நுழைவுத் தேர்வு ஆணை நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்ற நாள் இன்று (23-06-1984)
நுழைய விடாமல் தடுப்பதே நுழைவுத் தேர்வு! – 1984 ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு வந்த போது திராவிடர் கழகத்தின் சார்பில் ஆணை நகல் எரிப்புப் போராட்டம் 41 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நாள் இந்நாள் (23-06-1984).
1984 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது நுழைவுத் தேர்வு என்ற ஒடுக்கப்பட்ட மாணவர் நலத்திற்கு எதிரான ஒரு முறையை நடைமுறைப்படுத்தினார்.
வருமான வரம்பு ஆணையை திரும்பப் பெற்ற
எம்.ஜி.ஆர். நுழைவுத் தேர்வு விசயத்தில் தன் தவறை திருத்திக் கொள்ள வில்லை. ஆனால், தந்தை பெரியார் அவர்களின் கொள்கை பாசறையில் வளர்ந்த கலைஞர் அவர்கள் 2006 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் 2007 ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வை ரத்து செய்து பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு வழிசெய்து, ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றினார்.
பன்னாட்டு கைம்பெண்கள் உரிமைநாள்
(International Widows’ Day)
இந்த நாள் கைம்பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள், சமூகப் புறக்கணிப்புகள், வறுமை, வன்முறை, அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல் போன்றவற்றை உலகறியச் செய்வதற்காகவும், அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவும் கடைபிடிக்கப்படுகிறது.
அங்கீகரித்தது
கைம்பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் தீவிரத்தை உணர்ந்து, 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று நடைபெற்ற கூட்டத்தில் அய்க்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை, ஜூன் 23 ஆம் நாளை பன்னாட்டு கைம்பெண்கள் தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து அங்கீகரித்தது.
உலகம் முழுவதும் சுமார் 258 மில்லியன் கைம்பெண்கள் இருப்பதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது
இந்தியாவில் மட்டும் 4 கோடிக்கும் அதிகமான கைம்பெண்கள் உள்ளனர். கணவனை இழந்த பிறகு, பல பெண்கள் பின்வரும் சவால்களை எதிர்கொள்கின்றனர்:
வறுமையில்…
கணவனை இழந்த பிறகு, குடும்பத்தின் பொருளாதார ஆதாரம் அற்றுப் போவதால் பலர் வறுமையில் தள்ளப்படுகின்றனர்.
இந்தியாவில் கைம்பெண்கள் ஹிந்து மத விதிகளின்படி தீயசக்திகள் மற்றும் கெட்ட நிகழ்வுகளுக்கான அடையாளம் என கருதி அவர்களைச் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிப்பதில்லை,
குறிப்பாக ஏழை நாடுகளில், கைம்பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வன்முறைக்கு ஆளாகின்றனர். சொத்துரிமை மறுக்கப்படுதல், வேலை மறுக்கப்படுதல் போன்ற பாகுபாடுகளையும் சந்திக்கின்றனர்.
சிரமப்படுகிறார்கள்
பல கைம்பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் சுகாதார வசதிகளைப் பெறுவதற்கும், தங்கள் சொந்த சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் சிரமப்படுகிறார்கள்.
தனிமையில் வாழும் கைம்பெண்கள் சமூகத்தில் பாதுகாப்பின்மையையும், சுரண்டலையும் எதிர்கொள்ளும் ஆபத்து உள்ளது.
பன்னாட்டு கைம்பெண்கள் நாள் பிரச்சினைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, கைம்பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கான வாழ்வாதார வசதிகளை மேம்படுத்தவும், சமூகத்தில் அவர்களுக்கு சமமான கண்ணியத்தையும் அங்கீகாரத்தையும் வழங்கவும் உலக நாடுகளையும், சமூக அமைப்புகளையும் வலியுறுத்துகிறது.
கைம்பெண் உரிமை மீட்பு களத்தில்
தந்தை பெரியாரின் தொண்டறம்
தந்தை பெரியார் ஒரு பெண் கணவனை இழந்த பிறகு, சமூகத்தில் விதவை என்று முத்திரை குத்தப்பட்டு, அநியாயமான கட்டுப்பாடுகளுக்கும், புறக்கணிப்புக்கும் ஆளாகும் சமூக அநீதியை ஒழிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். விதவை என்ற அடையாளத்தை நீக்குதல்: கணவனை இழந்த ஒரு பெண், அவள் ‘விதவை’ என்று தனித்துக் காட்டப்படும் நிலை மாற வேண்டும். மற்ற பெண்களைப் போலவே அவளும் சமூகத்தில் சம உரிமைகளுடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும். கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்வதற்கு சமூகம் விதிக்கின்ற தடைகளை நீக்க வேண்டும் என்று பெரியார் தீவிரமாகப் போராடினார். மறுமணம் என்பது அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான உரிமை என்பதை அவர் வலியுறுத்தினார்.
கொடூரமான பழக்க வழக்கங்கள்
கணவனை இழந்த பெண்கள் மங்கலமற்றவர்கள், வாய்ப்புக் கேடானவர்கள் என்று கருதும் மூடநம்பிக்கைகளை தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். தலை சிரைப்பது, வெள்ளை உடை அணிவது, சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தடை விதிப்பது போன்ற விதவைகள் மீது திணிக்கப்பட்ட கொடூரமான பழக்கவழக்கங்களை அவர் கண்டித்தார். சொத்துரிமை, கல்வி கற்கும் உரிமை, வேலை பார்க்கும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் விதவைகளுக்கு மறுக்கப்படக்கூடாது என்று பெரியார் வாதிட்டார். எந்த ஒரு பெண்ணும், கணவனை இழந்ததால் தனது சுயமரியாதையை இழக்கவோ, சமத்துவத்தை மறுக்கப்படவோ கூடாது என்பது தந்தை பெரியாரின் முக்கியக் கொள்கையாக இருந்தது.
சமமான வாழ்வுரிமை
தந்தை பெரியார் தனது பகுத்தறிவு, சுயமரியாதை, சமூக நீதி போன்ற கொள்கைகளின் அடிப்படையில், பெண்களின் அடிமைத்தனத்தை ஒழிப்பதில் பெரும் கவனம் செலுத்தினார். அவர், கைம்பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், சமூகத்தில் அவர்கள் எதிர்கொண்ட பாகுபாடுகளை அகற்றவும் அயராது பாடுபட்டார். ஆகவே, தந்தை பெரியார் “கைம்பெண் ஒழிப்பு” என்று பேசியது, விதவைகள் மீது சமூகத்தால் திணிக்கப்பட்ட தடைகளையும், பாகுபாடுகளையும், மூடநம்பிக்கைகளையும் ஒழித்து, அவர்களுக்குச் சமமான வாழ்வுரிமையையும், சுயமரியாதையையும் மீட்டெடுப்பதற்கான ஒரு புரட்சிகரமான சமூக சீர்திருத்தக் கருத்தாகும்.