அறிய வேண்டிய அம்பேத்கர்

Viduthalai
6 Min Read

சூத்திரர்கள் – எதிர்ப்புரட்சி

இது ஓர் இருபத்தியொரு பக்க தட்டச்சுப் படி ‘சூத்திரர்களும் எதிர்ப்புரட்சியும்’ என்ற தலைப்பை முகப்பில் தாங்கியுள்ள இது, அடுத்த பக்கத்திலும் அதனையே தலைப்பாகக் கொண்டுள்ளது. இந்த இயலின் பக்கங்கள் அனைத்தும் இணைத்துக் கட்டப்பட்ட உதிரித் தாள்களாவே இருந்தன. கெடுவாய்ப்பாக, 21 பக்கங்கள் மட்டுமே நமக்குக் கிடைக்க, பிற பக்கங்களை நாம் இழந்துவிட்டதாகவே தோன்றுகிறது. – ஆங்கிலப் பதிப்பாசிரியர்கள்.

மனுதருமக் கோட்பாடுகள், இந்துக்களின் உளநிலையை உருவாக்கியவை என்ற முறையிலும், இன்றும் என்றும் இந்து சமூகத்தின் தனிப்பெரும் எண்ணிக்கையினரான சூத்திரர்கள்பால் இந்துக்களின் நடைமுறைப் போக்கை வரையறுத்தவை என்ற காரணத்தாலும், இவை நமது ஆர்வத்துக்கு உரியவையாகின்றன. இக்கோட்பாடுகள், சூத்திரர்களின் வகுப்பினருக்கு மனுவால் அளிக்கப்பட்ட தகுதிநிலை பற்றி வாசகர்கள் முழுமையாக அறிந்து கொள்ளும் பொருட்டுத் தனித்தனி தலைப்புகளின் கீழ் இங்கு விளக்கப்படுகின்றன.

பார்ப்பன, சத்திரிய, வைசிய குலங்களைச் சார்ந்த இல்லறத்தோருக்கு மனு பணிக்கிறார்:

4:61. “சூத்திரர் ஆளுகையின் கீழ் உள்ள நாட்டின் குடிமகனாக ஒருவன் வாழுதல் வேண்டா.”

ஒரு சூத்திரர் மதிப்புக்குரியவராக ஏற்கப்படுவது ஆகாது. மனுவின் விதி இதோ:

11:24. “வேள்வி செய்தல்வேண்டி, அதாவது மத செயல்களுக்காக, ஒரு பார்ப்பனர் சூத்திரரின் சொத்திலிருந்து இரக்கக்கூடாது. சூத்திரர்களுடன் அனைத்துத் திருமண உறவுகளும் தடை செய்யப்பட்டவை. மற்ற மூன்று குலப்பெண்களுடன் சூத்திரர் மண உறவு கொள்ளக்கூடாது. ஒரு சூத்திரர் மேல்குலப் பெண்களுடன் எத்தகைய தொடர்பும் கொள்ளக்கூடாது. அவர் மேல்குலப் பெண்டிருடன் திருமணத்துக்குப் புறம்பான உறவு கொள்வது மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.”

8:374. “பாதுகாக்கப்பட்டோ (பாதுகாக்கப்பட்டவள் என்றால் உறவினரின் பாதுகாப்பில் இருப்பவள் என்று பொருள், பாதுகாப்பு இல்லாதவள் என்றால் தனியாக வசிப்பவள் என்று பொருள்.) அல்லது பாதுகாப்பு இல்லாமலோ வாழும் மேல்குலப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட ஒரு சூத்திரர், தண்டிக்கப்படவேண்டிய முறையாவது”:

தனித்து வாழும் பெண்ணிடம் அவர் குற்றம் இழைக்கும்போது குற்றத்தோடு தொடர்புடைய தன் உறுப்பை இழக்கிறார். அவள் சுற்றத்தோடு வாழ்பவளாயின் அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு மரண தண்டனை அவருக்கு அளிக்கப்பட வேண்டும்.

பணிப் பாகுபாடு பற்றி மனு விதிப்பதாவது:

8:20. “பிறப்பால் மட்டுமே பார்ப்பனரான ஒருவர், அதாவது வேத நூல்களைக் கற்காத அல்லது வேதங்கள் கூறும் செயல்முறைகளைக் கடைப்பிடிக்காத ஒருவர், ஆளும் மன்னன் விரும்பின், சட்டங்களுக்கு விளக்கமளிக்கலாம். அதாவது, நீதிபதியாகச் செயலாற்றலாம். அப்பணியை ஒரு சூத்திரர் (அவன் எத்துணைக் கற்றோனாயினும்) ஒருக்காலும் செய்தல் ஆகாது.”

8:21. “சூத்திரனை, சட்டப்பொருள் கூறுவோனாகக் கொண்ட ஓர் அரசு, சதுப்பு நிலத்தில் சிக்கிய பசுபோல ஆழ்ந்து மூழ்கிவிடும்.”

