அமெரிக்காவிற்குப் போன ஜாதி

viduthalai
14 Min Read

‘புதிய குரல்’ சார்பாக “அமெரிக்காவிற்குப் போன ஜாதி” என்ற தலைப்பில், இணையதள கருத்தரங்கு ஒன்று 3.5.2023 அன்று தோழர் பா.மணியம்மை தலைமையில் நடைபெற்றது. அதில் அமெரிக்காவில் வாழும் கவிஞர் மா.வீ.கனிமொழி, தோழர் அஜிதா, தோழர் ஓவியா ஆகியோர் கருத்துரையாற்றினர். அவர்தம் உரைகளின் தொகுப்பு நூல் கிடைத்தது!

புலம்பெயர்ந்து குடியேறியுள்ள நம் நாட்டவர் மறக்காமல் ஜாதி என்ற கொடும் நோயை தம்முடன் எடுத்துச் சென்று தொற்று நோய் போல பரப்புகின்றனர். இதில் ஆர்.எஸ்.எஸ். வலையில் சிக்கிக் கொள்ளும் மீன்களாக படித்துப் பணியில் உள்ள பாமரர்களான நம்மவர் ஹிந்து என்ற முத்திரை மூலம் ஆரிய மாயையில் அகப்படுகின்றனர். அந்நோய் ‘நம்ம கலாச்சாரம்’ என்ற பெயரால் ஓர் ஆரிய மதவெறிச் சடங்குகள் மூலம் – நம் மக்களிடையே போதையை உருவாக்குகின்றனர். வெறுப்பு அரசியல் விதைகள், ஜாதி வர்ணாசிரம சடங்கு, சம்பிரதாயங்கள் – கோயில் பக்தி மூலம் ‘பிறப்பொக்கும்’ என்ற தத்துவத்தை ஒழித்துக்கட்டும் நிலையை எப்படி லாவகமாக்கினர்?

பணிக்கூடங்களில் பச்சையாக வேறுபாடுகள் தலைநீட்டி – வெளிநாடுகளில் இந்த தொற்று பரவாமல் தடுப்பதற்கு இவ்வுரை – அங்கு வாழும் ஓர் அனுபவம் மூலம் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதனைப் படித்துப் யதார்த்த நடைமுறையில் ஜாதி எப்படி ஊடுருவியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

– ஆசிரியர்

இந்த இணையக் கருத்தரங்கத்திற்கு அருமையான தலைமையுரையாற்றிய மணியம்மை அவர்களே! அதே போல இந்தக் கருத்தரங்கத்தில் எனக்குப் பின்னால் பேச இருக்கும் வழக்கறிஞர் அஜிதா அவர்களே! என்னை அறிமுகப்படுத்திய தோழர் கலையரசி அவர்களே! இந்த நிகழ்ச்சிக்கு இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய தோழர் உதயகுமார் அவர்களே! மற்றும் இந்த நிகழ்ச்சியில் இணைந்திருக்கக்கூடிய சான்றோர் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம்!

ஜாதி எப்படியெல்லாம் செயல்படும்

‘அமெரிக்காவிற்குப் போன ஜாதி’ இந்த தலைப்பைப் பார்த்தவுடன் நான் யோசித்த சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் முழுக்க முழுக்க சென்னையில் பிறந்து வளர்ந்த ஒரு பெண். அதனால் மற்ற மாவட்டங்களில் இந்த ஜாதி எப்படிச் செயல்படுகிறது என்று தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற மாவட்டக்காரர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு புரிந்துணர்வு எனக்கு அவ்வளவாக இல்லை. சென்னையிலிருக்கும் வரைக்கும் வீட்டிலும் அதை அறிமுகப்படுத்தவில்லை. அதனால், பள்ளி முடிகின்ற வரை, கல்லூரி முடிகின்ற வரை பெரிதாக ஜாதி எப்படியெல்லாம் செயல்படும் என்ற புரிதல் எனக்குக் கிடையாது. ஆனால், அலுவலகத்திற்குள் வரும்பொழுது, எம்.என்.சி (MNC) நிறுவனத்திற்குள் வரும்போது, இது எப்படிச் செயல்படும் என்று ஓரளவுக்கு என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதை எப்படி நாம் பார்க்க வேண்டும் என்றால், சென்னையில் இருக்கக்கூடிய ஒருவருக்கு பன்னாட்டு (MNC) நிறுவனம், ஜாதி இப்படியெல்லாம் இருக்கும் என்று அறிமுகப்படுத்துகிறது. அப்படித்தான் நான் என் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

ஏன் இதை சொல்கிறேன் என்றால், என்னுடைய அமெரிக்கப் பயணத்திற்கு முதல் படி அங்கிருந்துதான் வருகிறது. ஏனென்றால், அமெரிக்கர்களோடு வேலைபார்க்கும்போது அவர்கள் நம்முடைய க்ளையண்டாக இருப்பார்கள். அப்போது அவர்களோடு வேலைப் பார்க்கிறோம். அந்த இடத்திற்குள் ஜாதி எப்படி வேலை பார்க்கிறது என்று பார்க்க வேண்டும்.

முதல் சுயமரியாதை மாநாட்டிலேயே…

இன்றைக்கும் நம்முடைய தோழர்கள் எம்என்சி நிறுவனங்களில் வேலை செய்யக்கூடியவர்கள் இருப் பார்கள். அவர்களிடம் நீங்கள் கேட்டீர்களானால், தெரியும். மற்ற மாநிலங்களிலிருந்து வருகிறவர்களுக்குத்தான் பெயருக்குப் பின்னால் (caste name) ஜாதிப்பெயர் இருக்கிறது. அதை வைத்து சுலபமாக அவர்கள் ஜாதியைக் கண்டுபிடித்துவிடலாம். தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு, பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர் போடவேண்டிய நிலை இல்லை. ஏனென்றால் நமக்குத் தெரியும், 1929இல் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டிலேயே பெயருக்குப் பின்னால் ஜாதி போடுவதை விட்டு விட்டோம். அப்படியெல்லாம் இருந்தாலும் கூட நுட்பமாக, மென்பொருள் நிறுவனங்களுக்குள் அல்லது பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்குள் ஜாதி செயல்படும். நாம் பெயருக்குப் பின்னால் ஜாதி போடமாட்டோம். ஆனால் இரண்டு விஷயங்களை அதில் நீங்கள் பார்க்கலாம். ஒன்று தமிழ்ப்பெயராக இருக்கும்போது உங்களால் ஜாதியைக் கண்டுபிடிக்க முடியாது, மற்றபடி பெயர்களில் கூட ஜாதி இருக்கிறது. பெயருக்குப் பின்னால் ஜாதி பெயரைப் போடவில்லை என்றாலும் கூட அவர்கள் பெயரை பார்த்த மாத்திரத்தில் இவர் இன்ன ஜாதியினராகதான் இருப்பார்கள் என்று அவர்கள் புரிந்து கொள்ளும் நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது என்கிற இந்தப் புரிதலே எனக்கு அலுவலகத்திற்குள் வந்த பிறகுதான் தெரிய வந்தது.

இந்த மென்பொருள் நிறுவனங்கள் அல்லது பெரிய பன்னாட்டு நிறுவனங்களில், வெளிநாட்டில் இருக்கக்கூடிய பழக்க வழக்கம்தான் இருக்கும். அது என்னவெனில் உங்களுடைய முதல் எழுத்தை விரிவாக்கம் செய்து எழுத வேண்டும். Lastname இருக்குமல்லவா? நாம் விரிவாக்கம் செய்து எழுதும்போது, அதில் அப்பாவின் பெயர் இடம் பெறும். முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன் இந்த ஜாதிக்குரியவர்கள் இந்தப் பெயரைத்தான் வைப்பார்கள் என்ற பொதுவான நிலை இருந்ததல்லவா, அதை வைத்து உங்களுடைய ஜாதியைக் கண்டுபிடித்துவிடுவார்கள். இது சென்னையிலிருக்கும் போது நான் தெரிந்து கொண்டது. இப்படியெல்லாம் நடக்கிறது, பெயருக்குப்பின் ஜாதியே போடவில்லையென்றாலும் அவர்கள் உங்களை அடையாளப் படுத்துகிறார்கள், அடையாளம் கண்டுபிடிக்கிறார்கள் என்னும் நிலையை நான் சமூகத்தோடு நேரடியாக பழகும் போதுதான் உணர்ந்து கொள்கிறேன்.

ஹிந்தி எனக்குத் தெரியாது

அதற்குப் பிறகு 2010 இல் முதன் முதலாக அமெரிக்கப் பயணம். அது ரோட்டரி சங்கத்தின் மூலமாக நடைபெற்ற பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்ச்சி. கிட்டத்தட்ட 35 நாட்கள் அங்கிருக்கக்கூடிய ஒரு மாநிலத்தில், அமெரிக்க வீடுகளில் அமெரிக்கர்களோடு தங்கி இந்தப் பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்ச்சி நடந்தது.. அப்போது நான் இரண்டு முக்கியக் கேள்விகளை எதிர்கொண்டேன். எல்லா அமெரிக்கர்களும் என்னைக் கேட்ட முதல் கேள்வி, “நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்கள் அப்படியானால் ஹிந்திதானே உங்கள் மொழி. ஹிந்தி தெரியுமா?” என்பதுதான். நான் அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? ஹிந்தி எனக்குத் தெரியாது என்று நான் சொன்னவுடன். இல்லையே இந்தியாவிலிருந்து வரும் எல்லோரும் ஹிந்தி பேசுவார்களே? ஏனென்றால் முதலில் இங்கு வந்தவர்கள் யார்? 50, 60 ஆண்டுகளுக்கு முன் வந்தவர்கள் யார்? பனியாக்கள் வருகிறார்கள். குஜராத்காரர்கள் உள்ளனர்.

அவர்களை எடுத்துக்கொண்டால் இருக்கக்கூடிய தொழில்களெல்லாம் அவர்களிடம்தான் இருக்கும். அதற்குப் பிறகு பஞ்சாபைச் சேர்ந்த மக்கள் வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு மொழி இருந்தாலும் வெளியில் வரும்போது அவர்கள் ஹிந்திதான் பயன்படுத்துகிறார்கள். அதனால் வடக்கிலிருந்து வந்தவர்கள், அப்புறம் தமிழ்நாட்டிலிருந்து வந்தாலும் இங்கே பார்ப்பனர்கள் முதன்முதலாக வந்ததால் ஹிந்திதான் இந்தியாவின் அடையாளம் என்ற எண்ணத்தை இங்கே இருக்கக்கூடிய அமெரிக்கர்கள் மத்தியில் ஏற்கெனவே திணித்து வைத்திருக்கிறார்கள். முதலில் இதை அவர்களுக்குப் புரிய வைப்பதே பெரிய சவாலாக இருந்தது. அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று யோசிக்கும்போது நான் அவர்களிடம் சொன்னேன், அய்ரோப்பா கண்டத்தைப் பாருங்கள்! எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதாகத்தான் தெரியும், ஆனால் அவர்களுக்குள் வெவ்வேறு மொழிகள் இருக்கின்றன. வெவ்வேறு பண்பாடுகள் இருக்கின்றன. ஸ்காட்லாந்தில் இருப்பவர் ஸ்காட்டிஷ்தான் பேசுவார். அதேபோல் பிரான்சில் இருப்பவர் பிரெஞ்ச் மொழிதான் பேசுவார். எல்லோரும் ஒரே மொழி பேசுவதில்லை, கிட்டதட்ட இந்தியா அப்படித்தான். அது ஒரு துணைக்கண்டம்தான். நாடு என்று சொல்லி வைத்திருக்கிறார்களே தவிர அது ஒரு துணைக் கண்டம். இன்றைக்கு அரசியல் ரீதியாகவே முதலமைச்சர் அவர்கள் ஒன்றியம் என்று பயன்படுத்துகிறார். அது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறன். ஒன்றியம், அதாவது union of states என்று சொல்வதிலேயே அந்த மக்களிடம் நிறையப் பண்பாடுகள் இருக்கின்றன என்று நாம் உணர்த்துகிறோம். நீங்கள் வெறும் நாடு என்று சொன்னால் வெளியில் இருக்கிறவர்கள். ஒரு நாடு என்றால் ஒரே  இன மக்கள்தான் இருப்பார்கள். ஒரே பண்பாடுதான் இருக்கும், ஒரே மதம்தான் இருக்கும், ஒரே மொழிதான் இருக்கும் என்று ஒரு பிம்பம் அவர்களுக்குள் ஏற்படுகிறது இல்லையா?

அதை நீங்கள் உடைப்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தச் சொல்லாடல் கிடையாது, அவர்களிடம் இதை முதலில் நாம் உடைக்க வேண்டியிருக்கிறது.

நீங்கள் அசைவமெல்லாம்
சாப்பிடுவீர்களா?

பல அலுவல் மொழிகள் இருக்கின்றன. ஹிந்தி ஒரு அலுவல் மொழி என்பதையும், நாங்கள் ஹிந்தி பேசமாட்டோம் என்பதையும், நாம் பதிவு செய்ய வேண்டும். இரண்டாவதாக பல இடங்களில் எதிர் கொண்ட ஒரு கேள்வி “நீங்கள் அசைவமெல்லாம் சாப்பிடுவீர்களா?” என்பது. நீங்கள் ஒரு நிகழ்ச்சிக்குப் போனீர்கள் என்றால், அசைவம் இருந்து, அதை நாம் எடுக்கப் போனால் அமெரிக்கர்கள் கேட்பார்கள், நீங்கள் அசைவம் சாப்பிடுவீர்களா என்று. ஏன், நான் சாப்பிடுவேனே, பறப்பது, ஓடுவது எல்லாம் சாப்பிடுவேன் என்று விளையாட்டாகச் சொன்னால், “இல்லையே, பீப் சாப்பிடுவீர்களா? போர்க் சாப்பிடுவீர்களா?” என்று குறிப்பிட்டுக் கேட்டார்கள். எல்லாமே சாப்பிடுவோம் என்று அவர்களுக்கு அந்தப் புரிதலையும் ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால், இங்கிருந்து போனவர்கள் இந்தியாவின் முகமே சைவம் என்ற பிம்பத்தை அவர்களுக்குக் கொடுத்து வைத்திருப்பார்கள். அப்படியெல்லாம் இல்லை. இந்தியாவில் எல்லோரும் இலை, தழைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கமாட்டோம், மீன் உணவு எல்லாமே சாப்பிடுவோம் என்று அந்தப் புரிதலை ஏற்படுத்த வேண்டும். இப்படி உணவு சம்பந்தமாக நாம் ஏற்படுத்தக்கூடியப் புரிதல், மொழி சம்பந்தமாக நாம் ஏற்படுத்தக்கூடியப் புரிதல் இவையெல்லாம் ரொம்ப முக்கியம். ஏனென்றால் இதற்குப் பின்னாலும் ஜாதிதான் இருக்கிறது. முன்னர் போன அந்த ஜாதியினர் இந்தப் புரிதலை அங்கே ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

2013இல் மீண்டும் நான் அமெரிக்காவிற்கு வருகிறேன். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக இங்குதான் இருக்கிறேன். சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவர்களுக்குப் பெரிதாக ஜாதியைப்பற்றி, அந்தக் கட்டமைப்பு பற்றி ஒரு புரிதல் இருக்காது. அதற்கான தேவை சென்னை மாவட்டத்தில் இல்லை என்று நான் கருதுகிறேன். இன்றைக்கு முகநூலில் நிறையப் பேர் எழுதுவதைப் பார்க்கிறேன். சென்னை ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் கோட்டை என்றெல்லாம் எழுதுகிறார்கள். எனக்கு அதைப் பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. அந்த மாவட்டத்தையாவது விட்டு வையுங்கள். அதையும் ஒரு ஜாதி என்று கொண்டு போய் மற்ற மாவட்டங்களைப் போல் கலவர பூமியாக மாற்றிவிட வேண்டாம். சமத்துவ நோக்கில் நாம் பயணிக்கிறபோது சென்னை மட்டுமாவது தனித்திருக்கட்டும் என்கிற ஓர் எண்ணம்.

பண்டிகை கொண்டாடமாடீர்களா?

அமெரிக்காவிற்கு வந்து இங்கேயே முழுவதுமாக இருக்கும்போது நான் எதிர்கொள்ளக்கூடிய செய்திகள், “இத்தனை விதமான ஜாதிகள் நம்மிடம் இருக்கிறதா?” என்ற புரிதலை ஏற்படுத்துகிறது. நீங்கள் தமிழ்ச் சமூகத்தோடு இருக்கும்போது நிறைய விஷயம் புரியும். இதைத்தாண்டி இந்தியச் சமூகத்தோடும் நாம் இயங்குகிறோம். நான் இதைச் சொல்ல வேண்டிய தேவை இன்றுவரை இந்தியர்கள் இருக்கக்கூடிய குடியிருப்பில் நான் இருந்தது கிடையாது. அவர்களுடன் இருப்பது எனக்கு மிகவும் சிக்கலான விஷயம். ஏனென்றால், அவர்கள் பண்டிகைகளைக் கொண்டாடிக்கொண்டே இருப்பார்கள். பாட்லக் (potluck) அடிக்கடி நடக்கும். அது வேறு ஒன்றுமில்லை கூட்டாஞ்சோறு.. சமைத்துக் கொண்டு வந்து ஒரே இடத்தில இருந்து இதைச் சாப்பிடுங்கள், அதைச் சாப்பிடுங்கள் என்று சாப்பிட்டுக் கொண்டிருப்போம். அங்கு அவர்கள் பரிமாறக் கூடிய செய்தி “நீங்கள் இந்தப் பண்டிகை கொண்டாடமாடீர்களா?” அதற்கு நாம் விளக்கம் கொடுக்க வேண்டும். முதலில் தமிழ்நாடு என்றாலே ஒரு கட்டம் கட்டுவார்கள். கொஞ்சம் தள்ளியே நம்மை நிறுத்துவார்கள். இதில் ஹிந்தி வேறு தெரியாது. நாம் அடுத்த கட்டத்தில் இருப்போம். நாங்கள் இந்த பண்டிகையெல்லாம் கொண்டாடமாட்டோம், கடவுள் மறுப்பாளர்கள் என்று சொன்னால் அப்படியே ஒதுக்கி விடுவார்கள்.

கணவர் காலில் விழுவது
சுயமரியாதைக்கு இழுக்கு

இந்த நிகழ்வுகளையெல்லாம் நீங்கள் இந்தியர்களோடு இருக்கும்போது எதிர்கொள்ள வேண்டும். இன்னொரு சிக்கல் என்னவென்றால், இங்கிருக்கக் கூடிய இந்தியப் பெண்கள், அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், தென்னாட்டுப் பெண்கள் வடக்கில் என்னென்ன பண்டிகை கொண்டாடுகிறார்களோ அதையெல்லாம் அவர்கள் இங்கே கொண்டாடுவார்கள். இவர்களுக்கு நிறைய விசா பிரச்சினைகள் எல்லாம் இருக்கிறதல்லவா, அதனால், கணவரோடு சார்ந்திருப்போர் ‘dependent’ விசாவில் வருகிறவர்களுக்கு உடனடியாக அங்கு வேலை கிடைக்காத போது என்ன செய்வார்கள்? வீட்டில் இருக்கிறார்கள், அவர்களுக்கு மதம் சார்ந்த அந்த நம்பிக்கை இருக்கிறது என்கிறபோது அவர்கள் கொண்டாடுகிற பண்டிகைகள் போக வட நாட்டில் என்னவெல்லாம் பண்டிகை கொண்டாடுகிறார்களோ அதையெல்லாம் கேட்டு இவர்கள் கொண்டாடுவார்கள். அதில் ஒரு பண்டிகை, ஒரு அம்மா என்னிடம் சொன்னது என்னவென்றால், எனக்கு அந்தப் பண்டிகையின் பெயர் சரியாகத் தெரியவில்லை, ஏன் பண்டிகை என்று சொல்கிறேன் என்றால் அது விழா கிடையாது. அது எந்த அறிவு சார்ந்த விழாவும் கிடையாது. அவர்கள் பண்டிகை கொண்டாடுகிறார்கள். அவர்கள் கவுரி பூஜையோ என்னவோ சொன்னார்கள். சொல்லிவிட்டு “இதை நீங்களெல்லாம் கொண்டாட மாட்டீர்களா?” என்று கேட்டார்கள். அப்போது என்ன பண்ணுவீர்கள் என்று கேட்டேன். பூஜையெல்லாம் பண்ணிவிட்டு கணவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும், அதுதான் ரொம்ப முக்கியம், நீண்ட ஆயுளுக்காக நாங்கள் பிரார்த்தனை பண்ணுவோம் என்றார்கள். அந்த அம்மா நன்றாக படித்த ஒரு பெண்மணி, லட்சக்கணக்கில் சம்பாதிக்கிற ஒரு பெண்மணி. ஆனாலும் அவர்களுடைய சிந்தனை, இந்தப் பூஜையெல்லாம் கொண்டாடவேண்டும் என்பதில்தான் இருக்கிறது. கணவர் காலில் விழுவது சுயமரியாதைக்கு இழுக்கு என்கிற சிந்தனை கூட இல்லை அதை நீங்கள் எடுத்துச் சொன்னால், என்ன ஆகும் என்றால், இந்த ஆண்கள், அவர்களை நம்மிடம் பேசவிடமாட்டார்கள். இந்தப் பெண்ணிடம் நீ பேசாதே! என்கிற நிலையெல்லாம் நடக்கும். நாம் யதார்த்தமாக சில விஷயங்களைக் கூறுவோம்.

நீங்கள் இந்தியர்களிடம் பேசும்போது கவனமாக வேறு பேச வேண்டியிருக்கும். ஏனென்றால் நாம் யதார்த்தமாகக் கூறுவதை அவர்கள் மிகவும் கடுமையாக எடுத்துக்கொண்டு நம்மை ஒதுக்க ஆரம்பிப்பார்கள். இங்கு திருமணங்களைப் பற்றி தோழியர்களுக்குள் பேசும்பொழுது. ஒரு தோழி சொன்னது என்னவென்றால் “எனக்கு ஜாதியெல்லாம் பிரச்சினை கிடையாது as long as we are going to marry different sex” அதாவது ஓரினச்சேர்க்கையாளர் என்கிற நிலை இருக்கிறதல்லவா, அந்த மாதிரி போய்விடக்கூடாது. ஆண் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம். பெண் ஆணைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது வரை எனக்குப் பிரச்சினை கிடையாது. நான் அதைக் கேட்டுவிட்டு, சும்மா இருக்காமல் “அப்படியே homo sexuals ஆக இருந்தால் என்ன பண்ண முடியும். அது அவர்களுடைய விருப்பம்தானே” என்றேன். அதோடு அவர்கள் என்னிடம் பேசுவதே கிடையாது. இந்தச் சிக்கல் எல்லாம் இருக்கிறது. இவர்களோடு பேசும்போது மிகவும் கவனமாக சொற்களை விடவேண்டும். நாம் இயல்பாக பேசிவிட்டால் அதை அவர்கள் கடுமையாக எடுத்துக் கொள்வார்கள். அதுவும் நீங்கள் வட நாட்டவர்களுடன் பேசும்போது இன்னும் சிக்கல். ஏனென்றால் நம்மை விட மிகவும் பிற்போக்குவாதியாக இருப்பார்கள். ஒரு நேர்மையான உரையாடலை அவர்களுடன் நிகழ்த்த முடியாது. எதற்கெடுத்தாலும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். இது ஒரு நிலை இந்தியர்களோடு இருப்பதில் இது ஒரு சிக்கல்.

தமிழ்க் குடும்பங்கள், தமிழ்ச் சமூகம் என்று பார்க்கும்பொழுது. தமிழ்ச் சங்கங்கள் இங்கே இருக்கின்றன. தமிழ்ச் சங்கங்களில் இருக்கக்கூடிய ஒரு பிரச்சினை என்னவென்றால், ஏற்கெனவே சொன்னது போல, முதலில் வந்தவர்களிடம்தான். தமிழ்ச் சங்கங்களின் ஆதிக்கம் தலைமைப் பொறுப்பு எல்லாமே இருக்கும். முதன்முதலில் நான் தமிழ்ச் சங்கங்களுக்குள் போகும்போது,

நிறைய விஷயங்கள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தன. நம் ஊரில் கூட இப்படியெல்லாம் நடக்காது. இவர்கள் இவ்வளவு தூரம் இங்கே வந்து பக்திப்பாடல்கள், சமஸ்கிருதப் பாடல்களைப் பாடுகிறார்கள். ஒரு தமிழ் அமைப்பு நடத்தக்கூடிய நிகழ்ச்சியில் ஒரு பெரிய பாடகர் வந்தார். வந்து என்ன செய்தார் என்றால், “நான் முதல் பாடல் சமஸ்கிருதத்தில் பாடுவேன்” என்றார். அது மெல்லிசை நிகழ்ச்சி. தமிழர்கள் நடத்துகிறார்கள். காசு கொடுத்து அழைத்து வருகிறார்கள். அவர் ஒரு பெரிய பாடகர் என்று அழைத்து வருகிறார்கள். அவர் என்ன செய்கிறார்? நான் சமஸ்கிருதத்தில்தான் பாடுவேன் என்று அடம்பிடிக்கிறார். அவர்கள் முடியாது நீங்கள் தமிழில்தான் பாடவேண்டும் என்றவுடன் அவர் என்ன செய்தார் என்றால் ஹம் பண்ணினார். அந்த சுலோகத்தை ஹம் செய்துவிட்டுதான் அவர் தமிழ் பாடலுக்கே போகிறார். தமிழர்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சி. தமிழர்கள் காசு கொடுக்கிறோம், நான் சமஸ்கிருதத்தில்தான் பாடுவேன், பாடக்கூடாது என்றால் சுலோகத்தை ஹம் பண்ணிவிட்டாவது மெல்லிசையைத் தொடங்குவேன் என்கிற நிலைதான் இன்றைக்கும் அங்கு இருந்து வருகிறது.

முழுக்க முழுக்க
மேல் ஜாதியைச் சேர்ந்தவர்கள்

தமிழ்ச் சங்கங்களுக்குள் உள்ள தலைமைப் பொறுப்பைப் பார்க்கும் பொழுது, அவர்கள் முழுக்க முழுக்க மேல் ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்குள்ளயே திரும்பத் திரும்பத் தலைமைப் பொறுப்பு சுற்றிக்கொண்டே இருக்கும். அப்படி தலைமைப் பொறுப்பு மாறினாலும், இவர்களுக்குப் பின் இங்கு தமிழ்நாட்டிலிருந்து நிலவுடைமைச் சமூகத்திலிருந்து வந்தவர்களுக்குத்தான் அப்பொறுப்பு மாற்றப்படும். அவர்கள்தான் 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்கள். மிகச் சமீபமாகத்தான். ஒரு 15 – 20 ஆண்டுகளுக்குள்தான் எல்லாப் பிரிவினரும், அதுவும் மென்பொருள் நிறுவனங்கள் மூலமாக பன்னாட்டு நிறுவனங்கள் மூலமாக எல்லாச் சமூகத்தவரும் வருவது என்பது அமெரிக்காவில் நடக்கிறது. முன்னர் இருந்தவர்கள்தான் தலைமைப் பொறுப்பில் இன்னும் இருக்கிறார்கள். நீங்கள் அவர்கள் சொற்களை மீறி நடக்கிறீர்கள் அல்லது வேறு ஏதாவது கருத்துச் சொல்கிறீர்கள் என்றால். உங்களை நிகழ்ச்சிக்குள் வரவிடாமல் செய்வதெல்லாம் நடக்கும். அது எந்தளவுக்கு நடக்கும் என்றால், ஒரு தமிழ்ச் சங்கத்தில் நிகழ்ச்சி நடத்தும்போது, அவர்கள் அத்திம்பேர், அம்மாமி மொழியில் பேசுகிறார்கள் என்று நான் முகநூலில் எழுதினேன். “இவர்கள் என்ன இப்படிப் பேசுகிறார்கள்? இவர்களை அழைத்து வந்து நீங்கள் நிகழ்ச்சி நடத்த வேண்டுமா?” என்று கேட்டதற்கு பெரும் பிரச்சினையாகி, “உங்களை இங்கு இருக்கவிடாமல் செய்து விடுவோம் தெரியுமா?” என்ற சொற்கள் வரை அவர்களால் சொல்ல முடிகிறது. ஏனென்றால், அவர்களுக்கு அந்தக் கட்டமைப்பு இருக்கிறது. அதுதான் உண்மை. உங்கள் விசாவை ரத்து செய்ய வைக்க முடியும் எங்களால் என்று சொல்கிறார்கள் என்றால், அந்த அளவிற்கு அவர்கள் இங்கு வலுவாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு இந்திய தூதரகத்திற்குள் போனாலும், விஸ்வ ஹிந்து பரிசத் அல்லது இந்து அமைப்புகளோடு தொடர்புடையவர்கள்தான் நிறைய பேர் இருப்பார்கள். ஜாதி எந்த அளவிற்கு இங்கு வேரூன்றி இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் சின்ன சின்ன எடுத்துக்காட்டுகள்.

நாட்டார் தெய்வ வழிபாடு

தமிழ்ச் சங்கங்களுக்குள் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், ஒரு பத்தாண்டு காலமாக தமிழ்ச் சங்கங்களுக்குள் சில இடங்களில் சில பிளவுகள் ஏற்பட்டு, சிலர் பிரித்தார்கள். பிரிந்தவர்கள் போய் தனியாக சங்கம் ஆரம்பித்தார்கள். ஆனால் அங்கே என்ன பிரச்சினை என்றால், தமிழ்த் தேசிய வெறி அதிகமாக உள்ளவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சங்கங்கள் தான் அதிகமாக இருக்கின்றன. ஒன்று மேல் ஜாதியினர் நடத்தும் தமிழ்ச் சங்கங்கள். அடுத்து நாங்களெல்லாம் முற்போக்குவாதிகள் என்று சொல்பவர்களிடம் தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன என்று நாம் நினைத்தால் கூட அவர்களிடம் தமிழ்த் தேசிய வெறி அதிகமாக இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் என்ன அதிகமாக சொல்லிவிடப் போகிறார்கள்? நாட்டார் தெய்வ வழிபாடு பற்றி பேசுவார்கள். இந்த நாட்டார் தெய்வ வழிபாட்டுக்குள்ளும் ஒரு ஜாதி இருக்கிறது. அதைச் சொல்லும்போது, மறைமுகமாக ஜாதி என்ன என்பது அந்த இடத்தில் சொல்லப்படுகிறது. மிகக் கொடுமையான சில விசயங்கள் என்னவென்றால், முளைப்பாரி ஊர்வலம் எல்லாம் நடத்துவார்கள். முளைப்பாரி ஊர்வலத்தில் ஜாதி இருக்கிறது, ஏனென்றால், ஊரில் ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களெல்லாம் இந்த முளைப்பாரி ஊர்வலத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று சொல்வார்கள். இரண்டாவது பெண்ணடிமைத்தனம் அதில் இருக்கிறது.

(தொடரும்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *