை மாகாணத்தில் தேவதாசி முறை ஒழிப்பு சட்டமாக கொண்டு வர டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போராடியபோது அவருக்கு உறுதுணையாக இருந்தார் இராமாமிர்தம் அம்மையார்.

தேவதாசி முறையை ஒழிப்பது குறித்து சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட  காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான சத்யமூர்த்தி அய்யர்  ‘‘தேவதாசி முறையை ஒழித்தால் இந்திய கலாச்சாரமே கெட்டு விடும்’’ என்று கூறினார்.  அப்போது அவையில் இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அமைதியாக எழுந்து நின்று, ‘‘தேவதாசி முறையிலிருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம். இந்திய கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்காக இனி உங்கள் வீட்டுப் பெண்கள் தேவதாசிகளாக இருக்கட்டும்’’ என்றார். இதைக் கேட்ட அந்த தலைவர் சர்வ நாடியும் ஒடுங்கி வாயடைத்துப் போனார்.

தொடர் போராட்டங்களுக்குப்பிறகு சென்னை மாகாணத்தில் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது. செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுக்கு தேவதாசிகள் நிறைய பேரை அழைத்து வந்தார். தேவதாசிகள் மாநாடு ஒன்றை நடத்தி அதில் அய்யா அவர்களை அழைத்து பேச வைத்தார். பல புரட்சிகரமான தீர்மானங்களை நிறைவேற்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார்.

தாசிகளின் மோச வலை

இவரது சுயசரிதை நாவலான ‘தாசிகளின் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர்’ தேவதாசிகளின் அவல நிலையை அம்பலப்படுத்தியது. இந்நூலில் ஜோதிடம், மந்திரம், குறி சொல்லுதல், கடவுள், மோட்சம் பெயரால் நடைபெறும் அறிவீனம் பற்றி எழுதியது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

மயிலாடுதுறை பகுதியில் இசை வேளாளர் குடும்பத்துப் பெண்களை இணைத்து ‘நாகபாசத்தார் சங்கம்’ என்கிற அமைப்பை ஆரம்பித்தார். பின்னர் இது இசை வேளாளர் சங்கமாக மாறியது. திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு திருமணம் நடத்தி வைப்பது இந்த அமைப்பின் நோக்கம். இந்த சங்கம் சார்பில் இரண்டு மாநாடுகளை மயிலாடுதுறையில் கூட்டினார் இராமாமிர்தம். இதில் திரு.வி.க. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது திருச்சி உறையூரில் இருந்து சென்னை வரை வழி நடைப் பிரச்சார பயணத்தில் கலந்து கொண்டு இந்தி மறுப்புக் கொள்கைகளை பரப்பிக் கொண்டு வந்தார். 42 நாள் 577 மைல் நடை பயணம் மேற்கொண்டார். இப்பேரணியில் நடந்து வந்த ஒரே பெண்  அம்மையார் தான். இதற்காக கைதாகி 6 வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறந்த மேடை பேச்சாளரான அம்மையார் மேடையில் பகுத்தறிவு கருத்துகளை பரப்பினார். குடிஅரசிலும் நிறைய கட்டுரைகள் எழுதினார்.

இராமாமிர்தம் பெயரில் நல உதவி திட்டம்

ஆணாதிக்கத்தின் அடிமைகளாய் அடக்கி  வைக்கப்பட்டிருந்த பெண்ணினத்தைத் தட்டி எழுப்பி, பெண் அடிமை இல்லை என்று ஆர்ப்பரித்து, ஆணும், பெண்ணும் சமம் என்று விழிப்புணர்வை ஊட்டி, பெண்ணுரிமைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 27.6.1962 அன்று தம் 70ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார் வரலாற்றில் அழியாப் புகழை நிலை நிறுத்தினார்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் சேவைகளையும், தியாகங்களையும் கவுரவிக்கும் விதமாகவும், அவரது  நினைவாகவும் தமிழ்நாடு அரசு ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்துக்கு வேலூர் ராமாமிர்தம் அம்மையார் ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம் என பெயர் சூட்டி, தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *