தமிழ்நாட்டு மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 25 ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு மீன வர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப தேவையான நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று (24.6.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

“தமிழ்நாட்டைச் சேர்ந்த 651 மீனவர்கள் தற்போது ஈரானில் சிக்கித் தவித்து . கடும் சிரமத்தில் உள்ளனர். மீனவர்கள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லாததால் அவர்களது குடும்பத் தினர் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர்” என முதலமைச்சர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

உரிய நடவடிக்கை

அக்கடிதத்தில், மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்களின் நிலை குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் , ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மீனவர்கள் எவ்வளவு பேர்?

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 498 மீனவர்களும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 78 மீனவர்களும், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 72 மீனவர்களும் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 3 மீனவர்களும், ஆகமொத்தம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 651 மீனவர்கள் தற்போது ஈரானில் சிக்கித் தவிப்பதாகவும், அங்கு அதிகரித்து வரும் போர்ச் சூழல் காரணமாக கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதோடு, தமிழ் நாட்டிற்குத் திரும்ப முடியாமல் உள்ளனர் என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மீனவர்களின் பாதுகாப்பு குறித்த தகவல்கள் ஏதும் இல்லாத காரணத்தால், தாயகத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினர் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர் என்றும், மீன வர்கள் தாயகம் திரும்பும் செய்திக்காக காத்திருப்பதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் , தற்போது அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலையில் சிக்கியுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பிட அரசின் உதவியை நாடுவதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தேசிய தூதரகம் தலையிட வேண்டும்

இந்த மனிதாபிமான விஷயத்தில், ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் விரைவான தலையீடு, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும். அவர்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த ஆறுதலைத் தரும் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் . ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும். அவர்களின் நலனை உறுதிப்படுத்தவும். பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கும் தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை தனது கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *