ஒரு மாதம் மழை மற்றும் குளிரில் தந்தை பெரியார் அருவி குத்தி சிறையில் இருந்து விடுதலை ஆன நாள் இன்று! (21.06.1924)

Viduthalai

ூற்றாண்டு காணும் வைக்கம் போராட்டம் 1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் தொடங்கியது.  1924 ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் தனது கேரளத் தலைவர்கள் யாவரையும் சிறைக்கு அனுப்பிவிட்டது. கடைசியாக ஏ.கே.பிள்ளை, கேளப்பன், வேலாயுத மேனன் ஆகியோர் 9ஆம் தேதி கைதாயினர். அதற்கு முன்பே மற்ற தலைவர்களான கே.பி.கேசவ மேனன், டி.கே.மாதவன் போன்றோர் கைதுசெய்யப்பட்டுவிட்டனர்.  போராட்டத்தின் முன்னவரும் மூலவருமான டி.கே.மாதவன் கோட்டயம் சிறையிலும் பின் சொன்னவர்கள் திருவனந்த புரம் மத்தியச் சிறையிலும் அடைக் கப்பட்டனர். போராட்டக்காரர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப் பட்டுவிட்ட நெருக்கடியான சூழலில் ஜார்ஜ் ஜோசப்பின் கடிதவழி அழைப்புக்கு இணங்கி தன் வருகையின் தேவையை உறுதிசெய்துகொண்டு பெரியார் ஏப்ரல் 13ஆம் நாள் வைக்கம் போய் இறங்கினார்.

பெரியார் வைக்கத்தில் தினமும் நடந்த சத்தியாகிரகத்தை ஒருங்கிணைத்தார்; தலைமை தாங்கினார்; பிரச்சாரமும் செய்துவந்தார். பெரியாரின் வரவால், செயல்பாட்டால் போராட்டத்துக்குப் பெருகிவந்த ஆதரவைக் கண்டு அச்சமுற்ற அரசு குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர் அங்குத் தங்குவதற்கும், அந்த மாவட்டத்தில் பிரவேசிப்பதற்கும் தடை உத்தரவைப் பிறப்பித்தது. “வைக்கத்திலோ சுற்று வட்டாரங்களிலோ அவரின் வருகையோ தங்குதலோ அமைதியின் பங்கத்திற்கும் கலவரத்திற்கும் காரணமாகக் கூடும் என்று தெரிவதினால் ராமசாமி நாயக்கர் அவர்கள் கோட்டயம் மாவட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் வருகை தரவோ தங்கவோ செய்யக் கூடாது” என்று அம்மாவட்ட மாஜிஸ்டிரேட் எம்.வி.சுப்பிரமணிய அய்யர் உத்தரவிட்டார். மாவட்ட மாஜிஸ்டிரேட் என்பது இக்கால மாவட்ட ஆட்சித் தலைவர் பதவிக்கு நேரானது. நீதித் துறையும் வருவாய்த் துறையும் பிரியாத காலம் அது; அப்போது நீதி பரிபாலனத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவரே செய்துவந்தார். அரசின் உத்தரவைப் பெற்றுக்கொண்ட பெரியார், தான் அதை மீறப்போவதாக 1924ஆம் ஆண்டு மே 17 அன்று அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து நீதிமன்ற விசாரணை 1924 மே 21 அன்று நடைபெற்றது.  விசாரணையை நேரில் காணப் பெரியாரின் மனைவி நாகம்மையாரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அரசு சார்பாகக் காவல் துறை அதிகாரிகளான பிச்சு அய்யங்காரும், நாராயண பிள்ளையும் விசாரிக்கப்பட்டனர். விசாரணையின்போது பெரியார், “இந்த நீதிமன்றம் நியாயம் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை, விசாரணை வெறும் வேஷம், நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க முடியாது, தான் சமாதானம் உண்டு பண்ணவே வைக்கத்துக்கு வந்தேன் என்றும், எவ்விதமான தண்டனை அளித்தாலும் ஏற்கத் தயார் என்றும்” தெரிவித்தார். தீர்ப்பில் பெரியாருக்கு ஒரு மாத தண்டனை வழங்கப்பட்டது. இது தான் பெரியார் வைக்கத்தில் பெற்ற முதல் சிறைவாசத் தண்டனை.

ஏழு நாட்கள் வைக்கம் காவல் நிலையச் சிறையில் வைக்கப்பட்டிருந்த பெரியார் 1924 மே 28 இரவு வைக்கத்திலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஆறுக்குட்டி கிராமக் காவல் நிலையச் சிறைக்கு நீர் வழியாக அழைத்துச் செல்லப்பட்டார்.  அப்போது கடுமையான மழை மற்றும் சூறைக்காற்றின் காரணமாக தந்தை பெரியார் சென்ற படகு கவிழ்ந்துவிட்டது. பெரியாரை அழைத்துச்சென்ற காவலர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையிலும் தந்தைபெரியார் ஆற்றில் நீந்தி அருவிகுத்தி கிராமத்திற்குச் சென்று அங்குள்ள காவல்நிலையத்தில் தான் சிறைக்கைதி என்று கூறி தன்னை ஒப்படைத்தார்.

கடுங்காவல் தண்டனை

இதனை அடுத்து தந்தை பெரியாருக்கு 1924 ஜூன் 21 வரை கடுங்காவல் சிறைக் கொடுமையை அனுபவித்தார்.  அருவிகுத்தி சிறை சரியான வசதிகள் உள்ள சிறை கிடையாது,  கடுமையான மழை ஆகையால் சிறைக்குள் தண்ணீர் தேங்கிவிடும், பாம்பு தேள் பூரான் போன்றவை தண்ணீரில் மிதந்துவந்து சிறையின் சுவற்றில் ஏறிகொள்ளும். மேலும் சிறையில் உணவுக்கான வசதிகள் எதுவும் இல்லை. ஆகவே மொத்தமாக சமைத்து கொண்டுவருவார்கள். உணவு மிகவும் மோசமானதாகும் தரமற்றும் இருக்கும் இருப்பினும் சுமார் ஒருமாதம் மழை மற்றும் குளிரில் தந்தை பெரியார் அருவி குத்திசிறையில் இருந்து விடுதலை ஆன நாள் இன்று.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *