சென்னை, ஜூன் 18- மதுரை எய்ம்ஸ் என்னாயிற்று என கேட்டால், கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் தற்போதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படவில்லை. இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மாதிரி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதல் கட்டப் பணிகள் ஜனவரி 2026 இல் நிறைவடையும் என்றும் 2027ஆம் ஆண்டுக்குள் 2 ஆம் கட்ட பணிகள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் என்னாயிற்று என கேட்டால், கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;
மதுரைக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் எய்ம்ஸ் என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன்.
அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள்.
2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்து விட்டார்களா?
இந்த கற்பனை காட்சிகளை உருவாக்கவே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இவ்வாறு தெரிவித்துள்ளார்.