1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வரலாற்றுப் பாதை படம் பிடித்து காட்டப்படுகிறது.
- சாமி. சிதம்பரனார் (தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை முதலில் எழுதியவர்)
சுயமரியாதை இயக்கத்தின் முன்னணி தளபதிகளில் ஒருவரான சாமி. சிதம்பரனார் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை முதலில் எழுதிய பெருமைக்குரியவர்.
தமிழறிஞர், ஆய்வாளர், கவிஞர், எழுத்தாளர், இதழாளர், திராவிட இயக்க செயற்பாட்டாளர் என பன்முகத் தன்மை வாய்ந்தவர்.
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கடக்கம் எனும் சிற்றூரில் டிசம்பர் 1, 1900இல் பிறந்தார். இவரது பெற்றோர் சாமிநாத மலையமான் கமலாம்பாள் அம்மையார். பள்ளிக் கல்வியை கடக்கத்திலும், மயிலாடுதுறையிலும் நிறைவு செய்தார். 1923ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பண்டிதர் பட்டம் பெற்றார். கரந்தை தமிழ்ச் சங்கத்தில் முதலில் தமிழாசிரியர் ஆனார். பின்னர் தஞ்சாவூர் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராக பணியாற்றினார்.
பகுத்தறிவு முறையில் பாடம் கற்பித்தார்
அப்பொழுதெல்லாம் தமிழாசிரியர்கள் பாரம்பரிய முறையில் வேட்டி, சட்டை அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்வர். எதிலும் புதுமை விரும்பியான சாமி. சிதம்பரனார் இந்த வழக்கத்தை உடைத்தெறிந்தார். வெள்ளைக்காரனைப் போல கோட், முழுக்கால் சட்டை அணிந்து கம்பீரமாக பள்ளிக்குச் சென்றார்.
பள்ளியில் இவரிடம் பயின்ற மாணவர்களில் ஒருவரே தமிழறிஞர் சி. இலக்குவனார் ஆவார்.
பெரியார் கொள்கைகளால் கவரப்பட்டு, அவரது சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். அக்காலத்திலேயே பகுத்தறிவு முறையில் பாடம் கற்பித்தார்.
தமிழாசிரியராக பணியில் இருந்து கொண்டே அய்யா அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டார். குடிஅரசு ஏட்டில் கட்டுரைகள் எழுதி வந்த அவர் அவ்வப்போது அதன் ஆசிரியர் பொறுப்பையும் கவனித்து வந்தார்.
அய்யா அவர்கள் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட சமயத்தில் குடிஅரசு பத்திரிகை ஆசிரியர் பொறுப்பை சாமி. சிதம்பரனாரிடம் ஒப்படைப்பார். அந்த நேரங்களில் அய்யாவின் அழைப்பை ஏற்று ஈரோடு குடிஅரசு அலுவலகத்திற்கு சென்று ஆசிரியர் பொறுப்பைக் கவனிப்பார். அய்யா விருப்பப்படி பணியை முடித்து விட்டு மீண்டும் பள்ளிக்கு சென்று விடுவார்.
இந்த நிகழ்வுக்கு 15.11.1931 குடிஅரசு இதழில் அன்னை நாகம்மையார் வெளியிட்டு பிரசுரமான ஒரு அறிக்கை சான்றாவணமாக உள்ளது.
‘குடிஅரசு’ பத்திரிகை ஆசிரியர் பொறுப்பை திரு. சாமி சிதம்பரனார் அவர்கள் கவனித்து வருகிறார். குறைந்தது 2,3 மாதக் காலத்திற்காவது சந்தாதாரர்களும், வாசகர்களும் பத்திரிகையை ஆதரித்து, திரு. சாமி சிதம்பரானார் அவர்களை உற்சாகப்படுத்தி வைக்க வேண்டிக் கொள்கிறேன்’’
பெரியார் மலேசிய பயணம்
பகுத்தறிவுப் பகலவன் தங்கள் நாட்டிற்கு வர வேண்டும் என விரும்பிய மலேசியா, சிங்கப்பூர் தோழர்கள் அய்யாவை அங்கு வரும்படி அன்பு வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்டு அய்யா அவர்கள் 1929ஆம் ஆண்டு முதல் முறையாக மலேசியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பெரியாரின் வருகை மலேசிய தமிழர்கள் மத்தியில் பரவசத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. அவரது பரந்துபட்ட சிந்தனைகள் கடல் கடந்து வாழும் தமிழர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அய்யாவின் அணுக்கச் செயலாளராய் உடன் சென்று பணியாற்றினார் சாமி. சிதம்பரனார்.
வழிகாட்டி
சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை அமல்படுத்தும் வழிகாட்டிகளில் ஒருவராய்த் திகழ்ந்தார். 1930ஆம் ஆண்டு சிவகாமி என்ற கைம்பெண்ணை சுயமரியாதை திருமணம் முறையில் வாழ்க்கை துணைவியாக்கிக் கொண்டு பெரும் புரட்சி செய்தார். இவர்கள் திருமணம் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் அன்னை நாகம்மையார் தலைமையில் நடைபெற்றது.
பல்வேறு புனைப் பெயர்களுடன் ஏராளமான கட்டுரைகளை எழுதிய சாமி. சிதம்பரனார் பெரியாரின் அனுமதியுடன் அவரது வாழ்க்கை வரலாற்றை ‘தமிழர் தலைவர்’ என்ற யெபரில் எழுதினார். ஒரே மாதத்தில் எழுதி முடிக்கப்பட்ட நூல் பெரியார் வாழ்க்கையைப்பற்றிய சிறந்த ஆவணமாக அமைந்தது.வாழ்க்கை வரலாறு நூல் எழுதுவோருக்கு இந்நூல் சிறந்துஎடுத்துக்காட்டாக அமைந்தது.
இந்நூல் முன்னுரையில் சாமி. சிதம்பரனார் எழுதி இருந்த அவரது கடமையுணர்வையும் தன்னடக்கத்தையும் பிரதிபலிப்பதாக அமைந்து இருந்தது.
‘அவர் (பெரியார்) இந்தி எதிர்ப்பின் பொருட்டு சிறைப்பட்டிருந்த காலத்திலாவது தமது வாழ்க்கை வரலாற்றை எழுதுவாரென்று எதிர்பார்த்தனர் பலர். அப்பொழுதும் எழுதவில்லை. இதன் பிறகே தோழர்களின் தூண்டுதலின் மேல் யான் இந்த முயற்சியில் ஈடுபட்டேன்’’
சுயமரியாதை இயக்கம் திராவிட இயக்கமாக மாற்றம் கண்ட ேபாது சாமி. சிதம்பரனார் அதை எதிர்த்தார். 1940களில் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் இயக்கத்தில் இருந்து வெளியேறினார்.
பின்னர் பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்து சமூகப் பணியாற்றினார்.
அறிவுக்கொடி
தொழிலாளர், விவசாயிகள் போராட்டங்களில் அவர்களுக்கு பக்கபலமாக இருந்தார். ‘அறிவுக் கொடி’ எனனும் இதழை தாமே தனியாக நடத்தி பகுத்தறிவு கருத்துகளைப் பற்றி நிறைய எழுதினார்.
சாமி. சிதம்பரனார் இலக்கியம், தத்துவம், சமுதாயம், அரசியல் சார்ந்த 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார். அதை சிலப்பதிகாரத் தமிழ்நாடு, நளாயிணி கதை மாதர் சுதந்திரம் அல்லது பெண் மக்கள் பெருமை, பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் போன்ற நூல்கள் முக்கியமானவை.
குறுந்தொகை பெருஞ்செல்வம் என்ற தலைப்பில் இலக்கிய நூலை வெளியிட்டார். இன்பசாகரன் போன்ற நாடக நூல்களை எழுதினார்.
சிறிது காலம் உடல் நலமின்றி இருந்த சாமி. சிதம்பரனார் 17.1.1961இல் அன்று மறைந்தார்.
சாமி. சிதம்பரனாரின் படைப்புகள் 2000ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நாட்டுவுடைமையாக்கப் பட்டன.