‘‘செத்த மொழி’’ சமஸ்கிருதத்துக்கு ரூ.2,583 கோடி நிதியா?

viduthalai
3 Min Read

ஒன்றிய அரசு சமஸ்கிருத மொழி மேம்பாட்டிற்காக கடந்த பத்து ஆண்டுகளில் (2014-2015 முதல் 2024-2025 வரை) சுமார் ரூ2,533 கோடி நிதி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட அய்ந்து செம்மொழிகளுக்கு வெறும் ரூ13 கோடி மட்டுமே ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான தகவல், மொழி ஆர்வலர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்  அறியும் சட்டத்தின் (ஆர்.டி.அய்.) தகவலின்படி, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.230 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழை உள்ளடக்கிய மற்ற அய்ந்து செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட 17 மடங்கு குறைவாகும்.

அனைத்து செம்மொழிகளுக்கும் ஒதுக்கப்பட்ட மொத்த நிதியை விட சமஸ்கிருதத்திற்கு
17 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது, ஒன்றிய அரசின் மொழி பாகுபாட்டை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

தமிழின் வளர்ச்சிக்கும், ஆய்வுகளுக்கும், அதன் செம்மொழித் தகுதியைப் போற்றும் வகையிலும் போதிய நிதி ஒதுக்கப்படாதது தமிழ் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசு உடனடியாக இந்த நிதி ஒதுக்கீட்டுப் பாரபட்சத்தை மறுபரிசீலனை செய்து, அனைத்துச் செம்மொழிகளுக்கும் சமமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

“உலக நாடுகள் எங்கும் பயணம் செல்லும் பிரதமர், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரையும், உலகத்தையே உறவாகக் கொண்ட கணியன் பூங்குன்றனாரையும், மேற்கோள் காட்டுகிறார். ஒன்றிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வள்ளுவர் குறளைத் தேடித்தேடி மேற்கோள் காட்டுகிறார்.  தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவினர் இதனை ஒரு பெருமையான ஒன்றாக எடுத்து எரிச்சலூட்டும் விதமாக சத்தம் போடுகின்றனர்.

சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டில்லியில் தேசிய சமஸ்கிருத மய்யம் நிறுவப்பட்டு  2014-2015 முதல் 2024-2025 வரை  ரூ.2,533 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சமஸ்கிருதம்  மட்டும்தான் இருக்கிறதா? பல கோடி மக்கள் பேசும் மொழிகள் உள்ளன. அரசியல் சட்டம் 8ஆவது அட்டவணையில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ஆனால், யாருமே பேசாத வெறும் கோவில்களில் மட்டுமே மக்களை ஏமாற்ற மந்திரமாக உச்சரிக்கப்படும்  செத்து சுண்ணாம்பாகிப் போன (Dead Language) சமஸ்கிருதத்துக்கு மட்டும் இத்தனை ஆயிரம் கோடிகள்.

ஒன்றிய  அரசின் கீழ் வரும் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு 2015-2016: ரூ11.99 கோடி 2016-2017: ரூ5.10 கோடி 2017-2018: ரூ10.67 கோடி 2018-2019: ரூ4.65 கோடி  2019-2020: ரூ9.8 கோடி 2020-2021: ரூ11.73 கோடி 2021-2022: ரூ12.00 கோடி 2022-2023: ரூ12.00 கோடி 2023-2024: ரூ15.25 கோடி என மொத்தம் ரூ77.94 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது.

ஒன்றிய அரசு சம்ஸ்கிருதத்தைப் பாதுகாக்க மற்றும் மேம்படுத்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்காக சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மய்யங்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் என பலவற்றிற்கும் கணிசமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.

இதற்கெல்லாம் அடிப்படை ஆர்.எஸ்.எஸ். கொள்கை தான். இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம்தான் என்று ஆர்.எஸ்.எஸின் குருநாதர் எம்.எஸ். கோல்வால்கர் தமது ‘ஞான கங்கை’யில் (Bunch of Thoughts) குறிப்பிடுகிறார்.

நடப்பது ஆர்.எஸ்.எஸ். ஆட்சிதானே! பிஜேபி என்பது ஆர்.எஸ்.எஸ். விரியனின் குட்டி தானே!

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பார்ப்பனீய மேலாண்மையை நிலை நிறுத்தும் ஹிந்து ஆட்சியில் இதுவும் நடக்கும். இதற்கு மேலும் நடக்கும் விழிப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருந்து வீழ்த்த வேண்டியது பார்ப்பனரல்லாத வெகு மக்கள் தான்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *