ஜனநாயக போர்க்களத்தில் மதவெறி பிஜேபியை வீழ்த்துவோம் இந்தியாவின் பன்முகத் தன்மையை காத்திடுவோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

Viduthalai
5 Min Read

அரசு, தமிழ்நாடு

திருவாரூர், ஜூன் 22 –  மதவெறி கொண்ட பிஜேபியை வீழ்த்துவது ஒன்றே இந்தியா வின் பன்முகத் தன்மையை காத்திடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

தொண்டர்களுக்கு எழுதிய கடித வாயிலாக அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 ஒரு நூற்றாண்டுக்கு முன் உதித்த திராவிடச் சூரியன் நம் தலைவர் கலைஞர். 14 வயதிலிருந்து தன் போராட்டக் கதிர்களை வீசி, தமிழ்மொழியையும் தமிழினத் தையும், தமிழ்நாட்டையும் கடைசிவரை ஒளி திகழச் செய்த சூரியன் அவர். சின்ன கிராமமான திருக்குவளையில் பிறந்து, சிறிய நகரமான திருவாரூரில் வளர்ந்தவர். தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் கொள்கை வழி ஏற்றுக் கொண்டு, அவர்கள் காட்டிய பாதையில் பொதுவாழ்வுப் பயணத்தை மேற் கொண்டவர். 13 தேர்தல் களங்களில் தோல்வியே காணாமல் வெற்றிகண்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பொறுப்பேற்று, இந்திய அரசியலின் மூத்த தலைவராக விளங்கியவர் முத்தமி ழறிஞர் கலைஞர். அவரை எதிர்காலத் தலைமுறை அறிந்து கொள்ள வேண் டியது அவசியம். தளராத முயற்சியுடன், திட்டமிட்ட இலக்கு நோக்கி, அயராது உழைத்தால் எளிய மனிதனும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும் என்ற நம்பிக் கையைப் பெறுவதற்கும் திருவாரூரில் உயர்ந்து நிற்கிறது கலைஞர் கோட்டம்.

அமைச்சர் எ.வ.வேலு மேற்பார்வையில்

பொதுப்பணித்துறை – நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு  ஒட்டுமொத்த கோட்டத்தின் கட்டு மானத்தையும் கவனமுடன் மேற்பார் வையிட்டு அதன் எழிலை உறுதி செய்திருக்கிறார்.

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு – வர்த் தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் விழா நாளில் ஒருங்கிணைப்புப் பணிகளை நல்ல முறையில் மேற்கொண் டார். திருவாரூர் மாவட்ட கழக நிர் வாகிகள், பிற மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் எனப் பலருடையை ஒத் துழைப்பும்  விழாவை வெற்றிகரமாக்கியது. திருவாரூர் சகோதரிகளின் மங்கல இசை, கவிப்பேரரசு வைரமுத்து தலைமையிலான கவியரங்கம், நடுவர் சாலமன் பாப்பையா தலைமையிலான பட்டி மன்றம், இன்னிசை வழங்கிய மாலதி லட்சுமண் குழுவினரின் பாட்டரங்கம் எனக் காலையில் தொடங்கி, மாலைவரை முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முகத் தன்மையை எடுத்துரைத்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தேன் சுவை!

நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று, பீகார் மாநில துணை முதலமைச்சர்  தேஜஸ்வி அவர்கள் வருகை தந்து திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்று சிறப் பித்ததுடன், இந்தியாவின் ஜனநாய கத்தையும் பன்முகத்தன்மையையும் காப்பதற்கு முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்க்கை எப்படி துணையாக நின்று வழிகாட்டுகிறது என்பதை விளக்கினார். உடல்நலக்குறைவால் அன்பிற்குரிய பீகார் முதலமைச்சர்  நிதீஷ்குமார் அவர் களால் வர இயலாவிட்டாலும், தன் உள்ளத்து உணர்வுகளையெல்லாம் உரையாக எழுதி, இந்திய அரசியல் களத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் இன்றும் எப்படி வழிகாட்டியாகத் திகழ்கிறார் என்பதை விளக்கியிருந்தார். அதன் தமிழாக்கத்தை திருச்சி சிவா எம்.பி.,   உணர்வுப்பூர்வமாக உடன் பிறப்புகளிடம் எடுத்துரைத்தார்.

கலைஞர் கோட்டத்தைத் திறக்கின்ற பெரும் வாய்ப்பு எனக்கு வாய்த்த நிலையில், கோட்டத்தினைப் பார்வையிட்ட சிறப்பு விருந்தினர்கள், தி.மு.க. கழக நிர்வாகிகள் எல்லாரும் கண்கள் விரிந்திட, கலைஞரின் பேராற்றலைக் கண்டு வியந்தனர். ‘சாதாரண மனிதர் களிடமிருந்துதான் ஒரு சகாப்தத்தின் விடிவுக்கான ஒளி கிளம்புகிறது’ என்கிற தலைவர் கலைஞரின் பொன்மொழியே அவரது வாழ்க்கையாகவும் அவரது நூற் றாண்டு செய்தியாகவும் அமைந்திருப் பதை அருங்காட்சியகத்தில் உள்ள புகைப்படங்கள் – ஆவணங்கள் வாயிலாக அறிகின்ற யார்தான் ஆச்சரியப்படாமல் இருக்க முடியும்?

அறிவியல் வளர்ச்சி 

காலத்திற்கேற்ற அறிவியல் வளர்ச் சியை கவனத்தில் கொண்டு செயல்பட்டவர் கலைஞர்.  நாடகம் முதல் ஊடகம் வரை அவரது படைப்புகள் தொடர்ந்தன. பேருந்து முதல் மெட்ரோ ரயில்வரை அவரது திட்டங்கள் தொடர்ந்தன. உழவர் சந்தையும் தந்தார்; டைடல் பார்க் கும் தந்தார். அவரது கோட்டத்திலும் நவீனத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான செல்ஃபி பாயிண்ட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இரண்டு நாற்காலிகள் காலியாக இருக்கும். ஒரு நாற்காலியில் நாம் உட்கார்ந்து, பக்கத்தில் உள்ள நாற்காலியைப் பார்த்து வணங்கலாம், புன்னகைக்கலாம். அந்த நொடியில் எடுக்கப்படும் ஃபோட்டோ, சில நொடிகளில் பிரிண்ட் போடப்பட்டு நம் கைக்கு வரும்போது, நமக்கு பக்கத்தில் கலைஞர் உட்கார்ந்திருப்பார். Augmented Reality என்ற புதிய தொழில்நுட்பத்தின் விளைவு இது.

கலைஞரை நேரில் பார்க்க வாய்ப் பில்லாத தலைமுறையினர், இந்தக் கோட்டத்திற்கு வந்து அவரது வாழ்க்கை வரலாற்றை, சளைக்காத போராட்டத்தை, தொலைநோக்குத் திட்டங்களை, நிகரற்ற படைப்பாற்றலைத் தெரிந்து கொள்ளும் போது, இப்படிப்பட்ட அற்புதத் தலை வரைப் பார்க்காமல் போய்விட்டோமே என்ற ஏக்கத்தைத் தணிக்கும் வாய்ப்பு இது.

பள்ளி – கல்லூரி மாணவச் செல்வங்கள், இளைஞர்கள், பெண்கள் என அனை வரும் திருவாரூர் திருத்தலத்தில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தை ஒரு முறையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும். நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் 80 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வை அறிந்திட வேண்டும். முத்தமிழறிஞர் பிறந்து – வளர்ந்த காலத்தில் திருவாரூர் எப்படி இருந்தது, இன்று அந்த நகரம் மாவட்டத் தலை நகராக்கப்பட்டு, மத்திய பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பல்வேறு கட்டமைப்புகளைக் கொண்ட தாக வளர்ச்சியடைந்திருப்பதற்கு கார ணம் தலைவர் கலைஞர்தான் என்பதை கோட்டத்திற்கு வருகின்ற ஒவ்வொரு வரும் உணர்ந்து கொள்ள முடியும். தி.மு.கழக உடன்பிறப்புகள் தங்களுக்கு நேரம் வாய்க்கும் போது மட்டுமல்ல, நேரத்தை ஒதுக்கி ஒரு முறையேனும் கலைஞர் கோட்டத்தைக் காண வேண்டும். கோட்டத்தைக் காணும்போது உடன்பிறப்புகளின் உள்ளத்தில் உத்வேகம் பிறக்கும்.

அந்த உத்வேகத்தைக் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நாளில் நானும் பெற்றேன். கோட்டத்தில் உள்ள திருமண அரங்கில் நான்கு இணையர்களுக்கு சுயமரியாதைத் திருமணத்தை எளிய முறையில் நடத்தி வைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்த தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா கொள்கைகளுக்கு வலிமை சேர்த்தோம். கொள்கை வலிவும் இயக்க உணர்வும் பெருகிடத் திருவாரூர் திருத்தலத்தின் நிகழ்வுகளைத் தொடர்ந்து, பாடலிபுத்திரம் என வரலாற்றில் பெயர் பெற்ற பாட்னா நகருக்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டேன்.

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் நான் உரையாற்றியது போல, இந்தி யாவைக் காத்திட மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நிற்க வேண்டிய தருணம் இது. மதவெறி கொண்ட பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன் மையைக் காத்திடும். அதற்கான முன் னெடுப்பை பீகார் முதலமைச்சர் அன்பிற் குரிய நிதிஷ்குமார் மேற்கொண்டிருக் கிறார்.  ஜூன் 23-ஆம் நாள் பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், காலமெல் லாம் மதநல்லிணக்கக் கொள்கையை வலியுறுத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் பிரதிநிதியாக நான் பங்கேற்கிறேன். இந்திய ஒன் றியத்தின் ஒருமைப்பாட்டு உணர்வை – ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப் பதற்கான இந்த முன்னெடுப்பு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல விளைவைத் தரும் என்ற நம்பிக்கை மிகுந்திருக்கிறது.

கலைஞருக்குக் கோட்டம் கண்டோம். அவர் வழியில் ஜனநாயகப் போர்க் களத்தைச் சந்தித்து நாட்டு நலன் காண்போம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *