மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக, தத்துவார்த்த ரீதியாக விழிப்புணர்வை
புத்தகங்கள், பத்திரிகைகள் மூலமாக மட்டுமே ஏற்படுத்த முடியும்!
பெரியார் பல பதிப்பகங்களைத் தொடங்கி அந்த மகத்தான காரியத்தை செய்தார்;
நம்முடைய ஆசிரியர் தொடர்ந்து பின்பற்றி, புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்!
புத்தகங்கள், பத்திரிகைகள் மூலமாக மட்டுமே ஏற்படுத்த முடியும்!
பெரியார் பல பதிப்பகங்களைத் தொடங்கி அந்த மகத்தான காரியத்தை செய்தார்;
நம்முடைய ஆசிரியர் தொடர்ந்து பின்பற்றி, புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்!
சென்னை, ஜூன் 26 மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படவேண்டும். அரசியல் ரீதியாக, தத்துவார்த்த ரீதியாக விழிப்புணர்ச்சியை புத்தகங்கள், பத்திரிகைகள் மூலமாக மட்டுமே ஏற்படுத்த முடியும். அந்த மகத்தான காரியத்தை, பெரியார் பல பதிப்பகங்களைத் தொடங்கி செய்தார். நம்முடைய ஆசிரியர் அவர்கள் அதனைப் பின்பற்றி, தொடர்ந்து புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள்.
96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள்: கருத்தரங்கம்
கடந்த 22.6.2025 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் ‘‘96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ‘‘தந்தை பெரியாரின் புத்தகப் புரட்சி’’ புத்தகத்தினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
நான் பார்த்த கூட்டங்கள், திருத்துறைப்பூண்டி, விக்கிரவாண்டியம், கோட்டூர். என்னுடைய ஊரிலிருந்து 15 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள ஊர்கள். நான் அப்போது டவுசர்தான் அணிந்திருப்பேன்.
எங்கள் ஊரில் உள்ள ஆறு, ஏழு பையன்களிடம், பெரியார் பேசுகிறார்; போகலாம் வாருங்கள் என்று சொல்லி, அழைத்துக் கொண்டு, சைக்கிளில் செல்வேன்.
பெரியாருடைய கூட்டங்களுக்குச் செல்வேன்!
அப்போது, நான் மிகவும் விவரம் தெரிந்தவன் அல்ல. படித்துக் கொண்டிருந்த காலகட்டம். ஏதோ ஓர் ஈர்ப்பி னால், பெரியாருடைய கூட்டங்களுக்குச் செல்வேன்.
பெரியார் அவர்கள், 2 மணிநேரம், 3 மணிநேரம் பேசுவார். இப்போது கூட்டத்தில் உரையாற்றுபவர்கள், கடைசியில் நான் சொல்வதை கேட்டீர்கள் அல்லவா, என்னுடைய கட்சியில் வந்து சேருங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், பெரியார் அவர்கள் ஒருபோதும் அப்படிச் சொல்லியதில்லை.
ஆதாரம் இல்லாமல், எதையும் மேம்போக்காகப் பேசியது இல்லை!
ஆதாரம் இல்லாமல், எதையும் மேம்போக்காகப் பேசியது இல்லை. கால்களை சம்மணம் போட்டுக் கொண்டு பேசியதைத்தான் நான் பார்த்திருக்கின்றேன். பக்கத்திலே புத்தக அடுக்குகள் இருக்கும். இன்றைக்கு எப்படி ஆசிரியர் அவர்கள் பக்கத்தில் புத்தகங்களை வைத்துக்கொண்டு, ஆதாரத்தோடு பேசுகிறாரோ அதுபோல – பெரியாரிடமிருந்து ஆசிரியர் அவர்கள் கற்றுக்கொண்டதுதான் அது. ஒவ்வொரு புத்தகத்திலும் ஒர் அடையாளம் வைக்கப்பட்டிருக்கும்.
ஒரு செய்தியைச் சொல்லிவிட்டு, இராமாய ணத்தைப்பற்றிச் சொல்லிவிட்டு, ‘‘இதை நான் சொல்ல வில்லை; இதோ ‘‘இராமாயணம் சொல்கிறது’’ என்று அந்தப் பக்கத்தில் உள்ளதைப் படித்துக் காண்பிப்பார். மகாபாரதத்தை எடுத்துப் படித்துக் காண்பிப்பார். ஒவ்வொன்றையும் ஆதாரத்தோடு சொல்வார்.
