மனைவி கடவுச்சீட்டு கோரி விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, கையெழுத்தோ தேவையில்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Viduthalai

சென்னை, ஜூன் 21- மனைவி கடவுச்சீட்டு கோரி விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, கையெழுத்தோ தேவையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடவுச்சீட்டு

சென்னையை சேர்ந்த ரேவதி என்பவர், தனக்கு கடவுச்சீட்டு கோரி மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் விண்ணப்பித்தார். திருமணமான ரேவதியின் விண்ணப்பத்தில் அவரது கணவரின் கையெழுத்து இல்லை என்பதால், கணவரின் கையெழுத்தை பெற்று வந்தால் மட்டுமே அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என கடவுச்சீட்டு அதிகாரி தெரிவித்தார்.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரேவதி வழக்கு தொடர்ந்தார். அதில், “கருத்து வேறுபாடு காரணமாக கணவரும், தானும் பிரிந்துவிட்ட நிலையில், விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, கணவரின் கையெழுத்தை கோராமல் தனது கடவுச்சீட்டு விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், திருமணமான பெண், கடவுச்சீட்டு கோரி விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, அவரது கையெழுத்தோ பெற வேண்டிய அவசியம் இல்லை. கணவரின் கையெழுத்து பெற்று வந்தால் மட்டுமே விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்ற கடவுச்சீட்டு அதிகாரியின் போக்கு ஒரு பெண்ணை கணவரின் உடமையாக கருதும் ஆணாதிக்க மனப்பான்மையையே காட்டுகிறது.

திருமணமாகி விட்டால் பெண் தனது அடையாளத்தை இழந்து விடுவது இல்லை. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட கணவரிடமிருந்து மனைவி கையெழுத்து பெற்று வருவது என்பது இயலாத காரியம். எனவே, மனுதாரருக்கு 4 வார காலத்துக்குள் கடவுச்சீட்டு வழங்க வேண்டும் என்று உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *