கேள்வி 1: கீழடி தொல்லியல் அகழ்வாய்வு அறிக்கையை ஒன்றிய பி.ஜே.பி. அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு அலை அலையாக திரண்டு வந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உள்ளார்ந்த உணர்வுகளுக்கும், அனைத்துக் கட்சித் தலைவர்களின் எழுச்சிமிகு கண்டன உரைக்கும் ஒன்றிய அரசு செவிமடுக்குமா?
– கி.துரைராஜ், கிண்டி.
பதில் 1: உண்மையான ஜனநாயகக் குடியரசு ஆட்சி என்றால் தலைசாய்க்க வேண்டும். “மக்கள் மன்றத்தில்தான் உண்மையான இறுதி இறையாண்மை (sovereignty) இருக்கிறது” என்று இந்திய ஒன்றிய ஆட்சியாளர் பிரமாணம் எடுத்த இந்திய அரசமைப்புச் சட்டமும் கூறுகிறதே!
- • • •
கேள்வி 2: புதிய கல்விக் கொள்கையை ஏற்காத அனைத்து மாநிலங்களும் மறுபரிசீலனை செய்து, அதனை ஏற்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வலியுறுத்திக் கூறியிருப்பது மாநிலங்களுக்கு அழுத்தம் கொடுப்பது ஆகாதா?
– சா.சத்தியமூர்த்தி, கரூர்.
பதில் 2: மறுபரிசீலனை செய்ய வேண்டியது – மாநில அரசுகள் அல்ல; ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி நடந்து, வாக்களித்த மக்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கும் ஒன்றிய அரசே தனது பிடிவாத குணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
- • • •
கேள்வி 3: டில்லியில், மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டிருப்பது டில்லிவாழ் தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் அல்லவா?
– இரா.அலமேலு, செங்குன்றம்.
பதில் 3: துயரத்திற்கு கைகொடுப்பது ‘திராவிட மாடல்’ அரசு; தொப்புள் கொடி உறவுகளை மறந்துவிடாத கருணை அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி என்பதற்கான சான்று!
- • • •
கேள்வி 4: பாட்டாளி மக்கள் கட்சியை பலவீனப்படுத்த தி.மு.க. சூழ்ச்சி செய்வ
தாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியிருப்பது வேடிக்கையான விபரீதமான குற்றச்சாட்டு என்று கருதலாமா?
– சீதாலட்சுமி, திண்டிவனம்.
பதில் 4: எப்படி சிரிப்பது என்றே மக்களுக்குத் தெரியவில்லை. அவரின் பிரச்சினையை திசைதிருப்பும் அபத்த உளறல் – ஆதாரமில்லாதது.
- • • •
கேள்வி 5: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ராக்கெட் வேகத்தில் இயங்கி வருகிறது. இது கம்பராமாயணம் போல கட்டுக்கதை அல்ல, நிதர்சனம் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியிருப்பதை கையொலி எழுப்பி வரவேற்கலாம் அல்லவா?
– த.மகிழினி, தஞ்சாவூர்.
பதில் 5: பலத்த கைத்தட்டலுடன், பகுத்தறிவு உணர்வுடன் வரவேற்று மகிழலாம்.
- • • •
கேள்வி 6: மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது, மக்கள் மத்தியில் இப்போதே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருப்பது எதைக் காட்டுகிறது?
– கே.அறிவழகன், பாலக்கோடு.
பதில் 6: உண்மையான மக்கள் நல ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பதையே காட்டுகிறது!
- • • •
கேள்வி 7: “பெண்களை மதிக்கவும், அவர்களுக்கு சம உரிமை வழங்கவும் வீட்டில் ஆண் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்” என்ற தந்தை பெரியாரின் கூற்றை, சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியிருப்பது ஆண்-பெண் பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை வென்றெடுக்க பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கலாமா?
– ச.தேன்மொழி, தியாகராயர் நகர்.
பதில் 7: நிச்சயமாக. தந்தை பெரியார் அறிவுரை – அறவுரை – பொது ஒழுக்கச் சிதைவை எங்கும், எதிலும் தடுத்து நிறுத்தி, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் அற்புத அனுபவ ஆழ் உரை அல்லவா!
- • • •
கேள்வி 8: உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் அரசுப் பணியாளர் நியமனத்தில் சமூக நீதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் தமிழ்நாடு அரசு குழு அமைத்திருப்பது பயன் அளிக்கக்கூடிய வகையில் இருக்குமா?
– ம.பூபதி, தருமபுரி.
பதில் 8: உறுதியாக – அதில் தெளிவும், சட்ட நெறியும், மனித நேயமும் உள்ள ஒரு நீதிபதி தலைமையில் அமைந்த இக்குழு மூலம் சமூகநீதி நிச்சயம் தழைக்கும்!
- • • •
கேள்வி 9: “பிரதமர் மோடிக்கு 35ஆவது முறையாக வெளிநாடு செல்ல நேரம் உள்ளது. ஆனால், மக்களின் துயரம் தணியாமல் தொடரும் மணிப்பூருக்குச் செல்ல நேரம் இல்லையா?” என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி இருப்பது பிரதமர் மோடியின் செவிகளுக்குப் போய்ச் சேருமா?
– அ.சின்னப்பொண்ணு, நாகர்கோயில்.
பதில் 9: சேருமா என்பதில் உங்களைப் போலவே நமக்கும் சந்தேகம் உண்டு!
- • • •
கேள்வி 10: பேறுகால விடுமுறைக்குப் பின்னர் குழந்தையைப் பராமரிக்க வசதியாக 209 பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய இடத்துக்குப் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. ‘திராவிட மாடல்’ அரசின் இந்தத் தாயுள்ளத்தைப் பாராட்டுவது அனைவரின் கடமை அல்லவா?
– செல்வி பாபு, மதுரை.
பதில் 10: “நன்றி என்பது பலனடைந்தவர்கள் காட்ட வேண்டிய உயர் பண்பு” என்றார் தந்தை பெரியார். எனவே, அந்தப் பெண் காவலர்கள் மட்டுமின்றி மனிதநேயர்களும், நிச்சயம் நன்றி உணர்வுடன் பாராட்டுவார்கள்.