இங்கு இப்போது என்ன தேவை இருக்கிறது என்றால் ஒரு சிறிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால், அரசியல் ரீதியாகவும் நாம் பலம் வாய்ந்தவர்களாக வரவேண்டும். அரசியல் ரீதியாக பலம் வாய்ந்தவர்களாக நாம் ஆகவேண்டும் என்றால் பணத்திலும் அந்த அளவிற்குப் போக வேண்டும். நாம் இப்போதுதான் ஒரு 15, 20 ஆண்டுகளாக இங்கு வருகிறோம். நம்மில் நிறையப் பேர் தொழில் செய்வது கிடையாது. தொழில் முனைவது மிகவும் முக்கியம் ஏனென்றால் அதில்தான் பணம் சுற்றிக்கொண்டிருக்கும். நீங்கள் ஒரு பொறியாளராகவோ மருத்துவராகவோ இருக்கிறீர்களென்றால், இந்த அளவிற்கு ஸ்பான்ஸர் பண்ண முடியாது. ஆனால் பனியாக்கூட்டமும் பாப்பனர்களும் இதை மிகவும் சரியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் சிக்கலை முதன்மைப்படுத்தாமல் நாம் மாற்றத்தைக் கொண்டு வருவது என்பது நமக்கு பெரிய சவால் நிறைந்ததாக இருக்கும்.
இந்தியாவில் ஜாதி அமைப்பு
இவ்வளவு சிக்கல்கள் இங்கு இருக்கும்போது 2005இல் கலிபோர்னியா பாடநூல் தொடர்பான “California Textbook Case”( கலிபோர்னியா பாடநூல் வழக்கு) என்று ஒரு வழக்கு வருகிறது. அது என்ன வழக்கு என்றால் இங்கிருக்கக்கூடிய தொடக்கப் பள்ளிகளில் பாடப்புத்தகங்களில் நாகரிகங்கள் பற்றி அதாவது ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய வரலாற்றைப் பற்றி அவர்கள் சொல்வார்கள். சீன வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். அடுத்த வகுப்பில் மற்றொரு நாட்டைப் பற்றி தெரிந்துகொள்வோம். ஏனென்றால் வெவ்வேறு நாட்டு மக்கள் கலந்து படிக்கிற ஒரு நாடு அல்லவா? அதனால் ஒவ்வொரு நாட்டின் வரலாற்றையும் படிப்பார்கள். அப்படி இந்திய வரலாற்றைப் படிக்கிறபோது அதில் வரக்கூடிய 2,3 செய்திகள் இவர்களை நெருக்கடிக்குள்ளாக்குகிறது. ஒன்று இந்தியாவில் ஜாதி அமைப்பு இருக்கிறது என்கிற செய்தி அந்தப் புத்தகத்தில் வருகிறது. இன்னொன்று, பெண்களைக் குறிப்பாக விதவைகளாக இருக்கக்கூடிய பெண்களைச் சிதையில் தள்ளி கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். கொன்றிருக்கிறார்கள். அதாவது பழைய இந்தியாவில் நடந்திருக்கிறது என்று செய்தி போடுகிறார்கள். ஜாதிப் பிரச்சினை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று அந்தப் பிள்ளைகள் படிக்கிறார்கள். இந்து அமைப்பினர் இது எங்களை மிகவும் பாதிக்கிறது என்கிறார்கள். நான் ‘இந்து’ என்ற அடையாளத்தையே மறைத்து வாழவேண்டியிருக்கிறதென்று அந்தக் வழக்கில் ஒரு குழந்தை சொல்கிறது. எல்லோரும் என்னைக் கேள்வி கேட்கிறார்கள். உங்கள் நாட்டில் இப்படியெல்லாம் செய்தார்களாமே. சதி என்கிற கொடுமை இருந்ததாமே என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். அதாவது நடந்த உண்மையைக் கேள்வி கேட்பதற்கே அவர்கள் மனம் அவ்வளவு புண்படுகிறதென்றால், இன்றும் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற அந்த மக்களுக்கு எப்படி இருக்கும் என்று புரிகிற மனப்பான்மை அவர்களுக்கு இல்லை.
அந்த வழக்கு நடக்கிறது. பெரிய பிரச்சினையாகிறது. கிட்டத்தட்ட 2005லிருந்து 2014 வரைக்கும் இழுக்கிறார்கள் அந்த வழக்கை ஓரளவுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தாலும் கூட, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், இந்த இடத்தில் பிள்ளைகளுக்கு நீங்கள் இதைச் சொல்லக்கூடாது. அமெரிக்கர்களுக்கு இந்த வரலாற்றைச் சொல்லிவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதுவும் பள்ளிக் கூடங்களில் இந்த வரலாற்றை நீங்கள் சொன்னால் அது அடுத்த தலைமுறைக்கு சென்றடையும். அதைத் தடுக்க வேண்டுமென்பதில் அவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள்.
கலைஞரைக் கொண்டாடுகிற மக்கள்
இன்னொரு இடத்தில், இந்த ஜாதி எப்படி வெளிப்படும் என்று பார்த்தால் வியப்பாக இருக்கும். நம்முடைய படிப்பு வட்டக் கூட்டங்களிலையே இது வெளிப்பட்டிருக்கிறது. ஒரு தமிழ் அமைப்பிற்குள் படிப்பு வட்ட அமர்வு நாங்கள் நடத்தினோம். அது, நம்முடைய கலைஞர் அவர்கள் மறைந்து முதலாமாண்டு. அதனால் தொடங்குவதற்கு முன்பாக அவருக்குப் புகழ் வணக்கம் செலுத்திவிட்டுத் தொடங்கலாம் என்பது தோழர்களின் முடிவு. அதைச் செலுத்திவிட்டு நாங்கள் தொடங்குகிறோம். நிகழ்ச்சி தொடங்கி எல்லாம் முடிந்த பிறகு ஒருவர் வேகமாக வருகிறார். வந்து கலைஞரை அவ்வளவு மோசமாகத் திட்டுகிறார். அவர்கள் ஜாதி ரீதியாகவே திட்டுவார்கள், கலைஞரை. ஏனென்றால் இங்கு வேறு எதிர்ப்பு ஏதுவும் கிடையாது அல்லவா? கலைஞரைக் கொண்டாடுகிற மக்கள் இங்கு அதிகமாக இல்லை என்று நினைத்து அவர் திட்டுகிறார். எப்படி நீங்கள் பெரியார் பெயரை வைத்துக் கொண்டு கலைஞருக்கு புகழ் வணக்கம் சொல்வீர்கள் என்று திட்டுகிறார். எல்லோரும் சாப்பிடும் இடத்திற்கு வந்து திட்டிக்கொண்டு இருக்கிறார். நாங்கள் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்து விட்டோம். ஏனென்றால், திருப்பி அவர்களுடன் சண்டை போட முடியாது என்று அமைதியாக இருந்து விட்டோம். சரி நாங்கள் செய்வதை நாங்கள் செய்வோம். நீங்கள் செய்வதை நீங்கள் செய்யுங்கள் என்று கூறிவிட்டோம். கலைஞரின் எதிர்ப்பு அதற்குள் ஜாதி இருக்கிறது அதைத்தான் நான் முக்கியமாகச் சொல்லவேண்டும் என்று நினைக்கிறன். அதற்குக் காரணமாக ஈழம், அது, இது என்று என்னன்னவோ சொல்லுவார்கள். உண்மையில் அதை யார் பேசுகிறார்கள் என்று பார்த்தால் முழுக்க முழுக்க நிலவுடைமைச் சமூகத்திலிருந்து வருகிறவர்களிடம் கலைஞர் எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏனென்றால், நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வந்தார் அல்லவா? அது அவர்களுக்குள் நன்றாக வேலை பார்த்திருக்கிறது. அதனால் அவரைப் பற்றிப் பேசும்போது அவர்களை அறியாமல் அவர் மீது ஜாதி ரீதியான இழிவைச் சுமத்துவார்கள். நம் காதிலிருந்து இரத்தம் வரும் வரைக்கும் அவரைப் பற்றி இழிவாகப் பேசுவார்கள். ஆனால் நாம் செய்வதைச் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.
இதெல்லாம் முடிந்த பிறகு ஒருவர் ஒரு நாள் 45 நொடிகள் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அவர் பெயரைக் கூற விரும்பவில்லை. ஏனென்றால், அதைப் பதிவு செய்யவில்லை. அவர் பேசும்போது, “பெரியார்-அம்பேத்கர் பெயரை வைத்துவிட்டால் அதை மட்டும் பேசுங்கம்மா. கலைஞரையெல்லாம் ஏன் பேசுகிறீர்கள்? இப்படியெல்லாம் செய்தால் பிறகு உங்கள் நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் வராது தெரியுமா?” என்று சொல்கிறார். நீங்கள் இதைப் பதிவு செய்வதற்கு முன்பாகவே 45 நொடிகளுக்குள் தொலைபேசி துண்டிக்கப்படுகிறது. இந்த மாதிரியான ஒரு நிலை. இதையும் ஜாதி ரீதியாகத்தான் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
நீங்கள் ஒரு நிகழ்ச்சி நடத்துகிறீர்கள். நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், யாரைப் பேசக் கூடாது என்பது முதற்கொண்டு அறிவுரை எல்லாம் வழங்குவார்கள். அதுவும் நீங்கள் ஒரு பெண்ணாக இருக்கிறீர்கள் என்றால், இது ரொம்ப சின்னப் பொண்ணு, இதற்கு என்ன தெரியும் என்றுதான் அவர்கள் மனதில் இருக்கும். நாங்கள் நடத்துகிறோம். எல்லாம் எங்களுக்குத் தெரியும், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்பதையெல்லாம் அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அந்த அளவிற்கு இது ஒரு நிலை.
இங்கு ஒரு மாநிலத்திலிருந்து ஒரு சில மாதங்களுக்கு முன் ஒரு தோழர் வந்து எங்களைக் கூப்பிட்டுப் பேசினார். இவர் தமிழ்நாட்டு மாணவர். இவருடைய பல்கலைகழகத்தில் அவருக்கு வழிகாட்டியாக (‘guide’) ஆக இருக்கக்கூடியவர் ஒரு உயர் வகுப்பைச் சேர்ந்தவர். அவர் வடநாட்டுக்காரர். அவர் என்ன செய்கிறார் என்றால் இவருடைய ஆய்வறிக்கையை (Thesis) எடுத்து அவர் பெயரைப் போட்டுக்கொள்கிறார். அதை எதிர்த்து என்னால் எதுவுமே செய்யமுடியவில்லை என்கிறார். அந்தப் பல்கலைக்கழத்திற்குள் இந்து அமைப்பினர் செயல்படுகிறார்கள் என்ற செய்தியையும் சொன்னார். எல்லோரும் சேர்ந்து படிப்பு வட்டம் தொடங்கி செயல்படுகிறார்கள். நாம், நம்முடைய பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் கிளையை அங்கு தொடங்க வேண்டும் என்று சொன்னார். “தாராளமாகத் தொடங்கலாம். நாங்கள் தொடங்கியதே அதற்குத்தான். அமெரிக்கா போன்ற இடங்களில் நம் ஊரில் போல சில physical head quarters எல்லாம் வைக்க முடியாது. முடிந்த அளவுவிற்கு நாம் வாட்சப்பில் செயல்படுவோம். பதிவு செய்யப்பட்ட பார்ப்பனர் அல்லாதார் அமைப்பு (Registered non-brahmin organization) என்றால் கூட அதற்கு ஒரு முகவரி கொடுத்துவிட்டு நாம் நிகழ்ச்சிகளை வாட்சப் மூலமாக, கரோனாவிற்குப் பின் முழுக்க முழுக்க இணைய வழியாகத்தான் நாம் நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். ஆனால் அந்தந்த ஊரில் இருக்கக்கூடிய தோழர்கள் இணைந்து அவர்கள் நிகழ்ச்சியை நடத்துவார்கள். இந்த மாதிரி நீங்கள் தொடங்கலாம்” என்று நாங்கள் சொன்னோம். நீங்கள் தொடங்கும்போது ஜாதியப் பாகுபாடு உருவாகிறது அல்லது இந்து அமைப்புகள் பெரிதாக வளர்கிறார்கள் என்னும்போது அவர்கள் நம்மைத் தொடர்பு கொண்டு இந்தப் படிப்பு வட்டத்தின் தேவை என்ன என்று கேட்கிறார்கள். இந்தக் கேள்விதான் அந்தத் தேவையைச் சொல்கிறது.
கோயில்களுக்குள் மாதவிடாயின் போது பெண்கள் வரக்கூடாது
ஜாதிரீதியான ஒரு ஏற்றத்தாழ்வு இங்கு இருக்கும்போது அதை எதிர்ப்பதற்குப் பெரியாரும், அம்பேத்கரும் ஒரு படிப்பு வட்டமும் தேவைப்படும் நிலைதான் இன்றைக்கும் இங்கு இருக்கிறது. ஏன் பெரியாரைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். கோயில்களை இங்கு வைத்திருக்கிறார்கள், கோயில்களில் குறிப்பிட்ட ஒரு ஜாதியினர்தான் கருவறைக்குள் போகிறார்கள், கோயில்களுக்குள் மாதவிடாயின் போது பெண்கள் வரக்கூடாது என்று தடை போட்டு பெரிய சர்ச்சை எல்லாம் ஏற்பட்டது. இந்த மாதிரி ஒரு நிலையெல்லாம் இருக்கும் போது படிப்பு வட்டமும் தேவைப்படத்தானே செய்யும்.
அமெரிக்க அய்க்கியத்தில் ஜாதி
இது ஒரு 10 ஆண்டுகளில் நான் என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்வது. இங்கு இரண்டாவது தலைமுறையாக வந்த சிலர், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் சமத்துவக் கூடங்கள் (Equality labs) என்கிற அமைப்பை ஏற்படுத்தி நடத்தி வருகிறார்கள். அதனுடைய ஒரு நிகழ்ச்சி நியூயார்க்கில் நடந்தது. அதில் கலந்து கொள்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த அமைப்பில் ஜாதி இந்தியாவில் மக்கள் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு என்று நாம் சொல்கிறோம் என்றாலும், ஆசியா. முழுக்க இந்த சிந்தனை தோன்றியிருக்கிறது. ஜப்பானில் ஒரு குறிப்பிட்ட மக்களை out caste (புறச்சாதியினர்) என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த மக்கள் கலந்து கொண்டார்கள். பஞ்சாபில் இருக்கக்கூடிய குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். இவ்வாறு எல்லா மக்களையும் இணைத்து அவர்கள் செயல்படுகிறார்கள். அந்தக் கூட்டத்தில்தான் ஒரு சர்வே எடுத்திருக்கிறார்கள். “Caste in the United States” (அமெரிக்க அய்க்கியத்தில் ஜாதி என்பதுதான் அந்த நூல். 2019இல் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘Humanitarian Conference’ க்காக வந்தார். சிகாகோவில் இருக்கக்கூடிய பெரியார் படிப்பு வட்டத் தோழர்கள் இந்த சர்வேயை அவரிடம் கொடுத்தோம். பள்ளிகளிலும், பெரிய பல்கலைக்கழகங்களிலும் ஜாதி எப்படிச் செயல்படுகிறது என்று சொன்னோம். கெட்ட வாய்ப்பாக வடநாட்டிலிருந்து வருபவர்கள் அவர்களுடைய surname வைத்துக்கொள்வதால், யார் தாழ்த்தப்பட்டோர் என்று கண்டுபிடிப்பது அவர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கிறது. ஒரு பெண். “நான் தாழ்த்தப்பட்டோர் என்பதைத் தெரிந்துகொண்டு இங்கிருக்கக்கூடிய உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர். “you are a slut”(நீ ஒரு இழி மகன்) என்று சொல்லி தப்பாக நடக்க முயன்றார்” என்று அந்த சர்வேயில் சொல்லியிருக்கிறார்.
அடுத்த தலைமுறைக்கு இங்கிருக்கிறவர்கள் ஜாதியைக் கொண்டு போகவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் அந்தப் பிள்ளைகள் பல்கலைக்கழகங்களில் எப்படி தலித் மாணவர்களை ஒதுக்குகிறார்கள் என்று அந்த சர்வே மிகவும் விரிவாகப் பேசுகிறது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்குள்ளும் இப்படி நடக்கிறது. இங்கு பள்ளிகளில், நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளிலும் இது நடக்கிறது. ஏனென்றால் தொடக்கப் பள்ளிகளில் கொஞ்சம் குழந்தைகளாக இருப்பதால், அந்தப் பிள்ளைகளுக்கு இது தெரியவில்லை என்றாலும் கூட நடுநிலைப்பள்ளிகளுக்கு வரும்போது, உயர்நிலைப் பள்ளிகளுக்கு வரும்போது இந்தக் குழந்தைகள் surname-அய் வைத்துக்கொண்டு ஒதுக்குகிறார்கள். இந்த தாழ்த்தப்பட்ட பிள்ளைகளை ஒதுக்குகிறார்கள் என்ற செய்தியெல்லாம் போட்டு, அதையெல்லாம் சேர்த்துத்தான் இப்போது சியாட்டிலில் ஒரு ‘ordinance’ (அவசரச் சட்டம்) கொண்டு வந்திருக்கிறார்கள். சியாட்டில் ஒரு நகரம், அதற்குள் ஒரு அவசரச் சட்டம் நாம் கொண்டு வந்திருக்கிறோம். அது வாஷிங்டன் மாநிலம் முழுக்க வரவில்லை. ஆனால் இப்போது ஒரே நேரத்தில் கலிஃபோர்னியாவிலும் அவர்கள் அதற்கான முயற்சி எடுத்திருக்கிறார்கள். ஒரே ஒரு கமிட்டி மட்டும்தான் போடப்பட்டு இருக்கிறது. 9 கமிட்டிகள் அனுமதிக்கப்பட்ட வேண்டும். அது கிட்டத்தட்ட 10 மாதங்களாவது ஆகும். மிகப்பெரிய பணி. ஆனால் தீர்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் முதன்முதலில் கலிஃபோர்னியாவில் வருவது மிகவும் முக்கியம். அது மிகப் பெரிய மாநிலம். அதனால் அங்கு வந்துவிட்டால், மற்ற மாநிலங்களில் பெரிய மாநிலங்களில் 5,6 கொண்டு வந்துவிட்டால், பிறகு அமெரிக்கா முழுமைக்கும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இணைந்து அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அது வெற்றி பெற்றால். இங்கிருக்கக்கூடிய இந்தியர்களுக்கு அது ஒரு பாதுகாப்பாக இருக்கும்.
இந்து ஃபோபியா
ஆனால் இந்து அமைப்புகள், இது இந்து ஃபோபியா, இந்து மதத்திற்கு எதிரான ஒரு நிலையைக் கொண்டிருக்கிறார்கள் என்று நிறைய எதிர்ப்புகளைத் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், அதையெல்லாம் எதிர்க்கக்கூடிய ஒரு பணியையும் இங்கிருக்கக்கூடிய அமைப்புகள் செய்து கொண்டிருக்கின்றன.
எனவே, “அமெரிக்காவிற்குப் போன ஜாதி” என்று நாம் கூறினால் அதற்குள் நிறைய செய்திகள் இருக்கின்றன. 10 ஆண்டுகளில் நான் என்னுடைய அனுபவங்களை மட்டும்தான் பகிர்ந்து கொண்டேன். இங்கே தலைமுறை தலைமுறையாக இருப்பவர்களைக் கேட்டால், இன்னும் நிறைய செய்திகளைக் கூறுவார்கள். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கக் கூடிய பிரச்சினைகளெல்லாம் இங்கு அதிகம். நாம் அதை எப்படி அணுகவேண்டும் என்பதற்கு ஒரே ஒரு செய்திதான். நான் முன்னரே சொன்னது போல அரசியலில் நம் மக்கள் கோலோச்ச வேண்டும். நீங்கள், எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்த நாட்டின் அரசியலில் நீங்கள் அந்த மக்களோடு இங்கிருக்கக்கூடிய கட்சிகளோடு இணைந்து பணியாற்றாமல் நாம் அதைச் செயல்படுத்தவே முடியாது. இதை நாம் கொண்டு வந்திருக்கிறோம் என்றால், ஏற்கனவே இரண்டு தலைமுறையாக இங்கு இருக்கக்கூடியவர்களால்தான் இதைச் செய்ய முடிகிறது. “Equality Labs” என்பதை முன்னெடுத்து நடத்தும் தேன்மொழி சவுந்திரராஜன் இரண்டாவது தலைமுறையாக இங்கு இருப்பவர். அதனால், இங்கு இருக்கும் பிரச்சினை அரசியல் ரீதியாக ஓரளவுக்கு விசயம் தெரிகிறது என்பதால் அவர்களால் முன்னெடுக்க முடிகிறது.
அரசியல்ரீதியான படிப்பு
நம்முடைய குழந்தைகளுக்குச் சொல்வது அதுதான். நீங்கள் பொறியியல் படிக்கலாம், வேறு நாடுகளில் இன்றும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அரசியல் அறிவியல் அல்லது இதழியல் போன்ற அரசியல்ரீதியான படிப்புகளைப் படிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இங்கே குழந்தைகளுக்கு நாங்கள் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறோம்.
நாங்கள் எல்லோரும் பொறியியல் படித்து வந்துவிட்டோம். அடுத்த தலைமுறை மற்ற படிப்புகளை நோக்கிப் போங்கள். அல்லது தொழில் முனைவதைக் கண்டிப்பாக நாம் எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. தொழில் முனைவு மிக மிக முக்கியம், அது ஜாதிய லாபிக்குள்ளேயே எப்போதும் இருக்கிறது. முற்போக்குச் சிந்தனை உள்ளவர்கள் நிறைய தொழில் முனைவோர்களாக வரும்போதுதான், நீங்கள் நினைக்கக் கூடிய மாற்றங்கள் நம் நாட்டிலும் நடக்கும், வெளியிலும் நடக்கும். நம் நாட்டிலும் அதுதான் பிரச்சினை. குஜராத்காரரான அம்பானி, அதானி எல்லாம் என்ன செய்கிறார்கள்? அரசியலும், பிஸினசும் பின்னிப்பிணைந்துதான் இருக்கும். அதை உடைக்க முடியாது. பெரியார். “ஒடுக்கப்பட்ட மக்களாகிய நீங்கள் நாட்டை விட்டு வெளியில் போய் உங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு வாழுங்கள்” என்று ஓரிடத்தில் சொல்லி இருப்பார். இதை நான் 20, 25 ஆண்டுகளுக்கு முன்பாக படிக்கும்போது, “அதுதான் நாட்டை விட்டு வெளியில் போய்விட்டோமே, எதற்காக அடையாளத்தை மறைத்து வாழ வேண்டும்?” என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஆனால், இன்று அமெரிக்காவில் அதை உணர்கிறேன். அடையாளத்தை மறைத்துக்கொண்டு வாழ வேண்டிய நிலையைத்தான் இன்றும் அங்கு வைத்திருக்கிறார்கள். ஏனென்றால், இங்கிருக்கக் கூடிய இந்தியச் சமூகம் அப்படித்தான் இருக்கிறது. பெரியார் எப்படிப்பட்டத் தொலைநோக்குச் சிந்தனையோடு யோசித்திருக்கிறார் என்று நினைக்கும்போதே வியப்பாக இருக்கிறது.
நான் அந்தப் பல்கலைக்கழக மாணவர் பற்றி சொன்னேன் அல்லவா? அவர் சொன்ன ஒரு செய்தி. “நான் ஒரு வைதீகக் குடும்பத்தில் இருந்து வருகிறேன். எனக்குப் பெரியாரைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது” என்றார். தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், “நான் பெரியார் சிலையைக் கடந்து போவேன். தெருப்பக்கமாக அதில் கடவுள் இல்லை. கடவுள் இல்லை என்று எழுதி வைத்திருப்பார்கள். எனக்கு ஒரு curiosity. ஏன் அந்த மனிதன் அப்படி எழுதி வைத்திருக்கிறார் என்றுதான் தேடிப்போய் பெரியாரைப் பற்றி படிக்க ஆரம்பித்தேன்.” என்று சொன்னார். பெரியார் கடவுள் மறுப்பாளர் என்று கொண்டு போகாமல் வெறும் ஜாதியை மட்டும் ஒழித்தார் என்று கொண்டு போனால் எல்லா மக்களும் சேர்ந்து இணைந்து வருவார்கள் என்று தமிழ் நாட்டில் கூட நிறையப்பேர் சொல்கிறார்கள். அது சரியான கருத்து இல்லை என்பது என்னுடைய வாதம் அவர் கடவுள் மறுப்பை முன் வைத்ததற்கு நிறையக் கரணங்கள் இருக்கின்றன தன்னுடைய சிலைக்குக் கீழ் அதை எழுதி வைக்க வேண்டும் என்று பெரியார் கூறியதற்கும் ஒரு காரணம் இருந்தது. வள்ளலார் போல் புத்தர் போல என்னை மாற்றி விடுவார்கள் என்றுதான் அப்படி எழுதி வைக்கச் சொல்கிறார் என்பது என்னுடைய கருத்து. இன்னொரு கருந்து என்னவென்றால், இளைஞர்கள், ஒரு இரண்டு பேர் அங்கு நடந்து போகிறார்கள் என்றால், இரண்டு பேருக்காவது “இவர் ஏன் கடவுள் இல்லை என்று சொல்கிறார்? அப்படியானால் அந்த மனிதரைப் படிக்க வேண்டும்” என்று இயற்கை அறிவு வேலை செய்யுமல்லவா?
பெரியார் ஒரு சுயசிந்தனையாளர்
பெரியார் ஒரு சுயசிந்தனையாளர். ஒரு வேளை அவருக்குத் தோன்றியிருக்கக் கூடும். பத்து பேரில் இரண்டு பேராவது என்னைப் படிப்பான் என்று. “கடவுள் இல்லை என்பதைப் பார்த்து விட்டு பெரியாரைப் படிக்கத் தொடங்கினேன்” என்று அந்தப் பையன் சொல்லும்போது அதை நான் உணர்ந்தேன். அதனால்தான் நான் பெரியாரைப் படித்தேன், நானாகத்தான் படித்துத் தெரிந்து கொண்டேன். இந்தப் படிப்பு வட்டம் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது’ என்று சொன்ன செய்தியை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். எனவே அமெரிக்காவிற்குப் போன ஜாதி” அதற்குப் பின்னால் இருக்கிற சட்ட அம்சங்களையெல்லாம் தோழர் அஜிதா அவர்கள் பதிவு செய்வார்கள் என்று கூறி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன் நன்றி வணக்கம்!
நன்றி: “புதிய குரல்”