‘‘உ.பி.யின் அவுரய்யா நகரில் வசிப்பவர் முகுந்த்மணி சிங் யாதவ். இவர் கடந்த 15 ஆண்டுகளாக உ.பி. முழுவதும் கதாகாலட்சேபம் செய்து வருகிறார்.
இச்சூழலில் அவர் மேற்கு பி.எட்டாவா மாவட்டம், தந்தர்பூர் கிராமத்தில் 2 வாரங்கள் கதாகாலட்சேபம் செய்ய அழைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு கும்பல் இவரை தாக்கியதுடன் அவரது தலையை மொட்டை அடித்து விரட்டியது. இவரது உதவியாளர் சந்த்குமார் யாதவும் அப்போது தாக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலை தளங்களில் பரவி உ.பி.யில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சம்பவம் குறித்து முகுந்த்மணி சிங் அளித்த புகாரில், “எனது சமூகம் என்னவென்று கேட்டு நான் பிராமணர் இல்லை என்று உறுதி செய்த பிறகு அக்கும்பல் என்னை தாக்கியது. என்னிடம் இருந்த ரூ.25,000 ரொக்கம் மற்றும் தங்க செயினை பறித்துக் கொண்டது” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக எட்டாவா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்
அகில இந்திய சாதுக்கள் சபையின் தேசியப் பொதுச் செயலாளர் சுவாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி கூறும்போது, ‘வால்மீகி முதல் கபீர்தாஸர் வரை பிராமணர் அல்லாத பலரும் கதாகாலட்சேபம் செய்துள்ளனர். இதை காரண மாக வைத்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
ஆனால், சங்கராச்சாரியார் அவீமுக்தேஷ்வரானந்த், “கதாகாலட்சேபம் செய்ய பிராமணர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் எட்டாவா எஸ் எஸ்பி பிரஜேஷ்குமார் ஸ்ரீவத்ஸ வாவை அகில இந்திய பிராமணர் சபையின் உ.பி. தலைவர் தலைமையில் ஒரு குழு சந்தித்தது. இவர்களுடன் இருந்த நடுத்தர வயது பெண் ஒருவர், முகுந்த் மணி சிங் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார்.’’
‘இந்து தமிழ் திசை’ நாளேடு இவ்வளவு விரிவாக செய்தியை வெளியிட்டுள்ளது. (26.6.2025 பக்கம் 12)
‘ஏதோ ஒரு காலத்தில் பார்ப்பனர்கள் உயர்ஜாதி ஆதிக்கம் செலுத்தியிருக்கலாம்.
இப்பொழுதெல்லாம் அவர்கள் அப்படியில்லை. அவுட்டுத் திரி வைத்துக் கொள்வதில்லை, பஞ்ச கச்சம் கட்டுவதில்லை, முனியாண்டி ஓட்டலில் சாப்பிடுகிறார்கள். பேண்ட், ஷுட் போடுகிறார்கள், கடலைத் தாண்டிச் செல்லக் கூடாது, அப்படிச் செல்லுவது தோஷம் என்ற பழைய சாஸ்திர மனப்பான்மையை எல்லாம் தூக்கி எறிந்து விட்டார்கள்; வீணாக ‘பிராமணர்களைப் பழி தூற்றாதீர்’ என்று பார்ப்பனர்களும், பார்ப்பனர்களுக்குப் பாதம் தாங்கும் விபீஷணர்களும், அனுமார்களும் வக்காலத்துப் போட்டுப் பேசுவதைப் பார்க்க முடிகிறது – கேட்கவும் முடிகிறது.
அது ஒரு புறத்தோற்றமேயன்றி உண்மை வேறு விதமாக இருக்கிறது – அவர்களின் அகத்தோற்றம் அசலாக அப்படியே இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ள செய்தியாகும்.
அதுவும் செய்தியை வெளியிட்டு இருப்பது ‘இந்து தமிழ் திசை’ ஏடு என்பது நினைவிருக்கட்டும்.
கதாகாலட்சேபம் செய்து வந்த முகுந்த்மணி சிங் யாதவ் என்ன சொல்லியிருக்கிறார்? ‘‘நான் பிராமணன் இல்லை என்று உறுதி செய்த பிறகு பார்ப்பனர் கும்பல் என்னைத் தாக்கியது, ரொக்கம் ரூ.25 ஆயிரத்தையும், தங்க சங்கிலியையும் பறித்தது’’ என்று பதறுகிறார். காவல் துறையிடமும் புகார் மனு கொடுத்துள்ளார்.
இதைப்பற்றி சங்கராச்சாரியார் அவீமுக்தேஷ்வரானந்த் என்ன சொல்லியிருக்கிறார்?
‘‘கதா காலட்சேபம் செய்ய பிராமணர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு’’ என்று உளறியிருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தில் பிஜேபி ஆட்சி நடக்கிறது. ஒரு மடத்தின் தலைவராக இருக்கக் கூடிய யோகி ஆதித்யநாத் – ஹிந்து வருண அமைப்பில் உயர் ஜாதித் திமிர் பிடித்த ஆசாமி.
ஹிந்துத்துவ ஆட்சியின் பரிசோதனைக் கூடமாக உத்தரப்பிரதேசம் உக்கிரமமாக ஆட்டம் போடுகிறது.
இவர் பட்டியலின மக்கள் வாழும் பகுதிக்குச் செல்வதாக இருந்தால், முதல் நாளே அப்பகுதிக்கு அரசு அதிகாரிகள் சென்று பட்டியலின மக்களுக்கு, சோப்பு, வாசனைப் பவுடர்களைக் கொடுத்து விடுவார்கள்.
‘ஹிந்துக்களே ஒன்று சேர்வீர்’ என்று இந்து முஸ்லிம் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் குரல் கொடுப்பவர்கள், மற்ற நேரங்களில் பார்ப்பனர் அல்லாதாரைப் பற்றி அவர்களின் நினைப்பு என்ன? அதுதான் பார்ப்பனரல்லாதார் ஒருவர் கதாகாலட்சேபம் நடத்திய போது, பார்ப்பனர்கள் அவரைத் தாக்கியது மூலம் அம்பலமாகியிருக்கிறது.
‘பஞ்சமர்களைத் தூர நில்’ என்று சொல்லுவதற்குக் காரணம் பிறப்பின் அடிப்படையில் அவர்களோடு ஒன்றியிருக்கும் புனித மற்ற தன்மை. உலகத்தில் உயர்ந்த வகை சோப்பினால் குளிப்பாட்டினாலும், அணிமணிகளால் அலங்கரித்தாலும் பஞ்சம மக்கள்மீது பரம்பரையாக பிறப்பின் அடிப்படையிலான நிலை என்பது மிகவும் அசுத்தமான, அவருவருப்பான நிலையாகும்’ (Filthy Inheridity) என்று சொன்னவர் சிருங்கேரி சங்கராச்சாரியார் (‘The Hindu Ideal’ Page 230)
இப்படி சொன்னவர் ஜெகத்குருவாம்.
உ.பி.யில் நடைபெற்ற கேவலத்தில் இன்னொன்றையும் கவனிக்கத் தவறக் கூடாது.
கதாகாலட்சேபம் செய்த பார்ப்பனரல்லாதவர்மீது ஒரு பார்ப்பனப் பெண் சுமத்திய அபாண்டம்! முகுந்த் மணிசிங் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் என்று சொல்லியிருக்கிறார்.
பார்ப்பனரல்லாதார் என்றால் அவர்களின்மீது பழி சுமத்த எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள் பார்ப்பனர்கள் என்பதைப் புரிந்து கொள்க!
அண்ணல் அம்பேத்கர்தான் அழகாக ஆழமாகவே சொன்னார். ‘ஹிந்துக்களுக்கு வேதம் தேவைப்படும்போது வியாசரை அழைத்தனர். இதிகாசம் தேவைப்பட்டபோது, வால்மீகியை அழைத்தனர். அரசமைப்புச் சட்டம் தேவைப் பட்ட போது, என்னை அழைத்தனர்’’ – என்றார் அம்பேத்கர். இதைவிட பார்ப்பனர்களைப் புரிந்து கொள்ள என்ன தேவை?