சரியாக இருந்தால், ஏற்றுக்கொள்ளுங்கள்; இல்லையானால், நிராகரியுங்கள்!
ஆதாரத்தோடு அவர் சொன்னாலும்கூட, கடைசியாக அவருடைய உரையை முடிக்கின்றபோது, ‘‘நான் இவ்வளவு நேரம் பேசினேன். நீங்கள் எல்லோரும் அதைக் கேட்டீர்கள். அப்படி கேட்ட நீங்கள், நான் சொன்னது சரியா? என்று உங்களுடைய பகுத்தறிவு கொண்டு பரிசீலனை செய்யுங்கள். சரியாக இருந்தால், ஏற்றுக்கொள்ளுங்கள்; இல்லையானால், நிராகரியுங்கள்’’ என்று சொன்னார்.
இதில் எவ்வளவு உயர்ந்தபட்ச ஜனநாயகம் இருக்கி றது என்பதை நாம் பார்க்கவேண்டும்.
‘‘நான் சொல்வதைக் கேட்டால்தான், என்னுடைய கட்சியில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால், போ’’ என்றெல்லாம் சொல்கிறார்கள்.
இது என்ன ஜனநாயகம் என்று தெரியவில்லை?
ஆனால், பெரியார் அவர்கள், மிகச் சிறந்த ஜனநாயகத்தைப் பின்பற்றினார்.
‘‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’’
தோழர் ஜீவா, தந்தை பெரியாரோடு பயணம் செய்தவர். பெரியார் சொல்லித்தான், ஜீவா அவர்கள், ‘‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’’ என்ற புத்தகத்தை மொழியாக்கம் செய்தார். இன்றைக்கு ஆசிரியர் அவர்கள் அளித்த பேட்டியில் சொன்ன செய்தி, ‘விடுதலை’யில் வெளிவந்திருக்கிறது.
அதற்காக ஜீவாவிற்குத் தண்டனை வழங்கப்பட்டது என்பதெல்லாம் வேறு விஷயம்.
பெரியாரை விமர்சித்துப் பேசிய ஜீவா-
அவருக்கு வாழ்த்து சொன்ன தந்தை பெரியார்!
அவருக்கு வாழ்த்து சொன்ன தந்தை பெரியார்!
பிறகு, அவர் பெரியாரிடமிருந்து விலகினார்.
திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர் பெரியார். அந்த மாநாட்டில், ஜீவா, பெரியாரை விமர்சித்துப் பேசுகிறார்.
அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருப்போர் அனைவரும் திராவிடர் கழகத் தோழர்கள். தலைமை தாங்குவது தந்தை பெரியார்.
அவரை விமர்சித்து, இவர் பேசுகிறார்.
ஒரு தலைவர் என்ற முறையில், ‘‘இதற்கு மேல் உனக்குப் பேசுவதற்கு அனுமதி கிடையாது, உரையை நிறுத்து’’ என்று நிச்சயமாக பெரியார் சொல்லலாம். அல்லது எதையாவது சொல்லி, ஜீவாவின் உரையை நிறுத்தியிருக்கலாம். ஆனால், பெரியார் அவர்கள் அப்படி செய்யவில்லை.
எவ்வளவு நேரம் பேசினாரோ, அவ்வளவு நேரம் பேசுவதற்கு அனுமதி கொடுத்தார்.
பிறகு உரையாற்றிய பெரியார் அவர்கள், ‘‘தோழர் ஜீவா ஒரு கடுமையான உழைப்பாளி. அவருக்கேற்ற வேலையை நம்மால் கொடுக்க முடியவில்லை. அதனால், அவர் போகின்ற இடம்தான் சரி. வாழ்த்துகள்’’ என்றார்.
எனக்குத் தெரிந்து, பெரியார் அவர்கள் யாருக்கும் வாழ்த்துச் சொன்னதாக தெரியவில்லை. ஜீவாவிற்கு வாழ்த்துச் சொல்லி, வழியனுப்பி வைத்தார்.
எவ்வளவு பெரிய, சிறந்த ஜனநாயகத்தை தந்தை பெரியார் பின்பற்றியிருந்தால், ஜீவாவை உரையாற்ற அனுமதித்திருப்பார் என்பதற்கு அடையாளமாக இதனைச் சொல்லலாம்.
குன்றக்குடி அடிகளாரோடு உறவில் இருந்தார்; திரு.வி.க.வோடு உறவில் இருந்தார். இராஜாஜி அவர்களோ டும் உறவில் இருந்தார். எல்லோரையும் மதித்தார். அதேநேரத்தில், அவர்களுடைய கொள்கைகளை ஏற்றுக்கொண்டதாக, அதற்குப் பொருள் அல்ல.
எந்தெந்த சந்தர்ப்பத்தில், எப்படி எதிர்க்கவேண்டுமோ, எதிர்த்து, விமர்சனங்களை மிகக் கடுமையாகச் செய்திருக்கின்றார்.
1952 தேர்தலில் அய்க்கிய முன்னணியின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தவர் தந்தை பெரியார்!
நாடு விடுதலை பெற்ற பிறகு, 1952 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அப்போது அய்க்கிய முன்னணியில், கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. அந்தக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு, மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தவர் தந்தை பெரியார்.
அந்தக் கூட்டணி ஆட்சி அமைந்திருக்கவேண்டும்; ஏதோ ஒரு சூழலில், அது நடைபெறவில்லை. அந்த இடுக்கில்தான் இராஜாஜி முதலமைச்சர் ஆனார் – இந்தக் கூட்டணியிலிருந்த இரண்டு கட்சிகளின் ஆதரவோடு. அன்றைக்கே கட்சி மாறியது ஆரம்பித்துவிட்டது.
அய்க்கிய முன்னணியின் வெற்றிக்குக் காரணம் யார்? என்றால், தந்தை பெரியார்தான், முழுமுதற் காரணமாக இருந்து, சிறப்பாக பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
சி.எஸ்.சுப்பிரமணியம்
‘‘தமிழ்நாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி’’ என்று ஒரு புத்தகத்தை, சென்னை மாகா ணத்தில் தொடங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய முதல் கிளையின் செயலாளர் சி.எஸ்.சுப்பிரமணியம். 102 வயது வரையில் வாழ்ந்தவர், லண்டனுக்குச் சென்று படித்தவர்.
அவர்தான், ‘‘தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி’’ என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதினார். பிறகு அது தமிழாக்கம் செய்து வெளி யிடப்பட்டது.
பல்வேறு பகுதிகளில், ஆண்டு வாரியாகக் குறிப்பிட்டு, ‘குடிஅரசு’ இதழில் சிங்காரவேலர் எழுதிய கட்டுரைகள் – ஆண்டு வாரியாக, தேதி வாரியாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.
எல்லா தகவல்களையும் பதிவு செய்தார்!
அதேபோன்று, கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளி யிட்டது; நான் ஏன் நாத்திகன் ஆனேன்? போன்ற புத்தகங்கள் வெளியிட்ட விவரங்கள் எல்லாவற்றையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் – தந்தை பெரியாருக்கும்; அல்லது ‘குடிஅரசு’ இதழுக்கும் -இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும்; அல்லது திராவிடர் கழகத்திற்கும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குமான நல்ல நெருக்கமான, ஒரு கொள்கைப்பூர்வமான உறவுகளை விரிவாக அந்தப் புத்தகத்தில் மிகச் சிறப்பான முறையில் பதிவு செய்திருக்கிறார்.
கொள்கைப்பூர்வமான பதிப்பகங்கள்!
அந்த அடிப்படையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – திராவிடர் கழகம்; பெரியார் பதிப்பகங்கள் – நியூ செஞ்சுரி புக் அவுஸ் நிறுவனம்; இவை கொள்கைப்பூர்வமான கட்சிகள் – கொள்கைப்பூர்வமான பதிப்பகங்கள்.
இன்றைக்குச் சமூகத்தில் இருக்கக்கூடிய மூட நம்பிக்கை பழக்க வழக்கங்களை – அதைத்தான் இன்றைக்கு வகுப்புவாத சக்தியான பி.ஜே.பி. பயன்படுத்திக் கொள்கிறது.
இன்றைக்கு ஒரு நிகழ்ச்சி மதுரையில் நடைபெறு கிறது. அது குறித்தும் ஆசிரியர் அவர்கள், அந்தக் கட்சியினுடைய தலைவர் அளித்த பேட்டியை பதிலாக்கி, நன்றி சொல்லி, அவருடைய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
முருகன் கடவுளின்மீதோ, மற்ற கடவுள்களின் மேல் மக்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையை, அற்பத்தமான அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்!
மக்களிடத்தில் இருக்கின்ற மூடநம்பிக்கை, பழக்கவழக்கங்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
மதத்தின்மீது இருக்கின்ற நம்பிக்கை, கடவுளின்மீது இருக்கின்ற நம்பிக்கை, ஜாதியின்மீது இருக்கின்ற நம்பிக்கை – இந்த மூடப் பழக்கவழக்கங்களையெல்லாம் தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அந்த அரசியல் ஆதாயம் என்பது, ஏதோ வெறும் தேர்தல், தேர்தல் வெற்றி, பிரதமர் பதவி, முதலமைச்சர் பதவி என்பதோடு நிற்காத ஒரு செய்தி.
அதை எதற்குப் பயன்படுத்திக் கொள்ள விரும்பு கிறார்கள் என்று சொன்னால், தங்களுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்த, நிலைநாட்ட இவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் இதுபோல் இருந்தார்கள்; அடுத்த தேர்தலில் மாறிவிடுவார்கள் என்பது பொருள் அல்ல. அவர்களுக்கென்று ஒரு சித்தாந்தம் இருக்கிறது; ஒரு தத்துவம் இருக்கிறது; ஒரு கொள்கை இருக்கிறது; ஒரு லட்சியம் இருக்கிறது. அவற்றை இந்த மண்ணில் செயல்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள். அதற்கு வாய்ப்பாக அவர்களுக்கு ஆட்சி வேறு கிடைத்துவிட்டது. அதையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இதை சாதாரண முறையில் நாம் நிராகரித்துவிட முடியாது. தந்தை பெரியார், ஜீவா பேசிக் கொண்டி ருந்ததை, கேட்டுக்கொண்டே இருந்தார்; அது ஒரு சிறந்த ஜனநாயகம் என்று குறிப்பிட்டேன்.
ஆசிரியர் அவர்கள், தேர்தல் பிரச்சாரத்திற்காக திருப்பூருக்குச் சென்று பேசினால், ஏன் கலகம் செய்கிறார்கள். யார் கலகம் செய்வது?
அரசியல் ரீதியாக, தத்துவார்த்த ரீதியாக அவர்களிடம் பதில் கிடையாது!
இரண்டு நாள்களுக்கு முன்பு, திண்டுக்கல்லில் நடைபெற்ற சி.பி.எம். கூட்டத்தில் யார் கலகம் செய்வது? தகராறு செய்தது யார்?
நாம் சொல்லுகின்ற கருத்துக்கு, நாம் சொல்லுகின்ற கொள்கைகளுக்கு அவர்களிடத்தில் பதில் கிடையாது.
அரசியல் ரீதியாக, தத்துவார்த்த ரீதியாக அவர்களிடம் பதில் கிடையாது. நாம் பேசுவதைக் கேட்டுக் கோபப்படு கிறார்கள்.
காந்தியை ஏன் சுட்டுக் கொன்றார்கள்? ஏனென்றால், காந்தியை, கொள்கை ரீதியாக அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அவருடைய மதச்சார்பின்மை கொள்கையை, அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. ஆகவேதான், ஆளையே காலி செய்கிறார்கள்.
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.
ஒன்றன் பின் ஒன்றாக பகுத்தறிவாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, நான்கு பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள், ஒரு பெண் பத்திரி கையாளர் உள்பட.
பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, நரேந்திர தபோல்கர் என்று வரிசை யாக நான்கு பேர் ஒன்றன் பின் ஒன்றாக சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
அதற்கு என்ன காரணம்?
அவர்களை எதிர்த்து விமர்சனம் செய்வதை அவர்களால் ஏற்க முடியவில்லை.
ஏனென்றால், அவர்களிடம் நேர்மையான பதில் இல்லை. உண்மையான பதில் இல்லை. பொய், புரட்டுகளைச் சொல்லி, தங்களைத் தற்காத்துக் கொண்டி ருக்கிறார்கள். அதை எதிர்த்து, நாம் சொல்கின்றபோது, அவர்களிடம் பதில் இல்லை.
இப்படிப்பட்ட சூழலில், மக்களை எப்படி தயார் செய்வது?
வெறும் தேர்தல் மூலமாக மட்டுமே தயார் செய்துவிட முடியுமா?
மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட வேண்டும். அரசியல் ரீதியாக, தத்துவார்த்த ரீதியாக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும். அதுதான் அவர்களுக்கு சாவு மணி அடிக்கும்.
அந்தப் பணியைத்தான், தந்தை பெரியார் தொடங்கி, 96 ஆண்டுகாலமாக அந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இது ஒரு சாதாரணமான விஷயமல்ல.
இராமாயணம் திரும்பத் திரும்ப பல வகைகளில் வந்துகொண்டே இருக்கிறது. அதேபோன்று மகாபாரதம்.
தொலைக்காட்சி நாடகங்கள் வந்துகொண்டி ருக்கின்றன. செய்தி முடிந்தவுடன், இராமாயண நாட கம்தான்.
புத்தகங்கள்தான்; பத்திரிகைகள்தான்!
ஆக, இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரு விழிப்புணர்வை எப்படி ஏற்படுத்த முடியும் என்றால், புத்தகங்கள், பத்திரிகைகள் மூலமாக மட்டுமே முடியும்.
அந்த மகத்தான காரியத்தை, பெரியார் பல பதிப்ப களைத் தொடங்கி செய்தார். அதனைத் தொடர்ச்சியாக நம்முடைய ஆசிரியர் அவர்கள் தொடர்ந்து பின்பற்றி, தொடர்ந்து புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது; பழைய புத்தகம் ஒன்றை எடுத்துக் காட்டினார்கள். பைண்டிங் செய்து பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். ஏனென்றால், எக்காலத்திற்கும் அதுபோன்ற புத்தகங்கள் தேவை என்ற முறையில், அவற்றைத் மறுபதிப்பு செய்து, திரும்பத் திரும்ப வாசகர்களுக்கு, மக்களுக்குக் கொடுத்து, அதனைப் படிக்கச் செய்வதன்மூலமாகத்தான் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முடியும்.
இதுதான் மாற்று – இதுதான் வகுப்புவாதத்திற்கு, ஆர்.எஸ்.எஸ். அபாயத்திற்கு மாற்று.
பெரியார் பதிப்பகத்திற்கு, நியூ செஞ்சுரி புக் அவுஸ் நிறுவனத்தின் சார்பில் வாழ்த்துகள்!
அத்தகைய மகத்தான பங்களிப்பை செய்துகொண்டி ருக்கின்ற பெரியார் பதிப்பகத்திற்கு, நியூ செஞ்சுரி புக் அவுஸ் நிறுவனத்தின் சார்பில் வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
வயது அடிப்படையில் பார்த்தால், நியூ செஞ்சுரி புக் அவுஸ் தம்பி பெரியார் பதிப்பகம் அண்ணன். அது 75, இது 96.
ஆசிரியர் அவர்களுக்கும், திராவிடர் கழகத்திற்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றி!
ஆகவே, நியூ செஞ்சுரி புக் அவுஸ் நிறுவனத்தின் சார்பிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், எனது உணர்வுபூர்வமான, மனப்பூர்வமான வாழ்த்து களைத் தெரிவித்து, இது மேலும் மேலும் வளர்ந்தோங்க வேண்டும். இந்த அற்புதமான, மிகச் சிறப்பான வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததோடு மட்டுமல்லாமல், ஆசிரியர் அவர்கள் எழுதிய ‘‘தந்தை பெரியாரின் புத்தகப் புரட்சி’’ நூலையும் வெளியிடுவதற்கான வாய்ப்பினை வழங்கிய ஆசிரியர் அவர்களுக்கும், திராவிடர் கழகத்திற்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைக் கூறி, நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உரையாற்றினார்.