கீழடி: நமது பண்பாட்டுக்கான அடையாளம்!
அறிவியல் உண்மையை ஏற்காத ஓர் அரசு மத்தியில்!
‘‘ஒன்றிய பா.ஜ.க. அரசு நிதி தரவில்லையென்றால், மக்களிடம் செல்வோம்’’ என்ற ஆசிரியர் கருத்தை வழிமொழிகிறேன்!
சென்னை, ஜூன் 22- கீழடி – தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம். அதனை ஒப்புக்கொள்ள மறுக்கும் – விஞ்ஞான உண்மைக்கு எதிராக ஓர் அரசு ஒன்றியத்தில் உள்ளது. ஒன்றிய அரசு நிதி தர மறுத்தால், மக்களிடம் செல்லுவோம் என்ற ஆசிரியரின் கருத்தை நாங்கள் வழிமொழிகிறோம் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்.
ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில்…
18.6.2025 அன்று காலை சென்னை சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு (பானகல் மாளிகை) அருகே, தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயல்வதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
இளைஞர்கள் எல்லாம் இங்கு வெயிலில் அமரவேண்டும் என்று சொன்னார்கள். ஆசிரியர்தான் முதலில் அமரவேண்டும். ஆசிரியர்தான் இளைஞர்.
வரலாற்றை மறைக்க முடியாது!
தமிழர்களுடைய தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயல்வதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து ஏற்கெனவே எல்லா அரசியல் கட்சிகளும் தனித்தனியே அறிக்கைகளை வெளியிட்டிருந்தபோதும், அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும் என்கின்ற முறையில், திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்து, இந்நிகழ்விற்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கக் கூடிய அனைவருடைய நன்மதிப்பிற்குரிய தலைவர், தோழர் கனகராஜ் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, இன்றைக்குத் தமிழ்நாட்டினுடைய மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கக் கூடிய மரியாதைக்குரிய அய்யா ஆசிரியர் அவர்களே,
மேடையில் வீற்றிருக்கக்கூடிய அனைத்துத் தோழமைக் கட்சிகளின் மதிப்புமிகு தலைவர்களே, கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாது, திரளாகப் பங்கேற்று இருக்கக்கூடிய தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓர் உண்மையான அரசு
என்ன செய்யவேண்டும்?
என்ன செய்யவேண்டும்?
இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து, எல்லோரும் பல்வேறு கருத்துகளைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் தலைவர்கள் பேசவிருக்கிறார்கள். இடையிலேயே நம்முடைய ஆசிரியர் அவர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தக் கூடிய வகையில், இரண்டு தீர்மானங்கள் இங்கே முன்மொழியப்பட்டு, அந்த இரண்டு தீர்மானங்களையும் நம் அனைவரின் சார்பாக எழுந்து நின்று கரவொலி எழுப்பி, வரவேற்று, நம்முடைய ஆதரவைத் தெரிவித்திருக்கின்றோம்.
இதுதான் இந்த ஆர்ப்பாட்டத்தினுடைய நோக்கம்.
இந்த நோக்கத்தைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு செயல்படவேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டம் நடத்தியதால், இங்கே தீர்மானம் நிறைவேற்றியதால், அது செயல்படுமா? செயல்படாதா? என்பது வேறு விஷயம்.
ஆனால், ஓர் உண்மையான அரசாங்கமாக இருக்குமேயானால், ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய அரசாங்கமாக இருக்குமேயானால், இதனை செவிமடுத்துக் கேட்கவேண்டும்.
கனகராஜ் அவர்கள் சுருக்கமாகப் பேசினாலும், ஆழமான கருத்துகளை எடுத்துச் சொன்னார்.
ஓர் உண்மையை ஒப்புக்கொள் என்று சொல்வதற்கு ஒரு போராட்டமா? பொய்யை ஒப்புக்கொள்ள வேண்டுமானால் போராட்டம் நடத்தலாம்; ஏனென்றால், பொய்யை ஒப்புக்கொள்ளவே முடியாது.
ஆனால், உண்மையை ஒப்புக்கொள் என்பதற்குத் தமிழ்நாட்டில் ஒரு போராட்டத்தை நடத்தவேண்டிய, இந்தக் கடுமையான வெயிலில் போராடவேண்டிய ஒரு கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டு இருக்கின்றோம்.
ஒன்றிய அமைச்சர் என்ன சொல்கிறார்?
டில்லியிலிருந்து வந்த ஓர் அமைச்சர், குளிர்சாதன அறையில் அமர்ந்துகொண்டு ஒரு கருத்தைச் சொல்லி விட்டுப் போய்விட்டார். வெயிலில் அமர்ந்துகொண்டு அவர் சொல்லவில்லை.
இதை மேலும் ஆய்வு செய்யவேண்டும்; அதற்குப் பிறகுதான் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியும் என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டார்.
அவர்களுடைய நோக்கம், இந்த ஆய்வறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதான். ஏற்கவும் மாட்டார்கள்.
ஏனென்றால், இந்த ஆய்வறிக்கையைக் கண்டு அவர்கள் எரிச்சல் அடைகிறார்கள். அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
2,500 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்களுடைய நாகரிகத்தை வெளிப்படுத்துவதுதான் அந்த ஆய்வறிக்கை.
தமிழர்களும், இந்தியர்கள்தானே!
இங்கே திருமாவளவன் உரையாற்றும்போது சொன்னார், தமிழர்களும் இந்தியர்கள்தானே! தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழர்களும் இந்தியர்கள்தான்.
இங்கே ஓர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அந்த ஆய்வில், தமிழர்களுடைய வாழ்க்கை – கடந்த 2,500 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள்? என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஓர் அறிக்கை, ஆய்வு செய்து அளிக்கப்படுகிறது.
ஏறத்தாழ, 12 ஆண்டுகாலமாக, கட்டம் கட்டமாக ஆய்வு செய்து, அந்த ஆய்வின் அடிப்படையில், அந்த ஆய்வு செய்தவர் அறிக்கை கொடுத்தார்.
யார் ஆய்வு செய்கிறார்களோ, அவர்கள்தானே அறிக்கை கொடுக்கவேண்டும். ஆனால், அந்த அறிக்கையை, அவர் கொடுக்கக்கூடாது என்று ஒன்றிய அரசு தடை விதித்தது.
அவர், நீதிமன்றத்தை நாடி, போராடியதன் விளைவாக, நீதிமன்றம், யார் ஆய்வு செய்தார்களோ, அவர்கள்தான் அறிக்கை கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பளித்த பிறகுதான், அவர் ஆய்வறிக்கையை கொடுக்கிறார்.
ஆனால், அவருடைய அறிக்கையை எங்களால் ஏற்க முடியாது; அதை மீண்டும் ஆய்வு செய்யவேண்டும்; போகிற போக்கில் இதையெல்லாம் ஏற்க முடியாது; ஏற்க இயலாது என்று ஒன்றிய அரசு சொல்கிறது.
விஞ்ஞானத்தை ஏற்காத ஓர் அரசு!
ஒரு முழு பூசணிக்காயை, சோற்றில் மறைக்க முடியாது என்று நம்மூரில் ஒரு பழமொழி உண்டு.
அவர்கள் பூசணிக்காயை மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்பது வேறு விஷயம். அது வேறு விஷயம். அவர்கள் சாப்பிடுவதில் நமக்கொன்றும் ஆட்சேபனையில்லை. பூசணிக்காயை அவாள்தான் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
ஆனால், நம்மாட்கள் பூசணிக்காயை லாரிக்கு முன், கடைக்கு முன் உடைத்துவிட்டுப் போவார்கள். அதனுடைய அருமை தெரியாமல்.
ஆனால், சோற்றில் மறைக்க முயற்சி செய்கிறார்களே, அது முடியுமா? என்றால், நிச்சயம் முடியாது, இயலாது.
விஞ்ஞானத்தை ஏற்காத, ஓர் ஆய்வை ஏற்காத, அறிவியலை ஏற்காத ஓர் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. ஒரு பத்தாம் பசலித்தனமான அமைப்பு. பழைய பிற்போக்குத்தனமான கொள்கைகளைக் கொண்ட அமைப்பு.
அதனுடைய அரசியல் பிரிவாக செயல்படக்கூடிய அமைப்புதான் பாரதீய ஜனதா கட்சி. அதுவும் சொந்தமாகச் சிந்தித்துச் செயல்படக் கூடிய அமைப்பு அல்ல. சொந்தமாக அந்த அமைப்பு எந்த முடிவையும் எடுக்க முடியாது. அந்தக் கட்சிக்குத் தலைவரை, அந்தக் கட்சி சொந்தமாகத் தேர்ந்தெடுக்க முடியாது. பிரதமரை சொந்தமாகத் தேர்ந்தெடுக்க முடியாது.
அனைத்து முடிவுகளையும் மேற்கொள்கின்ற அமைப்பு ஆர்.எஸ்.எஸ். மோடி, இன்னும் எத்தனை நாளைக்கு பிரதமராக இருப்பார் என்று தெரியாது.
அத்வானி இப்போது இருக்கிறாரா?
அவர்தானே, பெரிய கலகம் செய்தவர். பாபர் மசூதியை இடிப்பதற்குத் தலைமை தாங்கினார்.
அவர் இப்போது எங்கே இருக்கிறார்?
முரளிமனோகர் ஜோஷி இப்போது எங்கே இருக்கிறார்? அவருடைய தோளில் ஏறி, கூத்தாடிய பெண் சாமியார் உமாபாரதி எங்கே?
ஆட்டி வைப்பது எல்லாம்
ஆர்.எஸ்.எஸ்.தானே!
ஆர்.எஸ்.எஸ்.தானே!
அவர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அதுபோன்று, மோடியும் ஒரு நாள் காணாமல் போய்விடுவார்; காணாமல் அடித்துவிடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. இப்போது ஆர்.எஸ்.எஸ்.சுக்குத் தேவை மோடி, அவ்வளவுதான். பின்னாளில் இவரும் காணாமல் போய்விடுவார்; அந்த இடத்திற்கு இன்னொருவர் வருவார்.
இதையெல்லாம் எதற்குச் சொல்கின்றேன் என்றால், எல்லாவற்றையும் முடிவெடுப்பது ஆர்.எஸ்.எஸ்.தான். பா.ஜ.க. அல்ல.
ஆர்.எஸ்.எஸ். சொல்வதை செயல்படுத்தக்கூடிய அமைப்பு – அரசியல் பிரிவாக செயல்படுத்தக் கூடிய அமைப்புதான் பாரதீய ஜனதா கட்சி.
அந்த அடிப்படையில், நம்முடைய கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு – இன்னும் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதையும் இங்கே திருமா சொன்னார்.
அந்த ஆய்வறிக்கையை எங்களால் ஏற்க முடியாது என்று ஒன்றிய அரசு நிராகரிப்பது என்பது, ஒட்டுமொத்தமாக நம் அனைவரையும் நிராகரிப்பதாகும்.
மதச்சார்பின்மைக் கொள்கை!
நம்முடைய நாகரிகத்தை, நம்முடைய பண்பாட்டைப் பொறுத்த அளவில் – அந்த ஆய்வின்மூலம் வெளிப்படுவது என்ன? நம்முடைய நாகரிகத்தை மட்டுமல்ல – மதச்சார்பின்மை கொள்கையையும் அது வெளிப்படுத்துகிறது.
நாங்கள் எந்த மதத்திற்கும் அடிமையல்ல என்பதையும் அந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது.
6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் இரும்பைப் பயன்படுத்தியிருக்கின்றோம். அரசு முத்திரை அன்றைக்கும் இருந்திருக்கின்றது.
இதை எதையும் நாங்கள் ஏற்கமாட்டோம் என்று ஒன்றிய அரசு சொல்வது, எந்த அளவிற்கு சரி என்று தெரியவில்லை.
நம்முடைய ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, ஆய்வு தொடரவேண்டும். ஒரு கருத்தைத் திருமா அவர்கள் சொன்னார், ஆசிரியர் அவர்களும் அதனை வழிமொழிந்திருக்கின்றார்.
அவர் சொன்னார், தமிழ்நாட்டில் ஆய்வகம் அமைக்க 45 கோடி ரூபாய் செலவாகும். ஒன்றிய அரசு நிதி கொடுக்கமாட்டார்கள். எப்படி கல்விக்கு நிதி தர மறுக்கிறார்களோ, அதுபோல, ஆய்வுக்கும் நிதி தர மறுப்பார்கள்.
எப்படி, ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல், தமிழ்நாடு அரசு, கல்விச் செலவை ஏற்று இன்றைக்கு மிகச் சிறப்பாக செயல்படுத்துகிறதோ, அதுபோல, ஆய்வகம் அமைக்க 45 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கவேண்டும் என்று திருமாவளவன், முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
நம்முடைய ஆசிரியர் அவர்கள், அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும் என்கின்ற அக்கறையோடு, பொறுப்போடு, ‘‘முதலமைச்சர் நாளைக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கட்டும்; இந்த ஆய்வகத்தை அமைக்க நிதி தேவைப்படுகிறது; தமிழ்நாட்டு மக்களே, நிதி தாருங்கள்’’ என்று வேண்டுகோள் கொடுக்கட்டும். நாங்கள் அதை ஏற்று நிதி வசூலை செய்து தருகிறோம் என்று இங்கு ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
முதலமைச்சர் ஒரு வேண்டுகோளை விடுத்தால்…
அதை நான் வழிமொழிகிறேன். அப்படி ஒரு வேண்டுகோளை முதலமைச்சர் விடுத்தால், இங்கே இருக்கின்ற தலைவர்கள் அத்துணை பேரும் சேர்ந்து, உண்டியலை எடுத்துக்கொண்டு, எங்களுக்கு மிகவும் பழக்கமான அது – உண்டியலை எடுத்துக்கொண்டு, இந்தச் சென்னை மாநகரத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் உண்டியல் குலுக்கி, 45 கோடி ரூபாய் அல்ல; நூறு கோடி ரூபாயை நாங்கள் வசூல் செய்து தருகிறோம். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஏனென்றால், தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக தருவார்கள்.
ஒன்றிய அமைச்சர், இங்கே வந்து ஆட்சேபணைக்குரிய கருத்தைச் சொல்லிவிட்டுப் போவதை, என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால், அவர் டில்லியிலிருந்து வருவதால். ஆனால், தமிழிசை சொல்வதைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அண்ணாமலை சொல்வதைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி மவுனம் சாதிப்பதைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஏன் நீங்கள் எதிராகப் பேசுகிறீர்கள்; மவுனமாக ஏன் இருக்கிறீர்கள். உங்கள் வீட்டிலும் வந்து உண்டியலைக் குலுக்குவோம். உங்கள் வீட்டிலும் வந்து, இதற்கு நிதி கொடுங்கள் என்று கேட்போம். அப்போது, நீங்கள் தமிழனா? இல்லையா? என்பதைப் பார்க்கலாம்.
தீவிரமாகப்போராடி வெற்றி பெறுவோம்!
ஆகவே, கனகராஜ் அவர்கள் இங்கே குறிப்பிட்டதைப் போல, நமது பண்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு, நமது நாகரிகத்தை உறுதிப்படுத்துவதற்கு, நமது ஆய்வறிக்கையை உறுதிப்படுத்துவதற்கு நாம் ஒன்றுபட்டு, கரம் கோர்த்துப் போராடுகின்றோம்; மேலும் மேலும் நம்முடைய போராட்டம் தீவிரமடையும்.
தீவிரமாகப் போராடுவோம், நிச்சயமாக வெற்றி பெறுவோம்! நன்றி, வணக்கம்!
– இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உரையாற்றினார்.