சூத்திரர்கள் – எதிர்ப்புரட்சி (2)
இதுமுதன்மையாக, சயனாச்சாரியரின் அறியாமை தோய்ந்த பொருள் விளக்கங்களின் காரணத்தால், ஆரியர், அசுரர், தேவர் ஆகிய சமூகப் பிரிவினர் பற்றியும் அவர்களிடையே நிலவிய இடையுறவு மற்றும் குருதி உறவு பற்றியும் மிகவும் விந்தையான சில நம்பிக்கைகள் அறிஞர்களிடையேயும் நிலவக் காண்கிறோம். அவையாவன: அசுரர்கள் மனித இனத்தவரே அல்லர். அவர்கள் இரவு வேளைகளில் ஆரியர்களுக்கு ஊறு விளைவிக்கும் நோக்கத்தோடு பேய்களாகவும் பூதங்களாகவும் தோற்றமளித்தவர்கள். சுரர் அல்லது தேவர் என்போர் கவிஞர்களால் இறைமைப்படுத்தப்பட்ட இயற்கையாற்றலின் வடிவங்கள். ஆரியர்கள் கூரிய நாசியும், வெள்ளை நிறமும் கொண்ட இனம்; மற்ற நிறத்தவர்பால் எதிர்ச்சார்பான தப்பெண்ணம் கொண்டவர்கள். தசியூ என்பது சூத்திரருடைய மறு பெயரே அன்றி வேறன்று. சூத்திரர்கள் இந்தியாவின் தொல்குடியினர். கருத்த உடலும் தட்டையான நாசியும் கொண்டவர். இந்தியாவின் மீது படையெடுத்த ஆரியர் இம்மக்களை வென்று அடிமையாக்கினர். அடிமைத்தனத்திற்கு அடையாளமாக அடிமை என்று பொருள்படும் தசியூ (நிருக்தாவின் கருத்துப்படி தாஸ் என்னும் சொல் அழித்தல் என்றும் பொருளுடையது) என்னும் பெயரை இவர்களுக்கு இட்டனர்.
இந்நம்பிக்கைகள் அனைத்தும் அடிப்படை அற்றவை. அசுரர்களும் சுரர்களும், ஆரியர்களைப் போன்று சமூகப் பிரிவுகளே. அவர்கள் காசிபன் என்ற பொது மூதாதையரின் வழி வந்தவர்கள். இது பற்றி புனைந்துரையாவது: தட்ச பிரஜாபதிக்கு அறுபது பெண்மக்கள் இருந்தனர். அவர்களில் 13 பேர் காசிபனுக்கு மணம் செய்விக்கப்பட்டனர். திதியும், அதிதியும் காசிபனுக்குரிய அப்பதிமூன்று மனைவியரில் இருவர். திதிக்குப் பிறந்தோர் அசுரர் என்றும், அதிதிக்குப் பிறந்தோர் சுரர் அல்லது தேவர் என்றும் அழைக்கப்பட்டனர். அசுரரும், தேவரும் உலகத்தின் மீது மேலாண்மைக்காக ஒரு நெடிய கொடூரமான போரில் இறங்கினர். இது ஐயத்திற்கு இடமின்றி தொன்மவியலாகும். தொன்மமானது வரலாற்றின் உயர்வு நவிற்சியேயன்றி வேறன்று.
ரிக் வேதத்தில் (10.49) இந்திரன் கூறுகிறான். “நான் கவி என்று அறியப்படும் மனிதனின் நலனுக்காக எனது வச்சிராயுதத்தால் கொலை செய்தேன். காத்தல் பணி மேற்கொண்டு கூபாவைக் காத்திருக்கிறேன். சுஷ்ணாவைக் கொல்ல வச்சிராயுதம் ஏந்தினேன். தசியூக்கள் ஆரியன் எனும் பட்டத்தை இழக்கச் செய்தேன்.”
ஆரியரென்போர் ஓர் இனமல்ல, ஒரு மக்கள் தொகுதியே. ஆரியர் பண்பாடு என்று அழைக்கப்பட்ட ஒருவகைப் பண்பாட்டினைக் காப்பதில் உள்ள விழைவே அவர்களை ஒன்று சேர்த்து வைத்திருந்தது. இப்பண்பாட்டினை ஏற்றுக்கொண்ட எவரும் ஆரியராகக் கொள்ளப்பட்டனர். இது ஓர் இனம் இல்லையாகையால் ஆரியன் என்றழைப்பதற்கான உடல்திறமோ, உறுப்பமைதியோ ஒருவன்பால் காண இயலாது.இவர் ஆரியர் அல்லாதவர் என்று பாகுபடுத்துவதற்கான கருமை நிறமும் தட்டை நாசியும் கொண்ட தனித்த எவரும் இல்லை. (இந்தப் பொருண்மை முழுவதும் தொடர்பாக, புருஷார்த் தொகுதி 13 இல் திரு சத்வாலேக்கரின் சிறந்த உரையாடலைப் பார்க்கவும்) தசியூக்கள் தொடர்பாகப் பயன்படுத்தப்பட்ட வருணா, அனாஸ் ஆகிய இரு சொற்களுக்குத் தரப்பட்ட தவறான பொருள்களே. ஆரியர் தசியூக்களுக்கு இடையே பாகுபாடு நிலவக் காரணமாகிய நிறம் பற்றிய தப்பெண்ணத்திற்கு அடித்தளமாக அமைந்தது, இதுவே. வருணா என்ற சொல் திறத்தையும் அனாஸ் நாசியில்லாமையையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. இவை தவறானவை. வருணம் என்பது குலத்தை அல்லது வகுப்பைக் குறிப்பது. அன் – ஆஸ் எனப் பிரித்துப் பார்க்கையில் அனாஸ் என்பது பண்படாத பேச்சு எனப் பொருள்படும். ஆரியரின் உடல், நிறம் பற்றிய தப்பெண்ணமே சமூகப் படிநிலையை வரையறுத்தது எனும் கூற்று பொருத்தக்கேடானது. உடல் நிறம் பற்றிய தப்பெண்ணம் சிறிதும் இல்லாத மக்கள் இருந்திருப்பார்களேயானால் அவர்கள் ஆரியர்களே. காரணம், அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திய சிறப்பான நிறம் என்று ஒன்று இல்லை.
தசியூக்கள் ஆரியரல்லாத இனத்தவர் என்பது தவறு. அவர்கள் ஆரியருக்கு முற்பட்ட இந்தியாவின் தொன் முதுமக்கள் அல்லர். ஆரிய பண்பாட்டோடு ஒட்டிய ஒரு நம்பிக்கையையோ மதக் கோட்பாட்டு முறையையோ எதிர்த்தமைக்காக ஆரியர் எனும் பட்டத்தை இழந்துவிட்ட இவர்கள், முன்னர் ஆரிய சமூகத்தின் உறுப்புகளே. தசியூக்கள் ஆரியரல்லாத ஓர் இனத்தவர் என்ற நம்பிக்கை எவ்வாறு தோன்றிருக்க முடியும் என்பதை அறிவது இடர்ப்பாடானது. ரிக் வேதத்தில் (10.49) இந்திரன் கூறுகிறான். “நான் கவி என்று அறியப்படும் மனிதனின் நலனுக்காக எனது வச்சிராயுதத்தால் கொலை செய்தேன். காத்தல் பணி மேற்கொண்டு கூபாவைக் காத்திருக்கிறேன். சுஷ்ணாவைக் கொல்ல வச்சிராயுதம் ஏந்தினேன். தசியூக்கள் ஆரியன் எனும் பட்டத்தை இழக்கச் செய்தேன்.”
தசியூக்கள் ஆரியர் என்பதற்கு இதனைவிடத் தெளிவான சான்று ஒன்று இருக்க முடியாது. ஆயினும் இதற்கு மேலும் சிறப்பான சான்றும் நமக்குக் கிடைத்திருக்கிறது. இந்திரன் புரிந்த பல்வேறு அடாதசெயல்களுக்காக அவர்மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டே அது. இக்குற்றங்களின் பட்டியலில் ஒரு குற்றச்சாட்டு அவன் விருத்ரனைக் கொன்றான் என்பதாகும். விருத்ரன் தசியூக்களின் தலைவன். தசியூக்கள் ஆரியரல்லாதவராய் இருந்திருந்தால் இத்தகைய ஒரு குற்றச்சாட்டு இந்திரன்மீது சுமத்தப்பட்டிருக்க முடியாது.
சூத்திரர்கள், ஆரியப் படையெடுப்பாளர்களால் தோற்கடிக்கப்பட்டனர் என்பது தவறான நம்பிக்கை; முதலாவதாக, ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்து இந்நாட்டுக் குடிகளைத் தாக்கினர் என்பதற்கு சான்று இல்லை. ஆரியர்களுக்கு இந்தியா தாய்நாடு என்பதற்கே நிறைய சான்றுகள் இருக்கின்றன. இரண்டாவதாக, ஆரியர்களுக்கும் தசியூக்களுக்கும் போர் நடந்ததாக எங்கும் சான்று காணப்படவில்லை. அத்தகையதே சூத்திரர்களுக்கும் தசியூக்களுக்கும் தொடர்பில்லை என்பதும். மூன்றாவதாக, ஆரியர்கள் இராணுவ வலிமைமிக்க ஆற்றல் வாய்ந்த மக்கள் என நம்புவது கடினமானது. தேவர்களோடு தொடர்புபடுத்தும் இந்தியாவின் ஆரியர்களது வரலாற்றை அறிந்த எவரும் நிலப்பிரபுத்துவ காலங்களில் பிரபுக்களுக்கும் அவர்தம் பண்ணைத் தொழிலாளிக்கும் இடையே நிலவிய உறவை நினைவுகூர்வர். தேவர்கள்தான் இப்பிரபுக்கள்; ஆரியர்கள்தான் அத்தொழிலாளிகள். ஆரியர்கள் நடத்திய எண்ணிறந்த வேள்விகள் அவர்கள் தேவர்களுக்குச் செலுத்திய பிரபுத்துவக் கடனாகக் காட்சியளிக்கின்றன. தேவர்கள்பால் ஆரியர் காட்டிய இவ்வடிமைப் போக்குக்குக் காரணம் தேவர்களின் உதவியும் பாதுகாப்புமின்றி அவர்களால் அசுரர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள இயலவில்லை என்பதே. இத்தகைய உரமற்ற ஒரு மக்கள் சூத்திரர்களை வென்றிருக்க இயலும் எனக் கொள்வது ஏற்புடையதாக இல்லை.
இறுதியாகச் சூத்திரர்களை வெற்றிகொள்ளவேண்டிய தேவையே இருக்கவில்லை. ஏனெனில் ஆரியர் என்பதன் ஒரே பொருளான ஆரியப் பண்பாட்டினைப் பற்றி நின்றவர்கள் என்பதை நோக்குமிடத்து இம்மக்களும் ஆரியர்களே. சூத்திரர்களைப் பற்றிய இருசெய்திகள் நமக்கு தெளிவாகத் தெரிகின்றன. அவர்கள் கருத்த உடலும் தடித்த நாசியும் கொண்டவர் என்றோ, அவர்கள் ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்டனர் என்றோ, அடிமைப்படுத்தப்பட்டனர் என்றோ எவரும் வாதிட்டதில்லை. தசியூக்களையும், சூத்திரர்களையும் ஒரே இனத்தவராகக் கருதுவது பிழையானது. மனித இனத்தவர் என்ற முறையில் அவர்கள் ஒருவராக இருக்கலாம். ஆனால் பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் பார்க்கும்போது அவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள். ஆரியர்களிடமிருந்து விலகிச்சென்றவர்கள் என்ற முறையிலும், ஆரியப் பண்பாட்டின் எதிர்ப்பாளர்கள் என்ற முறையிலும், தசியூக்களை ஆரியரல்லாதவர் என நாம் கொள்ளலாம். மாறாக சூத்திரர்கள் ஆரியர், அதாவது ஆரிய வாழ்க்கை நெறிகளில் நம்பிக்கையுடையவர்கள். அவர்கள் ஆரியராக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். பின்னாளில் கௌடில்யரின் அர்த்தசாத்திரத்திலும் சூத்திரர் ஆரியர் என்றே அழைக்கப்பட்டனர்.
யஜூர் (வெள்ளை யஜூர் வேதம், பக். 200) வேதத்திலுள்ள ஒரு வேண்டுதல் சொற்றொடர் சூத்திரர்கள் ஆரிய சமூகத்தின் ஒன்றிய, இயல்பான, உயர்வாக எண்ணப்பட்ட ஓர் அங்கம் என்பதை மெய்ப்பிக்கும் முகத்தான் அமைந்துள்ளது. ஒரு வேள்வியாளரால், பேசப்படும் அச்சொற்றொடர் இதோ:
“…………….. ஓ கடவுளரே!
நமது புனிதம் மிக்க புரோகிதர்களுக்கு மேன்மையை நல்குங்கள். நம் மன்னர்களை மிகு புகழுடன் வைத்திருங்கள்; வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும் சிறப்பினை அளியுங்கள்; என்னை மேன்மைக்கு இட்டுச்செல்லுங்கள்!”
இவ்வேண்டுதல் குறிப்பிடத்தக்க ஒன்று. ஏனெனில் இது சூத்திரரை ஓர் ஆரிய சமூகத்தவராக, அவ்வினத்தின் மரியாதைக்குரிய ஒருவராகக் காட்டுகிறது.
சூத்திரர்கள் மற்ற மூன்று குலத்தோரான பார்ப்பனர், சத்திரியர், வைசியர் ஆகியோருடன் அரசனது முடிசூட்டு விழாவிற்கு அழைக்கப்பட்டனர் என்பதற்கு மகாபாரதம் காட்டும் பாண்டவரது மூத்த அண்ணன் யுதிஷ்ட்ரரின் முடிசூட்டு விழாவே சான்று. அவ்வரவேற்பில் சூத்திரர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியைப் பற்றி விளக்கும் நில்சுந்தர் என்னும் பண்டைய ஆசிரியர் குறிப்பாகக் கூறுவதாவது: பார்ப்பன, சத்திரிய, வைசிய, சூத்திர தலைமை அமைச்சர்கள் புது மன்னனுக்கு முடிசூட்டினர். பின்னர் இக்குலங்கள் ஒவ்வொன்றின் தலைவர்களும் இவருக்கும் கீழான குலத்தோரும் புனிதநீர் கொண்டு அவனுக்கு முடிசூட்டினர். அதைத் தொடர்ந்து இரு பிறப்பாளர் போற்றுதலை வழங்கினர்.
வேத காலத்தினை அடுத்த, மனுவிற்கு முந்தைய காலகட்டத்தில் இரத்தனிகள் என்று அழைக்கப்பட்ட, மக்களது பிரதிநிதிகள் இருந்தனர். இவர்கள் அரசனது முடியேற்புச் சடங்குகளில் சிறப்பான பங்கு ஏற்றனர். இறையாண்மையின் சின்னமாக இரத்தினத்தை (அணிகலன்) அவர்கள் வைத்திருந்த காரணத்தால் இப்பெயர் பெற்றனர். இவ்வணிகலனை அவர்கள் அளிக்கும்போதுதான் அரசன் இறையாண்மையைப் பெற்றவனாகிறான். இறையாண்மை அளிக்கப்பட்டதும், அரசன் ஒவ்வொரு இரத்தினியன் இல்லத்திற்கும் சென்று காணிக்கை வழங்குவான். இந்த இரத்தினிகளில் ஒருவர் சூத்திரர் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
ஜனபதா, பௌரா எனப்பட்ட இரு பண்டைய அரசியல் குழுமங்களில் சூத்திரர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். இப்பதவி பார்ப்பனர்களிடையேயும் இவர்களுக்கு ஒரு சிறப்பான மதிப்பைப் பெற்றுத்தந்தது.
பண்டைய ஆரிய சமூகத்தில் சூத்திரர்கள் ஓர் உயர்ந்த அரசியல் படிநிலை பெற்றிருந்தனர் என்பது மறுக்க இயலாத உண்மை. அரசியல் அமைச்சர்களாகவும் அவர்கள் ஆக முடிந்தது. மகாபாரதம் இதற்குச் சான்றாக அமைகிறது. பல்வேறு சமூகப் பிரிவினர் அமைச்சர்களாக இருந்ததை தன் நினைவிலிருந்து புகலும் இவ்விதிகாசத்தின் ஆசிரியர் 37 அமைச்சர்களின் பட்டியலைத் தருகிறார் (ஜெய்ஸ்வால், இந்து அரசியல் அமைப்பு, பகுதி 2. பக். 148). அவர்களில் நால்வர் பார்ப்பனர். எட்டுபேர் சத்திரியர்கள், இருபத்தியொருவர் வைசியர்கள்,மூவர் சூத்திரர் ஒருவர் சுதர்.
தொடரும்
– அண்ணல் அம்பேத்கர்
‘இந்து மதம்: வரலாறு – ஆய்வு’ நூலிலிருந்து