அண்ணாமலை மீது தமிழிசை சாடல்

viduthalai
3 Min Read

சென்னை, ஜூன் 18- அதிமுக குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்திருப்பது கட்சியின் கருத்து அல்ல என, பாஜக மேனாள் மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

“கூட்டணி குறித்து அமித்ஷா கூறியது தான் கட்சியின் நிலைப்பாடு. அதிமுக குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்திருப்பது அவரது சொந்த கருத்துதானே தவிர, கட்சியின் கருத்து கிடை யாது. அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அமித்ஷா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அதிகாரப்பூர்வமான தலைவர்கள் சொல்வதுதான் கட்சியின் கருத்து. அண்ணாமலை சொல்வது அவரது தனிப்பட்ட கருத்து. எனவே, தனிப்பட்ட கருத்துகளுக்கு நான் விமர்சனம் செய்வதில்லை. தேசிய  ஜனநாயக கூட்டணியில் இன்னும் யாரெல்லாம் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.” இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.17 கோடி மோசடி வழக்கு தொடர்பாக
அதிமுக மேனாள் அமைச்சர் மகன் கைது

சென்னை, ஜூன் 18- ரூ.17 கோடி மோசடி வழக்கு தொடர்பாக அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மகன் ராஜாவை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் மலேசியா தப்பி செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் காவல் துறையினர் மடக்கினர்.

சகோதரி புகார்

சென்னையை சேர்ந்தவர் பொன்னரசி (வயது 38). இவருடைய கணவர் அசோக்குமார். பொன்னரசி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் பரபரப்பு புகார் அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது;-

எனது தந்தை சண்முகநாதன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆவார்.தூத்துக்குடி அ.தி.மு.க.மாவட்ட செயலாளராக உள்ளார். எனது உடன்பிறந்த தம்பி ராஜா (35) தூத்துக்குடி மாநகராட்சியில் 59ஆவது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். அவர், மாநகராட்சியில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

ராஜாவும், அவருடைய மனைவி அனுஷாவும் சேர்ந்து பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்தால் 16 சதவீதம் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார்கள். எனது கணவருக்கு சிறீபெரும்புதூர், நந்தம்பாக்கம் பகுதியில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை அடமானமாக வைத்து வங்கி மூலம் எனது தம்பி ரூ.11 கோடி கடன் வாங்கினார்.

அந்த பணத்தை அவரது நிறுவனத்தில் முதலீடாக வைத்து கொண்டார்.மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் அவர் கல்குவாரி தொழில் தொடங்கப் போவதாக தெரிவித்தார். அதற்காக என்னுடைய 300 பவுன் தங்க நகைகளை அவருக்குத் கொடுத்தேன். அந்த நகைகளை அடமானமாக வைத்து கிடைத்த பணத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கல்குவாரி தொடங்குவதற்கு 40 ஏக்கர் நிலத்தையும் எனது தம்பி அவரது பெயரில் வாங்கினார்.

ரூ.17 கோடி மோசடி

மொத்தம் ரூ.17 கோடி அளவுக்கு எனது தம்பி என்னிடம் பணம் வாங்கி அவரது நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக கூறினார். என்னையும் அவரது நிறுவனங்களில் ஒரு பங்குத்தாரராக நியமித்திருந்தார். அந்த பங்குதாரர் பதவியை எனக்கு தெரியாமலேயே நீக்கி விட்டார். அதற்கு பதில் அவருடைய மனைவி அனுஷாவை பங்குதாரராக சேர்த்துள்ளார்.

அவரது நிறுவனங்களின் மொத்த இயக்குநராகவும் அனுஷா நியமிக்கப்பட்டுள்ளார். என்னிடம் ரூ.17 கோடி பணத்தை வாங்கி கொண்டு எனக்கு எந்தவித உரிமையோ, லாபத்தில் பங்கோ தரவில்லை. நான் முழுமையாக ஏமாற்றப்பட்டு விட்டேன். என் தம்பி ராஜா மீதும், அவருடைய மனைவி அனுஷா மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராஜா கைது

இந்த புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணைர் காயத்திரி மேற்பார்வையில் காவல்துறை ஆய்வாளர் கமல் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.ராஜாவை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இதை தெரிந்து கொண்ட ராஜா சென்னையில் இருந்து மலேசியாவுக்கு தப்பி செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்தார்.

அப்போது தனிப்படை காவல் துறையினர் அவரை மடக்கி கைது செய்தனர். தீவிர விசாரணைக்கு பின்னர் அவர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *