ஆசியாவின் புகழ் வள்ளுவர் கோட்டம் புதியதோர் பொலிவு:
‘திராவிட மாடல் ஆட்சியின் பெருமை என வையகம் மகிழ்கிறது; வரலாறு வாழ்த்துகிறது’
ஆசியாவின் புகழ் வள்ளுவர் கோட்டம் புதியதோர் பொலிவு, ‘திராவிட மாடல் ஆட்சியின் பெருமைகளில் ஒன்று என வையகம் மகிழ்கிறது, வரலாறு வாழ்த்துகிறது! ஒப்பற்ற நாயகராம் நமது முதலமைச்சருக்கு பாராட்டு; நன்றி! என தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
திருக்குறள் – மனிதகுலத்தின் மகத்தான வாழ்வியல் வழிகாட்டியான, அறிவின் கலங்கரை வெளிச்சம்.
திருக்குறள் – நுழைந்து ஆட்டம் போட்ட பண்பாட்டின் மகத்தான தடுப்பணையான ஒரு ஒழுக்கச் சிதைவின் மறுப்பு நூல்.
சமூக விஞ்ஞானி திருவள்ளுவர்
திருவள்ளுவர் – வியக்கத்தக்க சமூக விஞ்ஞானி போன்ற வித்தக இலக்கிய கர்த்தா.
அப்படிப்பட்ட பெருமைக்குரிய உலக அறநூல் படைத்தவரை வெறும் ‘தெய்வீகப் புலவர்’ என்று கூறி புலவர்கள் வீட்டுப் புத்தக அலமாரிக்குள்ளே தள்ளிய காலத்தை மாற்றி, மக்களுக்கான வாழ்க்கை நெறிக்கு சரியான வழிமுறை பகுத்தறிவுதான் என்று காட்டும், ஒருபொது அறநூல் – கற்பனைகளைக் களைந்து, உண்மைகளை, யதார்த்தத்தை எடுத்துரைத்து, குறள்நெறி ஒவ்வொரு குடும்பமும் பின்பற்றும் ஒப்பற்ற உயர் நெறி என்பதை நிறுவி – சுயமரியாதை இலக்கியக் கருவிகளில் ஒன்றென அதைக் கருதி, எளிய மக்களிடையேயும் பரப்பினார் தந்தை பெரியார்.
தந்தை பெரியார் அவர்களும், இயக்க முக்கிய தோழர்களும், இணைந்து பரப்புரையாளர்களையும், கற்றுத் துறை போகிய தமிழறிஞர் பெரு மக்களையும் அழைத்து 1948இல், சென்னை பிராட்வேயில் இரண்டு நாள் நடத்திய திருக்குறள் மாநாடு நாடெல்லாம் குறள் மணம், குறள் நெறி பரவிடும் வாய்ப்பினை ஏற்படுத்தியது.
1967இல் திராவிடர் ஆட்சி அறிஞர் அண்ணா தலைமையில் மலர்ந்த நிலையில், அதில் பொதுப் பணி, போக்குவரத்துத் துறை அமைச்சரான கலைஞர், அரசு பேருந்துகளில் திருக்குறளை எழுதி வைத்துப் பரப்பிய பணியைத் துவக்கினார்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் வள்ளுவர் படம் இடம் பெற்று – சட்டமன்றம் பொலிவுற்றது. வள்ளுவருக்குப் பூணூல் இல்லாது – பிரபல ஓவியர் வேணுகோபால் (சர்மா) அவர்களது புதுமை ஓவியம் அது.
நெருக்கடி நிலை காலத்தில்….
வள்ளுவர் கோட்டத்திற்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் லேக் மைதானம் என்ற ஏரிக்கரை மைதானத்தில் 15 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. பிரபல சிற்பக் கலைஞர் கணபதிஸ்தபதி அவர்களது தலைமையில், நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களது கருத்தியல் மேற் பார்வையோடு 1976 ஜனவரி 23இல் வள்ளுவர் கோட்ட நிர்மாணப் பணிகள் முடிவடைந்தன.
திறப்பு விழாவுக்கு பெரும் அளவில் ஏற்பாடான நிலையில், அன்றைய ஒன்றிய ஆட்சியில் நெருக்கடி நிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள மற்ற மாநிலத்தவரைப் போல் நெருக்கடி நிலையை ஆதரிக்க மறுத்து – ஜனநாயகத்தினைக் காப்பாற்றும் ஜனநாயக ஆட்சியாக கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி உறுதியோடு இருந்ததால் – ஆட்சி கலைக்கப்பட்டு – காஞ்சி சங்கராச்சாரியாரை அழைத்து ஆளுநர் ஆட்சியில் வள்ளுவர் கோட்டத்தைத் திறந்து வைத்தனர்.
கலைஞரின் சூளுரை
‘‘தமிழ்நாடு ஆட்சியை மீண்டும் பெற்றால்தான் வள்ளுவர் கோட்டத்தில் காலடி எடுத்து வைப்போம்’’ என்று கலைஞர் வஞ்சினம் கூறி, அதை செய்து காண்பித்தார்.
கோட்டம் புத்துரு கொண்டது!
தமிழ்நாடும் தமிழ் இன உணர்வும்
புத்தாக்கப் பொலிவினைப் பெற்று
தகத்தகாய முறையில் இருந்தது!!
இடையில் வந்த ஆட்சிகள் அரசியல் காழ்ப்புணர்வால் அதனைத் தக்க வகையில் பராமரிக்காமல் பாழ்படுத்தினர். அந்நிலைக்குப் பரிகாரம் தேடிட அதற்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புதியதோர் பொலிவு – மேலும் ஒளியுடன் மிளிரும் வண்ணம் உருவானது. அதனைக் ‘கண்டு களித்து களிபேருவகைக் கொள்ளும் வகையில், திராவிட மாடல் ஆட்சியின் பெருமைகளில் ஒன்று என்று வையகம் மகிழத்தக்க வண்ணம் – வரலாறு வாழ்த்தும் வகையில் 21.6.2025 அன்று மாற்றுத் திறனாளிகளின் நன்றிப் பெருக்கு, பாராட்டு அலைகளுடன் தமிழ்நாடு மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
தனி வரலாறு – ஆசியாவின்புகழ் வள்ளுவர் கோட்டம் சென்னையில் மீள் உருவாகியது.
திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை
தென் கோடி குமரி முனையில் 133 அடி உயர வள்ளுவர் சிலையை கலைஞர் நிறுவியதொரு வரலாறு. அதில் மேலும் சாதனைப் படலங்கள் என கண்ணாடி இழைப் பாலத்தைப் புதுமையோடு ஆக்கி புதிய வரலாறு இணைக்கப்பட்டது.
‘‘வள்ளுவருக்குக் கோட்டம் கண்டோம்.
மக்களும் குதூலகலம் கொண்டார்கள்’’ என்ற ஒளிக்கீற்று எங்கெங்கும்!
‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற நாயகராம், நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி! மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
24.6.2025