மனித உடலில் பல்வேறு நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. அவை நமக்குப் பல நன்மைகள் செய்கின்றன. சமீபத்திய ஆய்வு ஒன்றில், தோலில் இருக்கும் நுண்ணுயிரிகள் சூரியனில் இருந்து வரும் ஆபத்தான கதிர்களிலிருந்து நம்மைக் காப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சூரியனிலிருந்து வரும் யுவிபி (UVB) -என்ற அல்ட்ரா வைலட் பி ரேஸ் என்பவை நம் தோலில் படும்போது ‘சிஸ் யுரோகேனிக்’ அமில மூலக்கூற்றை உருவாக்குகிறது. இது நம் தோலின் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும். இதனால் சாதாரண தோல் நோய்களில் இருந்து புற்றுநோய் வரை ஏற்படலாம். ஆனால், தோலில் வாழும் ஸ்டபைலோகாகஸ் எபிடெர்மிஸ் முதலிய சில பாக்டீரியாக்கள், யுரேகேனேஸ் எனும் நொதியை உற்பத்தி செய்து, யுரோகேனிக் அமிலத்தை நச்சு இல்லாத அமிலமாக மாற்றுகின்றன. இதனால் யுவிபி கதிர்வீச்சால் ஏற்படும் தோல் நோய்கள் குறைகின்றன.
இதை உறுதிசெய்ய ஆய்வாளர்கள் எலிகளைப் பரிசோதித்தனர். எலிகளின் உடல் ரோமங்களை மழித்து, தோல் மீது சிஸ் யுரோகேனிக் அமிலத்தைப் பூசினர். சிறிது நேரத்திலேயே ஸ்டபைலோகாகஸ் எபிடெர்மிஸ் பாக்டீரியா அமிலத்தை உட்கொண்டு, அதை ஆபத்தற்ற சேர்மமாக மாற்றியது.
இந்த ஆய்வின் மூலம் தோலில் வாழும் பாக்டீரியா நமக்கு எவ்வளவு அவசியமானவை என்று தெரியவந்துள்ளது. வருங்காலங்களில் தோல் நோய்களுக்கான மருந்தை உருவாக்க இந்த ஆய்வு நமக்கு உதவும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.