சென்னை, ஜுன் 22– அமித்ஷா டில்லியில் நடந்த நிகழ்வில் ஆங்கிலம் என்பது அவமான மொழி. அது அடிமைகளின் மொழி என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக ராகுல்காந்தி பதிலடிகொடுத்திருந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:
“ஆங்கிலம் இனி காலனித்துவ நினைவுச் சின்னம் அல்ல. அது முன்னேற்றத்திற்கான உலகளாவிய கருவி. சீனா, ஜப்பான், கொரியா, இஸ்ரேல், ஜெர்மனி போன்ற நாடுகள் ஆங்கில மொழியை காலனித்துவ விளைவாகக் கருதாமல் அறிவியல், தொழில்நுட்பம், வர்த்தகத்தில் முன்னிலை பெற அதைக் கற்பிக்கின்றன. சீனாகூட நாட்டின் வளர்ச்சிக்கு ஆங்கில மொழியை அவசியமானதாகக் கருதுகிறது.
ஆனால் இந்தியாவில் அமித்ஷாவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஆங்கிலத்தை உயர்குடியினருக்கானது என சித்தரிக்க விரும்புகிறார்கள். அது நமது கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அல்ல. அது ஏழைகள், தாழ்த்தப்பட்ட சமூக மக்கள், பிற்படுத்தப்பட்ட சமூகங்களை எழுச்சி பெற அதிகாரம் அளிப்பதால் ஏற்க மறுக்கிறார்கள்.
ஒரு காலத்தில் சம்ஸ்கிருதத்தைப் போலவே இப்போது அவர்கள் ஆங்கில மொழி, மக்களை சென்றடையாமல் வைத்திருக்க விரும்புகிறார்கள். அவர்களின் கருத்து, மொழி பற்றியது அல்ல, கட்டுப்பாட்டைப் பற்றியது. திமுகவில், அடையாளத்திற்காக தமிழ், வாய்ப்பிற்காக ஆங்கிலம் என்று நாங்கள் நம்புகிறோம்.
அதனால்தான் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டும் கிடைக்கின்றன. ஏனென்றால் மொழி, ஏணியாக இருக்க வேண்டும்.
தடையாக இருக்கக் கூடாது. அமித் ஷாவுக்கு பயம் ஆங்கிலத்தால் அல்ல, சமத்துவம் மற்றும் வளர்ச்சி பற்றிய பயம் அது”ஆகையால் தான் ஆங்கிலம் படித்தால் சமத்துவம் வந்துவிடும் என்பதற்காக ஆங்கிலம் படிக்கவேண்டாம் என்று கூறுகிறார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.