பெங்களூரு, ஜூன் 19- மாந்த்ரீக பூஜை என்று சொல்லி பெங்களூரு பெண்ணை நிர்வாணமாக வரச் சொன்ன கேரளாவை சேர்ந்த இரு அர்ச்சகர்கள், தங்களுடன் உறவு வைத்தால்தான் பூஜை செய்வோம் என அந்த பெண்ணை கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவே, அவரை பாலியல் வல்லுறவு செய்யவும் முயன்றதாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூர் பெல்லந்தூர் காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் 38 வயதுடைய பாதிக் கப்பட்ட இந்தப் பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவருடைய கணவர் இறந்துவிட்டார்.
இதனால் தனது இரு குழந்தைகளை வளர்க்கவும் அவர்களை ஆளாக்கவும் அவர் மிகவும் சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்ஸ்டா கிராமில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த போது கேரளாவில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று மாந்த்ரீக பூஜை செய்தால் குடும்ப பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்ற காணொலி இருந்ததை பார்த்துள்ளார்.
எ(த்)தை தின்றால் பித்தம் தெளியும் என தேடிக் கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு இந்த விளம் பரத்தை பார்த்ததும் ஒரு நம்பிக்கை பிறந்தது. இதனால் கேரள மாநிலத்தில் உள்ள அந்த கோயிலுக்கு அந்த பெண் நேரில் சென்றுள்ளார்.
பெண்ணுடன் பழக்கம்
அப்போது அங்கிருந்த அர்ச்சகர் அருணுடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் , உங்களுக்கும் உங்களது குழந்தைகளுக்கும் பில்லி, சூனியம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாந்த்ரீக பூஜை செய்ய வேண்டும். இதற்கு ரூ 24 ஆயிரம் செலவாகும் என அந்த பெண்ணிடம், அந்த அர்ச்சகர் தெரிவித்தாராம்.
அலைபேசி
இதையடுத்து ஊருக்கு போய் பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு வருவதாக அந்த பெண் கூறிய நிலையில் தனது அலைபேசி எண்ணை அருணிடம் கொடுத்துவிட்டு பெங்களூருக்கு சென்றுவிட்டார். அது முதல் அந்த பெண்ணின் அலைபேசிக்கு காணொலி அழைப்பில் வந்த அருண், மாந்த்ரீக பூஜை செய்ய வேண்டும் என்றால் நிர்வாணமாக நிற்க வேண்டும் என்றாராம்.
அதிர்ச்சி அடைந்த பெண்
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மறுத்துள்ளார். இதனால் அர்ச்சகர் அருண், நான் சொல்வது போல் செய்யாவிட்டால், பில்லி சூனியத்தால் உங்கள் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து என மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண்ணும் வேறு வழியின்றி குழந்தைகளுக்காக காணொலியில் வந்தார்.
இதை தனது அலைபோனில் அருண் காணொலியாக எடுத்துக் கொண்டுவிட்டார். பின்னர் அந்த பெண்ணை எப்படியாவது அடைய வேண்டும் என நினைத்த அருண், கேரளாவுக்கு வந்தால் பூஜையை செய்து பிரச்சினையை சரி செய்கிறேன் என்றாராம். இதையும் நம்பிய அந்த பெண், கேரளாவுக்கு தனியாக சென்றுள்ளார்.
கோயிலில் சில பூஜைகளை செய்வது போல் பாவனை செய்த அர்ச்சகர் அருண், அந்த பெண்ணை மற்றொரு அர்ச்சகர் உன்னி தாமோதரனுடன் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு காரில் அழைத்துச் சென்றனராம். அங்கு வைத்து தங்களுடன் உடலுறவில் ஈடுபட்டால்தான் மாந்த்ரீக பூஜை நிறைவு பெறும் என தெரிவித்துள்ளாராம்.
இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மறுத்துள்ளார். உங்கள் குழந்தைகளின் நலனுக்காக இந்த முடிவை நீங்கள் எடுத்துத்தான் ஆக வேண்டும் என அருண் மீண்டும் மிரட்டியுள்ளார். அப்படியும் அந்த பெண் மறுத்துவிட்டார். இதனால் வேறு வழியில்லாமல் அந்த பெண்ணை வல்லுறவு செய்ய அருண் முயற்சித்தார். அவர்களிடம் தப்பிக்க பெண் முயன்ற நிலையில், இருவரும் சேர்ந்து அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறி பிறகு அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் கேரளாவில் இருந்து பெங்களூர் வந்த அந்த பெண், நடந்த சம்பவங்களை பெல்லந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நிர்வாண காணொலியை காட்டி அருணும், உன்னியும் தன்னை மிரட்டுவதாக புகார் கொடுத்தார். இதையடுத்து காவல் துறையினர் விசாரணை செய்து அருணை கைது செய்து, அவரிடம் இருந்த அலைபேசியை பறிமுதல் செய்தனர். அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள உன்னி தாமோதரனை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.