சிதம்பரம் நடராசர்கோவில் ஆனி திருமஞ்சன விழாவில் பக்தர்கள் தடையின்றி கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் இக்கோரிக்கையை முன் வைக்கின்றோம்.
சிதம்பரம் நடராசர் கோவில் பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு கடந்த 2022-ஆம் ஆண்டு அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்கின்றனர்.
கடந்த ஆனி திருமஞ்சனம் மார்கழி ஆருத்ரா விழாவின் போது கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 4 நாள்களுக்கு அனுமதி இல்லை என கோவில் தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதனால் சட்டம் – ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டது.
இந்நிலையில் சிதம்பரம் நடராசர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா வரும் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜுலை 1-ஆம் தேதி தேர் திருவிழாவும் 2-ஆம் தேதி ஆனி திருமஞ்சன தரிசன மும் நடக்கிறது. இதில் பக்தர்களின் நலன் கருதி 2-ஆம் தேதி நடக்கும் ஆருத்ரா தரிசன திருவிழா நேரத்தைமுன் கூட்டியே அறிவிக்க வேண்டும் அல்லது காலதாமதம் இல்லாமல் நடத்த பொது தீட்சிதர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இது தவிர கோவிலில் அவசர சிகிச்சை முதல் உதவி மய்யம் அமைக்க வேண்டும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் போது ஏற்ெகனவே நடைபெற்றது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை தவிர்த்திடும் பொருட்டு ஆருத்ரா தரிசனம் நடை பெறும் நாள்களில் பக்தர்கள் கனகசபை மீது ஏறி நடராசரை வழிபட தடை விதிக்க கூடாது என்று பொது தீட்சிதர்களுக்கு மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் இந்து சமய அறநிலையத் துறையும் அறிவுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யாசெந்தில்குமார் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஜோதி ஆகியோருக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
– ஜெமினி எம்.என். ராதா
நிறுவனத் தலைவர், தெய்வீகப் பக்தர்கள் பேரவை