8:272. “ஒரு சூத்திரர் இறுமாப்புடன் தகாத துணிவால் பார்ப்பனருக்கு மதத்தைப் போதிக்க முற்படுவாராயின் அந்தச் சூத்திரரது வாயிலும் செவிகளிலும் கொதிக்கும் எண்ணெயை அரசன் ஊற்ற வேண்டும்’.

கற்றறிதல் பற்றி மனு கீழ்க்கண்டவாறு வகுத்தமைக்கிறார்:

3:156. “சூத்திர மாணாக்கருக்குக் கல்வி கற்பிப்போரும், சூத்திரரை ஆசிரியராகக் கொண்டவரும், சூத்திரருக்குத் தகுதி அளித்தமையால், தனது தகுதியை இழந்தவர் ஆகிறார்.”

4:99. “சூத்திரர் முன்னிலையில் வேதங்களை ஒருபோதும் படித்தல்கூடாது.”

மனுவுக்குப் பின்வந்தோர், சூத்திரர் வேதம் பயிலுதலுக்கு மிகக் கொடுமையான தண்டனையை விதித்தனர். எடுத்துக்காட்டாக, வேதம் ஓதுகையில் ஒரு சூத்திரர் அதனை (ஒளிந்து நின்றோ, தற்செயலாகவோ) காதால் கேட்டிருந்தால், அல்லது வேதத்தில் பயின்ற ஒரு சொல்லை ஓதத் துணிந்தால், மன்னன் அவரது நாவினை இரண்டாகத் துண்டித்து, அவரது செவிகளில் வெம்மையான உருக்கிய ஈயத்தை ஊற்ற வேண்டும் எனக் காத்யாயனர் விதி செய்கிறார்.

சூத்திரரது சொத்துரிமை பற்றி மனு வரையறுப்பதாவது:

10:129. “ஒரு சூத்திரர், அவருக்கு அதற்காகத் திறமையிருப்பினும், தேவைக்கு மிகுதியான செல்வம் ஈட்டல் கூடாது. ஏனெனில், கீழ்ப்படிதல் நிலையிலுள்ள ஒருவரிடம் செல்வம் கொழிக்க, அவர் இறுமாப்பு வசப்பட்டு, செருக்காலும் புறக்கணிப்பு மனப்பான்மையாலும் பார்ப்பனருக்குத் துன்பம் இழைப்பார்.”

8:417. “ஒரு பார்ப்பனர் பிழைப்பாதாரம் குன்றித் துன்புறுங்கால் அவர் தயக்கமின்றி ஒரு சூத்திரருடைய பொருள்களைக் கையகப்படுத்திக்கொள்ளலாம்.”

சூத்திரருக்கு உரிய வாழ்க்கைத் தொழில் ஒன்று மட்டுமே.இது மனுவின் அசைக்க முடியாத விதியாகும். மனு கூறுகிறார்:

1:91.”சூத்திரருக்கு இறைவன் வகுத்துரைத்துள்ள வாழ்க்கைத் தொழில் ஒன்றே. அது மற்ற மூன்று குலங்களுக்கும் (பார்ப்பனர், சத்திரியர், வைசியர்) பணிந்து ஏவல் புரிவது.”

10:121. “(பார்ப்பனருக்குப் பணி செய்வதால் தன் பிழைப்புக்கு வழியற்ற நிலையில்) ஒரு சூத்திரர் பிழைப்பாதாரம் வேண்டின், சத்திரியருக்குப் பணிசெய்யலாம் அல்லது செல்வந்தரான வைசியருக்குப் பணி செய்யும் முகத்தான் தன் வாழ்வுக்கு வழி தேடலாம்.”

10:122. “எனினும், அவர் மேலுலக இன்பத்திற்காகவோ, அல்லது இவ்வுலக, மேலுலக நன்மை இரண்டிற்காகவோ பார்ப்பனருக்கு ஏவல் புரிதல் வேண்டும். ஏனெனில் பார்ப்பனருக்கு ஏவலரான ஒருவர் தனக்கு வேண்டிய அனைத்தும் பெறுகிறார்.”

10:123. “இவ்வேவல் பணியே ஒரு சூத்திரருக்குப் பெருமை மிக்கது. அவர் புரியும் வேறு எந்தத்தொழிலும் பலன் தருவது அன்று.”

சூத்திரருடைய சேவையை மனு தன்னுரிமை சார்ந்த ஒப்பந்தமாக விட்டுவிடவில்லை. சூத்திரர் ஏவல் புரிய மறுத்தால் அவரைக் கட்டாயத்திற்குட்படுத்தும் நிபந்தனையும் (மனுவில்) உண்டு, அதாவது:

8:413. “ஒரு பார்ப்பனர் சூத்திரரின் பணியை (விலை கொடுத்தோ அன்றியோ) கட்டாயப்படுத்திப் பெறலாம். ஏனெனில் சூத்திரர் பார்ப்பனருக்கு ஏவல் செய்யவே படைக்கப்பட்டுள்ளனர்.”

10:124. “ஒரு சூத்திரரின் திறமை, உழைப்பின் தன்மை, அவரைச் சார்ந்துள்ளோரின் எண்ணிக்கை இவற்றைக் கணக்கில் கொண்டு பார்ப்பனர் அவருக்குத் தங்களுடைய குடும்பச் சொத்திலிருந்து பிழைப்பூதியம் வழங்க வேண்டும்.”

10:125. “எஞ்சியுள்ள தம் உணவையும், பழைய வீட்டுத் தட்டுமுட்டுப் பொருள்களையும் பார்ப்பனர் சூத்திரருக்குத் தர வேண்டும்.”

ஒரு சூத்திரர் மற்ற மூன்று குலத்தாருக்கும் சொல்லிலும் செயலிலும் பணிவுடன் சேவை செய்ய வேண்டும் என்பது மனுவின் சட்டம்…

8:270 “நயமற்ற வன்சொல் உரைத்து இருபிறப்பாளரை அவமதிக்கிற ஒரு சூத்திரருடைய நா துண்டிக்கப்பட வேண்டும். ஏனெனில் சூத்திரர் இழிபிறப்பினர்.”

8:271. “இரு பிறப்பாளர்களுடைய பெயர்களையோ குலத்தையோ ஒரு சூத்திரர் அவமதிக்கும் போக்கில் குறிப்பிட்டால், பத்து விரல் நீளமுள்ள இரும்பாணியைப் பழுக்கக் காய்ச்சி அவரது வாயில் செலுத்த வேண்டும்.”

மனு இத்தோடு மனநிறைவடையவில்லை. சூத்திரருடைய அடிமை நிலையானது அன்னாருடைய பெயர்களிலும், குடும்பப் பெயர்களிலும், வெளிப்பட வேண்டுமென்பது அவர் விருப்பம். அவர் கூறுவதாவது:

2:31. “ஒரு பார்ப்பனருடைய முதற்பெயர் புனிதத்துவம் உள்ள ஒன்றைக் குறிக்கட்டும்; சத்திரியருடையது திறனைக் குறிக்கட்டும்; வைசியனுடையது செல்வத்தைக் குறிக்கட்டும், சூத்திரருடையது இழிபொருள் ஒன்றைச் சுட்டட்டும்.”

2:32. “ஒரு பார்ப்பனர் பெயரின் இரண்டாம் பகுதி மகிழ்வைக் குறிக்கட்டும். சத்திரியருடையது பாதுகாப்பையும், வைசியருடையது செழிப்பையும் வெளிப்படுத்தட்டும். சூத்திரருடையது தொண்டூழியத்தைச் சுட்டட்டும்.”

மனுவிற்குமுன் சூத்திரர் நிலை என்ன? மனு அவர்களை ஆரியரல்லாத அந்நிய மக்களாக, ஆரியருக்குரிய சமூக, மதச் சலுகைகளுக்கு உரிமையற்றவராகப் பார்க்கிறார். கெடுவாய்ப்பாக, சூத்திரர் ஆரியரல்லாதவர் என்ற கருத்து எளிய மக்களால் மிக எளிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இக்கருத்துக்கு பண்டைய ஆரிய இலக்கியத்தில் மிகச்சிறிய அடிப்படைகூட இல்லை என்பது தெளிவு.

பல்வேறு சமூகப் பிரிவுகள், குழுக்கள் பற்றிப் பண்டைய ஆரிய மத இலக்கியங்கள் பேசுகின்றன. முதல் நிலையில் நாம் காண்பது, பார்ப்பனர், சத்திரியர், வைசியர்,சூத்திரர் இவர்களின்றி 1) அசுரர், 2) சுரர் அல்லது தேவர்,3) யட்சர், 8) நிஷாதர் ஆகியோரும் காணப்பட்டனர். நிஷாதர்கள் அநாகரிக, 4) கந்தர்வர், 5) கின்னரர்,6) சாரணர்,7) அஸ்வினிகள், காட்டில் வாழும் தொல்குடியினர். சுந்தர்வர், யட்சர், கின்னரர், சாரணர், அஸ்வினிகள், ஆஷ்வினர் ஆகியோர் தொழில்முறைப் பிரிவினரேயன்றி சமூகப் பிரிவினர் அல்லர். அசுரர் எனும் சொல் பல்வேறு பண்டைய இனமரபுக் குழுக்களான தைத்தியர், தனவாசர்கள், தசியூகள், காலாநஞ்சர், கலெயர், காளிர்கள், நாகர், நிவாதகவசர், பாலோமர், பிஸாசர், ராட்சசர்கள் ஆகியோரைச் சுட்டிய ஒரு பொது இனப்பெயர்.சுரர்களும், தேவர்களும் அசுரர் போன்று இனமரபுக் குழுக்களா என்பது நமக்கு அறியக்கிடைக்கவில்லை. தேவகுலத்தின் தலைவர்களாக பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், சூரியன், இந்திரன், வருணன், சோமன் ஆகியோரை நாம் நன்கு அறிந்திருக்கிறோம்.

தொடரும்

– அண்ணல் அம்பேத்கர்
‘இந்து மதம்: வரலாறு – ஆய்வு’  நூலிலிருந்து

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *